|
||||||||
நான்காம் திருமுறை-26 |
||||||||
4.026.திருவதிகைவீரட்டானம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
259 நம்பனே யென்கள் கோவே
நாதனே யாதி மூர்த்தி
பங்கனே பரம யோகீ
யென்றேன்றே பரவி நாளும்
செம்பொனே பவளக் குன்றே
திகழ்மலர்ப் பாதங் காண்பான்
அன்பனே யலந்து போனே
னதிகைவீ ரட்ட னீரே.
4.026.1
'திருவதிகை வீரத்தானத்தில் உகந்தருளியிருக்கும் பெருமானீரே! எல்லாராலும் விரும்பப்படுகிறவரே! எங்கள் அரசரே! ஆதிமூர்த்தியாகிய பார்வதிபாகரே! மேம்பட்டயோகீசுவரே! பொன்னையும் பவளமலையையும் ஒத்தவரே! அன்பரே!' என்று உம்மைப் பலகாலும் வாய்விட்டழைத்து உமது தாமரை மலர் போன்ற பாதங்களைத் காணத் துயருற்று அடியேன் வருந்துகின்றேன்.
260 பொய்யினான் மிடைந்த போர்வை
புரைபுரை யழுதி வீழ
வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
செய்யதா மரைக ளன்ன
சேவடி யிரண்டுங் காண்பான்
ஐயநா னலந்து போனே
னதிகைவீ ரட்ட னீரே.
4.026.2
அழியக்கூடிய பொய்ப்பொருள்களால் இணைத்துச் செய்யப்பட்ட உடம்பில் ஒவ்வொரு துவாரமும் செயற்பாடின்றி அழுகிக்கெட, உண்மையான வாழ்வு வாழ இயலாதேனாய், யான்விரும்பிய ஒப்பற்ற பரஞானத்தை என் ஐம்பொறிகளும் தாமும் விரும்பாமல் இடர்படுதலால், அதிகை வீரட்டனாராகிய உமது சிவந்த தாமரையை ஒத்த திருவடிகள் இரண்டையும் காண்பதற்கு இயலாமல் அடியேன் வருந்தி நிற்கின்றேன்.
261 நீதியால் வாழ மாட்டே
னித்தலுந் தூயே னல்லேன்
ஓதியு முணர மாட்டே
னுன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே யுன்றன்
றூமலர்ப் பாதங் காண்பான்
ஆதியே யலந்து போனே
னதிகைவீ ரட்ட னீரே.
4.026.3
ஒளியே!ஞானவிளக்கே! அதிகைப்பெருமானே! தூயேன் அல்லேனாகியஅடியேன் நாடோறும் நெறிப்படி வாழமாட்டாமல், கற்றும்கற்றவாறு உணர இயலாதேனாய், உன்னை உள்ளத்துள் நிலையாகவைத்துத் தியானிக்க இயலாதேனாய் முதற்கடவுளாகியஉன்னுடைய தூயமலர்களைப் போன்ற திருவடிகளைக் காணஇயலாதேனாய் வருந்தி நிற்கிறேன்.
262 தெருளுமா தெருள மாட்டேன்
றீவினைச் சுற்ற மென்னும்
பொருளுளே யழுந்தி நாளும்
போவதோர் நெறியுங்காணேன்
இருளுமா மணிகண் டாநின்
னிணையடி யிரண்டுங் காண்பான்
அருளுமா றருள வேண்டு
மதிகைவீ ரட்டனீரே.
4.026.4
இருண்ட நீலமணி போன்ற கழுத்தை உடைய அதிகைப் பெருமானே! தௌவடையும் வழியை அடைந்து மனந் தௌவடைதலை இல்லேனாய், தீயவினைகளுக்கு உதவும் தேக பந்துக்கள் என்னும் பொருள்களோடு இயைந்து நாளும் செல்லத்தக்க மேம்பட்டவழியை அறியேனாய் உள்ள அடியேன் உன் ஒன்றற்கு ஒன்றுஒப்பான உன் திருவடிகள் இரண்டனையும் தரிசிக்குமாறுஅருளும் வகையால் அருளவேண்டும்.
263 அஞ்சினா லியற்றப் பட்ட
வாக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினா லடர்க்கப் பட்டிங்
குழிதரு மாத னேனை
அஞ்சினா லுய்க்கும் வண்ணங்
காட்டினாய்க்கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினாற் பொலிந்த சென்னி
யதிகைவீ ரட்ட னீரே.
4.026.5
பஞ்சகவ்வியத்தால் அபிடேகிக்கப்படுதலால் விளங்குகின்ற சென்னியை உடைய அதிகை வீரட்டப் பெருமானே! ஐம்பூதங்களால் இயற்றப்பட்ட இவ்வுடலைப் பெற்று அதன்கண் வாழும் ஐம்பொறிகளால் வருத்தப்பட்டு இவ்வுலகில்திரியும் அறிவற்ற அடியேனைத் திருவைந்தெழுத்தால் நல்வழியில் செல்லுமாறு வழிகாட்டினாயாக, அதனால் அச்சம் நீங்கப்பெற்றேன்.
264 உறுகயி றூசல் போல
வொன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல
வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப்
பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானே
னதிகைவீ ரட்ட னீரே.
4.026.6
கயிறாகிய ஊஞ்சல் போலப் பிறைச்சந்திரன் அசைந்துகொண்டு தங்கியிருக்கும் சடையினை உடைய அதிகைப் பெருமானே! தன் நிலையை விட்டுச் சென்றுபிறிதோர் இடத்தைப் பற்றி மீண்டும் தொங்கிய நிலைப்பக்கம் வந்துசேரும் ஊசற்கயிறு போல ஓர் இடத்தை விடுத்து அலைந்து மீண்டும் அவ்விடத்திற்கேவரும் நெஞ்சம், கயிறற்ற ஊஞ்சலுக்குத் தாய்தரையேயாதல் போல, இப்பொழுது நின் பாதமே இடமாக தங்கி நிற்கும் இயல்பைப்பெற்றுள்ளேன் ஆயினேன்.
265 கழித்திலேன் காம வெந்நோய்
காதன்மை யென்னும் பாசம்
ஒழித்திலே னூன்க ணோக்கி
யுணர்வெனு மிமைதி றந்து
விழித்திலேன் வெளிறு தோன்ற
வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்
அழித்திலே னயாத்துப் போனே
னதிகைவீ ரட்ட னீரே.
4.026.7
அதிகைப் பெருமானே! என்னிடத்துள்ள ஆசாபாசம், காமம் என்ற கொடியநோய் நீங்கப்பெற்றிலேனாய் ஆசை என்னும் பற்றினை விடுத்திலேனாய், உடலுயிர் வாழ்க்கையையே நோக்குபவனாய் இருத்தலால், அதற்குக் காரணமாகிய ஆணவ மறைப்பு விலக, விழிக்கும் மெய்யுணர்வாகிய விழி விழிக்கும் நிலையைப் பெற்றிலேன். அதற்குத்தடையாகிய வினை என்னும் பண்டத்தையும் நிரம்பக் கொண்டுள்ளேன். அதே வேளை, இவற்றின் விருத்திக்கு ஊக்கும் இழிதகவுடையோர் சார்பை விலக்கிக் கொள்ளவும் மறந்து போனேன். நான் என்ன செய்வேன் என்பது குறிப்பு.
266 மன்றத்துப் புன்னை போல
மரம்படு துயர மெய்தி
ஒன்றினா லுணர மாட்டே
னுன்னையுள் வைக்க மாட்டேன்
கன்றிய காலன் வந்து
கருக்குழிவிழுப்ப தற்கே
அன்றினா னலமந் திட்டே
னதிகைவீ ரட்ட னீரே.
4.026.8
ஊர்ப் பொதுமன்றத்தில்நிற்கும் புன்னைபலராலும் கல்லெறியப்பட்டும் ஏறி அலைக்கப்பட்டும்சதா வருந்துவதுபோல ஐம்பொறிகளால் சதா அலைக்கப்பட்டும் வருந்துவதன்றி ஒருவகையிலும் உண்மையை உணரமாட்டேன். அதை உணர்விக்கவல்ல உன்னையும் உளத்தில் நிலையாக வைக்கமாட்டேன். இந்நிலையில், சினம்மிக்க எமன் வந்து என்னைமீளவும் பிறப்பில் தள்ளுதற்கு அணுகிக்கொண்டுள்ளான். அது கண்டு நான் சுழன்று போனேன் அதிகை வீரட்டத்துப் பெருமானே.
267 பிணிவிடா வாக்கை பெற்றேன்
பெற்றமொன் றேறு வானே
பணிவிடா விடும்பை யென்னும்
பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் றூய னல்னேன்
றூமலர்ப் பாதங் காண்பான்
அணியனா யறிய மாட்டே
னதிகைவீ ரட்ட னீரே.
4.026.9
காளையை ஊர்பவனே! அதிகைப்பெருமானே! நோய்கள் விடுத்து நீங்காத இம்மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன், செயற்படாதொழியாத துன்பம் நல்கும் நல்வினை தீவினையாகிய சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு, அவற்றை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும் மன உறுதியும் இல்லாதேனாய், அத்தூய்மை துணிவு என்பன வற்றை நல்கும் உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.
268 திருவினாள் கொழுந னாருந்
திசைமுக முடைய கோவும்
இருவரு மெழுந்தும் வீழ்ந்து
மிணையடி காண மாட்டா
ஒருவனே யெம்பி ரானே
யுன்றிருப் பாதங் காண்பான்
அருவனே யருள வேண்டு
மதிகைவீ ரட்ட னீரே.
4.026.10
அதிகை வீரட்டனே! வடிவம் புலப்படாது இருப்பவனே! திருமகள் கேள்வனாய திருமாலும், நான்கு திசைகளிலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் ஆகிய இருவரும் கீழ் நோக்கித் தோண்டியும் மேல்நோக்கிப் பறந்தும், திருவடிகளையோ உன் உச்சியையோ காண இயலாத ஒப்பற்ற பெருமானாகிய உன் திருப்பாதங்களை அடியேன் காணுமாறு அருள் செய்யவேண்டும்.
திருச்சிற்றம்பலம்
4.026.திருவதிகைவீரட்டானம் |
||||||||
by Swathi on 25 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|