ஐதராபாத்தில் அடிக்கடி மத மோதல்கள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில், அதே ஊரில் மத நல்லிணக்கத்திற்கு சான்றாக, இந்து ஒருவரின் உடலை, இந்து முறைப்படி முஸ்லிம்கள் முன்னின்று இறுதிச்சடங்குகளை செய்துள்ளனர்.
ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அவ்வப்போது மோதல் நடைபெறுவது வழக்கம். அங்குள்ள, இந்திராம்மா நகர் என்ற இடத்தை சுற்றிலும் முஸ்லிம்கள் வசிக்க, நடுவே, பாலராஜு, என்ற, இந்து எலக்ட்ரீஷியன் வசித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் வேலையிலிருந்து வீடு திரும்பிய பாலராஜு படுக்கையில் சாய்ந்தார்; மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. அவர் மனைவி சுபத்ராவும், 18 வயது மகள் ரேவதியும் அவரை எழுப்பிய போது, இறந்திருந்தது தெரிய வந்தது.இறுதிச்சடங்குகள் மேற்கொள்ள பணம் இல்லாமல் தவித்த சுபத்ராவுக்கு, பக்கத்து வீட்டுக்காரர்களான முஸ்லிம்கள், இறுதி சடங்குகளுக்கு பணம் கொடுத்து உதவியுள்ளனர். மேலும் இறந்த பாலராஜுவின் உடலை, இந்து முறைப்படி தகனம் செய்ய, முஸ்லிம் இளைஞர்கள் தூக்கிச் சென்று இறுதி காரியங்களை செய்தனர். இந்த நிகழ்வு, தன் மதம் தான் உயர்ந்தது என பிரிவினையை தூண்டும் மத தலைவர்களின் முகத்தில் கரி பூசும் விதமாக அமைந்துள்ளது.
|