|
||||||||
மூன்றாம் திருமுறை-92 |
||||||||
3.092.திருநெல்வேலி
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
3788 மருந்தவை மந்திர மறுமைநன்
னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே
சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன்
சொரிதரத் துன்றுபைம்பூம்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி
யுறை செல்வர்தாமே
3.092.1
நல்ல நெஞ்சமே! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக. அத்திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும். மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும். மறுமையில் நற்கதி தரும். மற்றும் உயிர்கள் அடைதற்கேற்ற பயன்கள் யாவும் தரும். போக்கமுடியாத துன்பத்தைப் போக்கும். அத்திரு நாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்க, நெருங்கியுள்ள, பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற மலர்களைப் பூக்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருள்கிற அருட்செல்வர் ஆவார்.
3789 என்றுமோ ரியல்பின ரெனநினை
வரியவ ரேறதேறிச்
சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும்
பலிகொளு மியல்பதுவே
துன்றுதண் பொழினுழைந் தெழுவிய
கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வேலி
யுறை செல்வர்தாமே
3.092.2
நெருங்கிய குளிர்ந்த சோலையில் நுழைந்து, செழித்து வளர்ந்துள்ள தாழம்பூவில் படிந்து தென்றல் காற்று வந்து வீசுகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் எப்போதும் ஒரே தன்மையுடையவர் என்று நினைப்பதற்கு முடியாதவர் ஆவர். அவர் இடபவாகனத்திலேறிச் செடிச்சியர் போன்ற தாழ்குலத்தோர் மனைதோறும் சென்று பிச்சை ஏற்கும் இயல்பும் உடையவர். அவரை வழிபடுவீர்களாக.
3790 பொறிகிள ரரவமும் போழிள
மதியமுங்கங் கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச்
சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி
யவர்மனங் கவர்வர்போலும்
செறிபொழி றழுவிய திருநெல்வேலி
யுறை செல்வர்தாமே
3.092.3
புள்ளிகளையுடைய பாம்பையும், ஒரு கூறாகிய இளம்பிறைச் சந்திரனையும் கங்கை என்ற சுருண்ட கூந்தலை யுடையவனையும் சடைமீது சுற்றி அணிந்து, வெண்மையான திருநீற்றைப் பூசி, பிறர் மயங்கும் வண்ணம் நடந்து, நல்ல கிளி போலும் இனிமையான சொற்களைப் பேசும் தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளின் மனத்தை வசப்படுத்தும் சிவபெருமான், நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வர் ஆவார். அவரை வழிபடுவீர்களாக.
3791 காண்டகு மலைமகள் கதிர்நிலா
முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங்
காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கண் மாளிகை
மீதெழு கொடிமதியம்
தீண்டிவந் துலவிய திருநெல்வேலி
யுறை செல்வர்தாமே
3.092.4
நெருங்கிய பெரிய மாடங்களிலும், மாளிகைகளிலும், மேலே கட்டப்பட்ட கொடிகள் சந்திர மண்டலத்தைத் தொட்டு அசைகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வரான சிவபெருமான், தரிசிப்பதற்கு இனிய மலை மகளான உமாதேவி ஒளிவிடும் பற்களால் புன்முறுவல் செய்து அருகிலிருந்தருளவும், பாம்பை ஆபரணமாக அணிந்து ஊருக்குப் புறம்பேயுள்ள சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டு நடனமாடுதலை விரும்புபவர். அவரை வழிபடுவீர்களாக.
3792 ஏனைவெண் கொம்பொடு மெழில்திகழ்
மத்தமு மிளவரவும்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர்
கொல்புலித் தோலுடையார்
ஆனினல் ஐந்துகந் தாடுவர்
பாடுவ ரருமறைகள்
தேனில்வண் டமர்பொழிற் றிருநெல்வேலி
யுறைசெல்வர் தாமே
3.092.5
தேன்பருக வண்டுகள் அமர்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான் பன்றியின் கொம்புடன், அழகிய ஊமத்த மலரையும், இளம் பாம்பையும், வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும், அணிந்த சடைமுடி உடையவர். கொல்லும் தன்மையுடைய புலித்தோலை ஆடையாக உடுத்தவர். கொல்லும் தன்மையுடைய புலித்தோலை ஆடையாக உடுத்தவர். பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியத்தால் திருமுழுக்காட்டப்படுபவர். அரிய வேதங்களை அருளியவர்.
3793 வெடிதரு தலையினர் வேனல்வெள்
ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியத
ளாடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர்
மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே
3.092.6
புதர்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான், மண்டையோட்டை மாலையாக உடையவர். சினமிகு வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர். விரிந்த சடையுடையவர். திருவெண்ணீறு அணிந்த மார்பினர். புலித்தோலாடை அணிந்தவர். கோபம் பொங்கும் பாம்பை அணிந்தவர், அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர். தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளை மயங்கும்படி செய்தவர். அவரை வழிபடுவீர்களாக.
3794 அக்குலா மரையினர் திரையுலா
முடியின ரடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய
சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு
வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே
3.092.7
வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசைக்கின்ற சோலைகளையுடைய, எல்லாத் திசைகளிலும் புகழ் பரவிய திரு நெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வராகிய சிவபெருமான், சங்குமணிகளைக் கட்டிவிளங்கும் இடையினையுடையவர். அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடைய தலைவர். அவரை மதியாது தக்கன் செய்த யாகத்தை அழித்த திறமையையுடையவர். செவ்வொளி படரும் சடையினர். அவரை வழிபடுவீர்களாக.
3795 முந்திமா விலங்கலன் றெடுத்தவன்
முடிகடோ ணெரிதரவே
உந்திமா மலரடி யொருவிர
லுகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழின் மந்திகள்
பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே
3.092.8
நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்ற, பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராகிய சிவபெருமான், பெருமை மிகுந்த கயிலை மலையை அந்நாளில் பெயர்ந்தெடுத்த இராவணனின் தலைகளும், தோள்களும் நெரியும் வண்ணம், சிறந்த மலர் போன்ற திருவடியின் ஒரு விரல் நகநுனியை ஊன்றி வருத்தினார். அவரை வழிபடுவீர்களாக.
3796 பைங்கண்வா ளரவணை யவனொடு
பனிமல ரோனுங்காணா
தங்கணா வருளென வவரவர்
முறைமுறை யிறைஞ்சநின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர
வரிவைய ராடல்பேணத்
திங்கணாள் விழமல்கு திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே
3.092.9
பசுமையான, வாள்போன்ற ஒளிபொருந்திய கூரிய கண்களையுடைய ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் பள்ளிகொள்ளும் திருமாலுடன், குளிர்ந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பிரமனும் முழுமுதற் பொருளான இறைவனைக் காணமுடியாமல், அழகிய கண்களையுடைய பெருமானே அருள்புரிக என்று அவரவர் தாம்தாம் அறிந்த முறையில் வணங்கும் வண்ணம் விளங்கும் சிவபெருமானே, அந்தணர்கள் ஒன்றுகூடி நால் வேதங்களைப் பாடவும், பெண்கள் நடனமாடவும், மாத விழாக்களும், நாள் விழாக்களும் நிறைந்துள்ள திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராவார். அவரை வழிபடுவீர்களாக.
3797 துவருறு விரிதுகி லாடையர்
வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென
நினையுமெம் மண்ணலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச்
சூளிகை மயில்களாலத்
திவருறு மதிதவழ் திருநெல்வேலி
யுறை செல்வர் தாமே
3.092.10
மருதந்துவரில் தோய்ந்த மஞ்சட் காவிஆடை அணியும் புத்தர்களும், வேடநெறி நில்லாத சமணர்களும் கூறுகின்ற புன்மொழிகளைப் பயனற்றன என்று நினையுங்கள். எம் தலைவராகிய சிவபெருமான், கண்டார் மனங்களைக் கவர்கின்ற, கொடி விளங்கும் மாளிகையின் நிலா முற்றத்தில் மயில்கள் நடமாட, அதனைக் காணத் தேவர்களும் வருகின்ற, சந்திரன் தவழ்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வம் ஆவார். அவரை வழிபடுங்கள்.
3798 பெருந்தண்மா மலர்மிசை யயனவ
னனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வேலி
யுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுண்
ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியாடக்
கெடு மருவினையே
3.092.11
பெரிய, குளிர்ந்த, சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனைப் போன்றவர்களான தாம் விரும்பும் கல்வியினால் மனம் பண்பட்ட, சிறந்த வேதங்களை உணர்ந்த அந்தணர்களை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமானைப் போற்றி, பொருந்திய நீர் நிலைகள் நிரம்பிய சீகாழி ஞானசம்பந்தன் பாடிய பாமாலைகளைப் பாடிப் பரவசத்துடன் ஆட, போக்க முடியாத வினைகளெல்லாம் அழிந்து போகும்.
திருச்சிற்றம்பலம்
3.092.திருநெல்வேலி |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|