|
||||||||
மூன்றாம் திருமுறை-95 |
||||||||
3.095.திருஇன்னம்பர்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்.
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
3820 எண்டிசைக் கும்புகழி ன்னம்பர் மேவிய
வண்டிசைக் குஞ்சடை யீரே
வண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார்
தொண்டிசைக் குந்தொழி லோரே 3.095.1
எட்டுத் திசைகளிலும் புகழ்பரப்பும் திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, வண்டு இசைக்கும் மலர்மாலை அணிந்த சடையுடைய சிவபெருமானே! வண்டிசைக்கும் மலர்மாலை அணிந்துள்ள சடையுடைய உம்மை வாழ்த்தும் அடியவர்கள் தொண்டு நெறியில் சிறப்புடன் நின்று மேம்படுவரே.
3821 யாழ்நரம் பின்னிசை யின்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்
ஆழ்துய ரருவினை யிலரே 3.095.2
யாழின் இனிய இசையை உடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நீண்ட தாழ்ந்த சடைமுடியுடைய சிவபெருமானே! நீண்டு தாழ்ந்த சடைமுடியுடைய உம்மைச் சார்ந்து பக்தியுடன் வழிபடுபவர்கள் பெருந்துன்பத்திலிருந்தும், அதற்குக் காரணமான அரிய வினையிலிருந்தும் நீங்கியவராவர்.
3822 இளமதி நுதலியொ டின்னம்பர் மேவிய
வளமதி வளர்சடை யீரே
வளமதி வளர்சடை யீருமே வாழ்த்துவார்
உளமதி மிகவுடை யோரே 3.095.3
பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையுடைய உமாதேவியோடு திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, குளிர்ச்சிபொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட சடையுடைய சிவபெருமானே! குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட சடையுடைய உம்மை வாயால் வாழ்த்தி வழிபடுவோர் பேரறிவுடையவராவர்.
3823 இடிகுர லிசைமுர லின்னம்பர் மேவிய
கடிகமழ் சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீரும கழறொழும்
அடியவ ரருவினை யிலரே 3.095.4
இடிக்குரல் போன்று ஒலிக்கும் முரசு, முழவு போன்ற வாத்தியங்கள் ஒலிக்க, திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, நறுமணம் கமழும் சடைமுடி உடைய சிவபெருமானே! நறுமணம் கமழும் சடை முடியுடைய உம் திருவடிகளைத் தொழும் அடியவர்கள் வினைநீக்கம் பெற்றவராவர்.
3824 இமையவர் தொழுதெழு மின்னம்பர் மேவிய
உமையொரு கூறுடை யீரே.
உமையொரு கூறுடை யீருமை யுள்குவார்
அமைகில ராகில ரன்பே 3.095.5
உமையைத் திருமேனியின் ஓர் பாகத்திற் கொண்டவரே, தேவர்கள் தொழுது போற்றும் திரு இன்னம்பரில் எழுந்தருள்பவரே, உமை பாகராகிய உம்மை உள்ளத்தால் நினைந்து ஏத்துபவர் அன்பு அமையப் பெறாதவர் ஆகார்.
3825 எண்ணரும் புகழுடை யின்னம்பர் மேவிய
தண்ணருஞ் சடைமுடி யீரே
தண்ணருஞ் சடைமுடி யீருமைச் சார்பவர்
விண்ணவ ரடைவுடை யோரே 3.095.6
நினைத்தற்கரிய அளவில்லாத பெரும்புகழையுடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, குளிர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானே! குளிர்ந்த சடைமுடியுடைய உம்மைச் சார்ந்து வழிபடுபவர்கள் தேவர்களுக்குரிய சிறப்பினை அடைவர்.
3826 எழிறிக ழும்பொழி லின்னம்பர் மேவிய
நிழறிகழ் மேனியி னீரே
நிழறிகழ் மேனியி னீருமை நினைபவர்
குழறிய கொடுவினை யிலரே 3.095.7
அழகுடன் விளங்கும் சோலைகள் சூழ்ந்த திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, ஒளி விளங்கும் திருமேனியுடைய சிவபெருமானே! ஒளி விளங்கும் திருமேனியுடைய உம்மை நினைப்பவர்களுடைய, வாட்டும் குழம்பிய கொடுவினை கெட்டழியும்.
3827 ஏத்தரும் புகழணி யின்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவுசெய் தீரே
தூர்த்தனைத் தொலைவுசெய் தீருமைத் தொழுபவர்
கூர்த்தநற் குணமுடை யோரே 3.095.8
போற்றுதற்கு அரிய புகழுடைய அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விருமபி வீற்றிருந்தருளுபவரும், தூர்த்தனான இராவணனை அடர்த்தவருமான சிவபெருமானே! தூர்த்தனான இராவணனை அடர்த்த உம்மைத் தொழுபவர் பேரறிவும், நற்குணம் உடையவராவர்.
3828 இயலுளோர் தொழுதெழு மின்னம்பர் மேவிய
அயனுமா லறிவரி யீரே
அயனுமா லறிவரி யீரும தடிதொழும்
இயலுளார் மறுபிறப் பிலரே 3.095.9
நல்லியல்புடையோர் தொழுது எழுகின்ற திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே! பிரமனும், திருமாலும் அறிவதற்கரிய உம் திருவடிகளைத் தொழும் இயல்பு உடையவர்கட்கு மறுபிறப்பு இல்லை.
3829 ஏரமர் பொழிலணி யின்னம்பர் மேவிய
தேரமண் சிதைவுசெய் தீரே
தேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவர்
ஆர்துய ரருவினை யிலரே 3.095.10
ஏர் எனப்படும் திருத்தலத்திற்கு அருகிலுள்ள சோலைகள் சூழ்ந்த அழகிய திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவராய், சமண, புத்த நெறிகளிலுள்ள குறைகளைக் காட்டித் தாழ்ச்சியுறச் செய்த சிவபெருமானே! சமண, புத்த நெறிகள் தாழ்வடையும்படி செய்த உம் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கட்குத் துன்பமும், அதற்குக் காரணமான தீவினையும் இல்லை.
3830 ஏடமர் பொழிலணி யின்னம்பர் ரீசனை
நாடமர் ஞானசம் பந்தன்
நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்
பாடவல் லார்பழி யிலரே 3.095.11
இதழ்களையுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, தேசமெல்லாம் விரும்புகின்ற ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழாலன இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் பழியற்றவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
3.095.திருஇன்னம்பர் |
||||||||
by Swathi on 02 Apr 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|