|
||||||||
நான்காம் திருமுறை-13 |
||||||||
4.013.திருவையாறு
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
124 விடகிலே னடிநாயேன்
வேண்டியக்கா லியாதொன்றும்
இடகிலே னமணர்கள்த
மறவுரைகேட் டலமந்தேன்
தொடர்கின்றே னுன்னுடைய
தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றே னையாறர்க்
காளாய்நா னுய்ந்தேனே.
4.013.1
கீழான நாய் போன்ற யான் பொருட்பற்றை விடுவேன் அல்லேன். வறியவராய் என்னிடம் இரந்து வந்தவர்களுக்கு யாதொன்றும் பிச்சையாக இடுவேன் அல்லேன். சமணத்துறவியரின் அறவுரைகளைக்கேட்டு மனம் சுழன்றேன். உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைத் தரிசித்து வழிபடத் தொடர்ந்து அடைகின்றேன். ஐயாறனாகிய உனக்கு அடிமைப்பட்டேனாய் அடியேன் கடைத்தேறினேன். இனி உன் திருவடிகளை விடமாட்டேன்.
125 செம்பவளத் திருவுருவர்
திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்குற்
கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழு மலர்க்கொன்றை
வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள வையாறர்க்
காளாய்நா னுய்ந்தேனே.
4.013.2
செம்பவளம் போன்ற அழகிய வடிவினராய், ஒளி வீசும் குழைகளை அணிந்தகாதினராய், கொம்பினை விரும்பிப்படரும் கொடி போன்ற இடையையும் திரண்டவளையல்களையும் உடைய பார்வதியின் பாகராய், புதிதாக மலரும் கொன்றைப்பூவை வளரும் சடைமேல் வைத்து உகப்பவராகிய அகிய பவளம் போன்ற நிறத்தையுடைய ஐயாற்றெம்பெருமானுக்கு அடியேன் அடிமையாகிக் கடைத்தேறினேன்.
126 நணியானே சேயானே
நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே
சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்க
மருந்தாகிப் பிணிதீர்க்கும்
அணியானே யையாறர்க்
காளாய்நா னுய்ந்தேனே.
4.013.3
அருகிலும் சேய்மையிலும் உள்ளவனே! பொன்மயமான ஆடையை உடையவனே! தோலாடையையும் உடையவனே! பொடியாகிய வெண்ணீறு அணிந்தவனே! சிந்தாமணி போல்பவனே! தேவர்களுக்கும் பிணியைத்தீர்க்கும் மருந்தாகி நெருங்கியிருப்பவனே! ஐயாறனாகிய உனக்கு அடிமையாய் அடியேன் கடைத்தேறினேன்.
127 ஊழித்தீ யாய்நின்றா
யுள்குவா ருள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய்
வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய்
படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ யையாறர்க்
காளாய்நா னுய்ந்தேனே.
4.013.4
உலகத்தை அழிக்கும் ஊழித்தீயாய் நின்றவனே! விரும்பித்தியானிப்பவர் உள்ளத்தில் உள்ளவனே! உடம்பகத்து இருந்து உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத முத்தீயாய் இருப்பவனே! வாழ்த்தும் அடியவர் வாயில் உள்ளவனே! பிரமனும் திருமாலும் காணமுடியாதபடி பெரிய தீத்தம்பமாக நின்றவனே! பரவிய சடையின் மேல், உலகத்தாருக்குக் குளிர்ச்சி தரும் சந்திரனாய், தலைவனைப் பிரிந்த தலைவிக்குக் கடலின் உள்ளிருக்கும் குதிரை முகத்தீப்போல வருத்தும் பிறையைச் சூடியவனே! ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே.
128 சடையானே சடையிடையே
தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறிப்
புரமெரித்த வித்தகனே
உடையானே யுடைதலைகொண்
டூரூருண் பலிக்குழலும்
அடையானே யையாறர்க்
காளாய்நா னுய்ந்தேனே.
4.013.5
சடையை உடையவனே! சடையில் தவழும் பிறையைச் சூடியவனே! காளைவாகனனே! காளை மீது இவர்ந்து முப்புரங்களையும் எரியச்செய்த திறமை உடையவனே! எல்லோரையும் அடிமையாக உடையவனே! மண்டை ஓட்டை ஏந்தி ஊர்தோறும் பிச்சை உணவுக்கு அலைபவனாய் எல்லோரும் அடையத்தக்க சரணியனே! ஐயாறனாகிய உனக்கு அடியேன் ஆளாகி உய்ந்தேனே.
129 நீரானே தீயானே
நெதியானே கதியானே
ஊரானே யுலகானே
யுடலானே யுயிரானே
பேரானே பிறைசூடீ
பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத வையாறர்க்
காளாய்நா னுய்ந்தேனே.
4.013.6
'நீரும் நெருப்பும் செல்வமும் செல்லும் வழியும் ஊரும் உலகமும் உடலும் உயிருமாகி இருப்பவனே! பலதிரு நாமங்களை உடையவனே! பிறை சூடியே! பிணிகளைப் போக்கும் பெருமானே!' என்று பலகால் அழைத்தும் ஆர்வம் அடங்கப் பெறாது மேன்மேல் வளர்ந்து வரும் நிலையில் அடியேனை ஆட்கொண்டு அருளும் ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேன்.
130 கண்ணானாய் மணியானாய்
கருத்தானா யருத்தானாய்
எண்ணானா யெழுத்தானா
யெழுத்தினுக்கோ ரியல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே
புரமெரித்த வேதியனே
அண்ணான வையாறர்க்
காளாய்நா னுய்ந்தேனே.
4.013.7
கண்ணாகவும் கண்ணின் மணியாகவும், அக நோக்கத்திற்கு உரிய கருத்தாகவும், நுகர்ச்சியாகவும், எண்ணாகவும், எழுத்தாகவும், எழுத்தின் இயல்பாகவும், பரவெளியாகவும், வானத்தில் இயங்கிய மும்மதில்களை அழித்த வேதியனாகவும், அடியேனுக்கு நெருங்கியவனாகவும் உள்ள ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே.
131 மின்னானா யுருமானாய்
வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய்
பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானா ரிருவர்க்குங்
காண்பரிய நிமிர்சோதி
அன்னானே யையாறர்க்
காளாய்நா னுய்ந்தேனே.
4.013.8
மின்னாகவும் இடியாகவும் வேதத்தின் பொருளாகவும், பொன்னாகவும் மணியாகவும் அலைகள் மோதும் கடலில் உள்ள முத்தாகவும் உள்ளவனே! நின்னைப் போலத் தம்மைப் பரம்பொருளாகக் கருதிய பிரமனும் திருமாலும் காணமுடியாத உயர்ந்த தீப்பிழம்பாய் நின்ற அத்தன்மையனே! இவ்வாறு உள்ள ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே.
132 முத்திசையும் புனற்பொன்னி
மொய்பவளங் கொழித்துந்தப்
பத்தர்பலர் நீர்மூழ்கிப்
பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்க
ளெம்பெருமா னெனவிறைஞ்சும்
அத்திசையா மையாறார்க்
காளாய்நா னுய்ந்தேனே.
4.013.9
முத்துக்களோடு கூடிவரும் காவிரியின் வெள்ளம், செறிந்த பவளங்களை அரித்துக் கரைசேர்க்க, பத்தர்பலர் காவிரி நீரில் மூழ்கிப் பலகாலும் வணங்கித்துதிக்க எல்லாத் திசைகளிலும் தேவர்கள் 'எம்பெருமான்!' என்று கூப்பிட்டவாறே வழிபடும் அத்திசைகளில் எல்லாம் அவர்கள் வழிபாட்டை ஏற்கும் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே.
133 கருவரைசூழ் கடலிலங்கைக்
கோமானைக் கருத்தழியத்
திருவிரலா லுதைகரணஞ்
செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார்
பேர்நந்தி யென்றேத்தும்
அருவரைசூ ழையாறர்க்
காளாய்நா னுய்ந்தேனே.
4.013.10
கடலிடையே பெரிய மலைகளால் சூழப்பட்ட இலங்கை நகர் மன்னனாகிய இராவணனை அவன் எண்ணம் அழியுமாறு திருவிரலால் அழுத்தி உதைத்தலாகிய செயலைச்செய்து அவன் செருக்கை அடக்கி மகிழ்ந்த சிவமூர்த்தியாய், பெரிய கடலால் சூழப்பட்ட இந்நில உலகத்தவர் நந்தி என்று பெயரிட்டு வழிபடும், பெரிய மூங்கிற் காடுகள் சூழ்ந்த ஐயாற்று எம்பெருமானுக்கு, அடியேன் அடிமையாகிக் கடைத்தேறினேன்.
திருச்சிற்றம்பலம்
4.013.திருவையாறு |
||||||||
by Swathi on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|