எல்லா வீட்டுச் சுவர்களிலும் ….எழிலாய்த் தொங்கிப் படபடக்கும், நல்ல, கெட்ட புகைப்படங்கள் ….நன்றாய்க் காட்டி நமைஈர்க்கும், வல்லோர் சொன்ன தத்துவங்கள், ….வாழ்க்கை முறைகள் விளக்கிவிடும், கல்லா மாந்தர் அவருக்கும், ….காலண் டராலே பலனிருக்கும்!
வாரம் ஏழு நாள்களையும் ….வரிசைப் படுத்திக் காட்டிவிடும், பாரம் குறைக்கும் விடுமுறையும், ….பகட்டாய் ஜொலிக்கும் பண்டிகையும், சீராய் சிவப்பு நிறம்கூட்டி ….செம்மை யாக அறிவிக்கும், ஆரார்க் கெந்த நாள் சிறப்பு ….அதையும் தெளிவாய்ச் சொல்லிவிடும்!
ஒழுங்காய் நாளைத் திட்டமிட ….உதவும் தோழன் நாள்காட்டி, பழுதே இன்றி மாதத்தைப் ….பகுத்தி டும்திங் கள்காட்டி, கழுத்தை நெரிக்கும் பணிகளையும் ….கட்டுப் பாட்டில் நிலைநிறுத்தி, வழுஇல் வெற்றி கண்டிடலாம், ….வணங்கி இவற்றைப் பின்பற்றி!
|