திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம், அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின். (நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மை சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதார்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.)
அவர் அவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் சிறப்புக்குணங்களை ஆராய்ந்தறிந்து அவற்றிற்கேற்பச்செய்யாவிடின் ; நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு - வேற்றரசரிடத்து நல்ல ஆம்புடைகளைக் கையாளுமிடத்தும் குற்ற முண்டாம் .
இன் சொல்லுங் கொடையும் , ஏதும் வருத்தத்திற்கும் இழப்பிற்கும் இடமின்றி , எல்லார்க்கும் ஏற்றதும் இன்பந்தருவது மாயிருத்தலின் , நல்லாம்புடைகளாம் . அவற்றை அவரவர் பண்பறிந்தாற்றாமையாவது, அவற்றிற்கு உரியாரல்லாதாரிடத்துக் கையாளுதல் . 'தவறு' அவ்வினை முடியாமை அல்லது முடிந்தும் பயனின்மை .
கலைஞர் உரை:
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச்
செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(காரியம் ஆரம்பிப்பதற்கு முன்னால்மட்டும் அல்லாமல் காரியம் முடிந்த பின்பும் தெரிந்து செய்யவேண்டியவை உண்டு.) காரியம் நன்றாக முடிப்பதிலும் அதற்குச் சம்பந்தப் பட்டவர்களுக்கு அவரவர்களுடைய குணமறிந்து தக்கபடி செய்வன செய்யாவிட்டால் அதுவும் குற்றமாகும்.
Translation
Though well the work be done, yet one mistake is made,
To habitudes of various men when no regard is paid.
Explanation
There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.