LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தேசீய மலர்

    70. "கத்தியின்றி ரத்தமின்றி"

    கத்தி யின்றி ரத்த மின்றி
    யுத்த மொன்று வருகுது
    சத்தி யத்தின் நித்தி யத்தை
    நம்பும் யாரும் சேருவீர்! . .(கத்தி)
    ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்
    குயிர்ப றித்த லின்றியே
    மண்ட லத்தில் கண்டி லாத
    சண்டை யன்று புதுமையே! .(கத்தி)
    குதிரை யில்லை யானை யில்லை
    கொல்லும் ஆசை யில்லையே
    எதிரியென்று யாரு மில்லை
    எற்றும் ஆசை யில்லதாய் . .(கத்தி)
    கோப மில்லை தாப மில்லை
    சாபங் கூறல் இல்லையே
    பாப மான செய்கை யன்றும்
    பண்ணு மாசை யின்றியே . .(கத்தி)
    கண்ட தில்லை கேட்ட தில்லை
    சண்டை யிந்த மாதிரி
    பண்டு செய்த புண்ணி யந்தான்
    பலித்த தேநாம் பார்த்திட! . .(கத்தி)
    காந்தி யென்ற சாந்த மூர்த்தி
    தேர்ந்து காட்டும் செந்நெறி
    மாந்த ருக்குள் தீமை குன்ற
    வாய்ந்த தெய்வ மார்க்கமே . .(கத்தி)

    71. என்னுடை நாடு

    "இந்திய நாடிது என்னுடை நாடே"
    என்று தினந்தினம் நீயதைப் பாடு ;
    சொந்தமில் லாதவர் வந்தவர் ஆள
    தூங்கிக் கிடந்தது போனது மாள ;
    வந்தவர் போனவர் யாரையும் நம்பி
    வாடின காலங்கள் ஓடின தம்பி!
    இந்தத் தினம்முதல் "இந்தியநாடு
    என்னுடை நாடெ"ன்ற எண்ணத்தைக் கூடு.

    கன்னி இமயக் கடலிடை நாடு
    கடவுள் எமக்கெனக் கட்டிய வீடு ;
    என்ன முறையி(து) ஏனிதை வேறு
    இன்னொரு நாட்டினர் ஆள்வது கூறு ;
    சொன்னவர் கேட்டவர் யாரையும் நம்பிச்
    சோர்ந்து கிடந்தது தீர்ந்தது தம்பி!
    என்னுடை நாட்டினை நானிருந் தாள
    இந்தத் தினம்முதல் எண்ணுவன் மீள.

    தன்னுடை வேலையைத் தான்செய்வ தாலே
    தப்புவந் தாலும் சுதந்தரம் மேலே ;
    இன்னொரு யாருக்கும் இதிலென்ன கோபம்?
    என்றன் உரிமைசொன் னாலென்ன பாபம்?
    அன்னியர் ஆள்வதில் நன்மைவந் தாலும்
    அடிமையின் வாழ்வது நரகம்எந் நாளும்
    என்னுடை வீட்டுக்கு நான்அதி காரி
    என்பது தான்சுய ராச்சிய பேரி.

    பாரத நாடென்றன் பாட்டன்றன் சொத்து ;
    பட்டயத் துக்கென்ன வீண்பஞ்சா யத்து?
    யாரிதை வேறோர் அன்னியர் ஆள?
    அஞ்சிக் கிடந்தது போனது மாள ;
    'வாரவர் போறவர்' யாரையும் நம்பி
    வாடின காலங்கள் ஓடின தம்பி!
    வீரமும் தீரமும் வெற்றுரை யாமோ?
    விடுதலை வேண்டுதல் விட்டிடப் போமோ?

    'முத்தமிழ் நாடென்றன் முன்னையர் நாடு ;
    முற்றிலும் சொந்தம் எனக்கெ'னப் பாடு ;
    சற்றும் உரிமையில் லாதவர் ஆளச்
    சரிசரி யென்றது போனது மாள ;
    பக்தியின் அன்பினில் பணிபல செய்வோம் ;
    பயப்பட்டு யாருக்கும் பணிந்திடல் செய்யோம் ;
    சத்தியம் சாந்தத்தில் முற்றிலும் நின்றே
    சடுதியில் விடுதலை அடைவது நன்றே.

    72. வாழ்க நம் நாடு

    நம்நாடு செழிக்க வேண்டும்
    நாமெலாம் களிக்க வேண்டும்
    நம்நாடு மட்டும் வாழப்
    பிறர்நாட்டைத் தவிக்கச் செய்யும்
    வெம்நாடு களுக்கே லாமோர்
    விழுமிய ஞான மார்க்கம்
    எம்நாடு தந்த றென்றே
    இந்தியன் மகிழ வேண்டும்.

    கண்டவர் மகிழ வேண்டும்
    கேட்டவர் புகழ வேண்டும்
    கொண்டவர் குலவ வேண்டும்
    குறைந்தவர் நிறைந்து மெச்ச
    அண்டின எவரும் அச்சம்
    அடிமையை அகற்று மாறு
    தண்டமிழ் அலைகள் வீசி
    நம்நாடு தழைக்க வேண்டும்.

    இலக்கண உயர்விற் சொல்லின்
    இனிமையிற் பொருளில் வாழ்வின்
    விலக்குகள் விதிகள் வைக்கும்
    விதத்தினில் விநயம் தன்னில்
    கலைக்கொடு தனிமை காட்டும்
    கவிதையின் கனிவில் கற்றோர்
    தலைக்கொளும் தமிழைப் போற்றி
    நம்நாடு புதுமை தாங்கும்.

    எந்தநாட் டெவர்வந் தாலும்
    எம்மொழி பேசி னாலும்
    சொந்தநாட் டவர்போ லிங்குச்
    சுகித்துநிம் மதியாய் வாழத்
    தந்தநா டுலகி லிந்தத்
    தமிழகம் போலொன் றுண்டோ?
    அந்தநம் புகழைக் காத்து
    நம்நாடு அன்பே ஆற்றும்.

    அன்பினால் கலந்து வாழ்ந்தே
    'ஆரியன்' 'அயலான்' என்னும்
    வன்பெலாம் வருமுன் னாலே
    வள்ளலார் வளர்த்த வாய்மை
    என்பெருந் தமிழா லிந்த
    இருநில மக்கட் கெல்லாம்
    இன்பமே தருவ தாக
    நம்நாடே இசைக்க வேண்டும்.

    அன்னியம் அறிவிற் கில்லை
    அன்பிற்கும் அளவே இல்லை
    என்னவே உலகில் மற்ற
    எவரெவர் மொழியும் ஆய்ந்து
    தன்னொடும் வாழ வைத்த
    தமிழ்மொழி பெருமை தாங்கி
    நன்னெறி விளக்காய் நின்று
    நம்நாடு நலமே நல்கும்.

    புதுத்துறை அறிவைத் தேடிப்
    போயலைந் துழன்று நாடி
    விதப்பல விஞ்ஞா னத்தை
    விரித்திடும் மெய்ஞ்ஞா னத்தால்
    பொதுப்படக் கலைக ளெல்லாம்
    தமிழிலே புதுமை பூண
    மதிப்பொடே எவரும் போற்ற
    நம்நாடு மணக்க வேண்டும்.

    தமிழர்கள் உலகுக் கீந்த
    வள்ளுவர் தானோ என்ன
    அமிழ்தினும் உயர்ந்த தான
    அறமெலாம் நடந்து காட்டும்
    கமழ்மணம் உலகம் போற்றும்
    காந்தியார் ஏந்தும் கொள்கை
    நமதெனும் பெருமை யோடு
    நம்நாடு நன்மை பேசும்.

    தாழ்வுகள் யாவும் போகத்
    தரித்திரக் கொடுமை நீங்கிச்
    சூழ்கடல் உலகில் மக்கள்
    சுதந்திரத் துடனே வாழ்ந்தே
    ஆழ்கலை அறிவும் ஓங்கி
    ஆண்டவன் அன்பைக் கண்டு
    வாழ்ந்திட வேண்டு மென்றே
    நம்நாடு வாழ வேண்டும்.

    73. சுதந்திரச் சபதம்

    அவரவர் உழைப்பின் பலன்களை முழுதும்
    அவரவர் உரிமையால் அடைந்து
    சுவையுள வாழ்க்கைக் கவசிய மான
    பொருளெலாம் சுலபமாய்க் கிடைத்துப்
    புவியினில் எல்லா வசதியும் பெற்றுப்
    பூரண வளர்ச்சியிற் பொலிதல்
    எவரொரு பேர்க்கும் மறுக்கொணா உரிமை ;
    இந்தியர் எமக்குமாம் இதுவே.

    இயற்கையா மிந்த உரிமையைப் பறிக்க
    இடையிலே தடையென நின்று
    செயற்கையா லடக்கிக் கொடுமைகள் புரியும்
    தீமைசேர் அரசியல் எதையும்
    முயற்சியால் திருத்த முடியாது போனால்
    முற்றிலும் அதனையே நீக்கி
    அயர்ச்சியில் லாத அரசுமற் றொன்றை
    அமைப்பதும் குடிகளின் உரிமை.

    ஆங்கில ஆட்சி இந்திய நாட்டை
    அடிமைநா டாக்கின தோடு
    தாங்களே சுகிக்கும் தந்திர முறையால்
    தரித்திரம் தலைவிரித் தாட
    ஈங்குள ஏழைக் குடிகளின் வளத்தை
    ஈப்புலி என்னவே உறிஞ்சி
    ஓங்கிய செல்வம், அரசியல், ஆன்ம
    உணர்ச்சியும் கலைகளும் ஒழித்தார்.

    ஆதலால் இந்த ஆங்கிலத் தொடர்பை
    அடியடும் அகற்றிட வேண்டும் ;
    பூதலம் அறிந்த பூரண மாம்சுய
    ராச்சியம் புதியதா யமைப்போம்
    ஏதொரு நாடும் ஆதிக்க மெதுவும்
    இந்தநாட் டெதிலுமில் லாத
    தீதிலா நிலையை அடைந்திடல் நன்மை ;
    திடமுடன் நம்பினோம் இதையே.

    அந்தநன் னிலையை அடைந்திட நமக்கிங்
    கதிகமாய்ப் பலன்தரும் மார்க்கம்
    நிந்தனை மிகுந்த கொலைவழி யல்ல ;
    நிச்சயம் கண்டுகொண் டோமால்?
    முந்திநாம் கொண்ட சாத்விக முறையால்
    முற்றிலும் முன்னேற்ற மடைந்தோம் ;
    இந்தியா இனியும் அதனையே தொடரும்
    எண்ணிய சுதந்திரம் எய்தும்.

    உத்தம மான சாந்தநல் வழியில்
    உரிமையால் சுதந்திர மடைய
    நித்திய மான பரம்பொருள் சாட்சி
    நிபந்தனை சிலவுமேற் கொண்டு
    பத்திய மாக அதன்படி நடந்து
    பணிசெய்வோம் என்றுநாம் இன்று
    சத்தியம் செய்து சபதமும் கொள்வோம்
    சந்ததம் இந்தியா வாழ்க!

    சாந்தவாழ் விற்கும் சாத்விகப் போர்க்கும்
    ஜனங்களைத் தகுதியாக் கிடவும்
    கூர்ந்துநாம் கொண்ட நிர்மாணத் திட்டம்
    குறைவற நாட்டினிற் பரவிச்
    சார்ந்தநற் கதரும் சாதிகள் சமயச்
    சமரச சல்லாப வாழ்வும்
    தேர்ந்தநற் சேவை தீண்டாமை ஒழித்தல்
    சிறப்புறச் செய்திடல் வேண்டும்.

    எட்டிய மட்டும் ஜனங்களுக் குள்ளே
    சமரச எண்ணமே பரப்பி
    முட்டிடும் சாதிச் சண்டைகள் நீக்கி
    முரண்படு வேற்றுமை மாற்றிப்
    பட்டினிப் பஞ்சம் படிப்பிலாத் தன்மை
    பற்பல கொடுமையால் நொந்தே
    ஒட்டுதல் மறுத்தே ஒதுக்கின பேரை
    உயர்த்திடப் பலவிதம் உழைப்போம்.

    ஆங்கிலர் நடத்தும் ஆதிக்க மதனை
    அழித்திட அமைத்துளோம் எனினும்
    நாங்களோர் நாளும் இங்கிலிஷ் காரர்
    நாசத்தை விரும்பிட மாட்டோம் ;
    ஈங்குள அவர்கள் எத்தொழில் செயினும்
    இன்பமாய் வாழ்ந்திட இசைவோம் ;
    தாங்களே எஜமான் என்றிடும் தருக்கைத்
    தடுப்பதே நாம்கொண்ட வேலை.

    இந்துக்க ளிடையே தீண்டாத பேர்கள்
    ஹரிஜன ஏழைகள் தம்மைப்
    பந்துக்கள் போலப் பரிவுடன் நடத்தி
    அவருடன் பழகுதல் வேண்டும் ;
    நிந்தித்து நீக்கல் சாத்விக நெறிக்கு
    நிச்சயம் தடையென நிற்கும் ;
    சிந்தித்து நமது தினசரி வாழ்வில்
    தீண்டலை மறந்திடல் தேவை.

    மதங்களின் பெயரால் மாறுபட் டிடினும்
    மற்றுநம் சுகதுக்க மெல்லாம்
    நிதங்கலந் தெல்லா விதத்திலும் பின்னி
    நீக்கொணாத் தொடர்புகள் உடைத்தாம் ;
    இதங்கலந் திடநாம் இந்தியத் தாயின்
    மக்களே என்பதை நினைத்து,
    விதங்களை மறந்து வேற்றுமை துறந்து
    விரவிநாம் நடந்திடல் வேண்டும்.

    கதரும் ராட்டையும் கண்களாம் நமக்குக்
    கருதிடில் நிர்மாணக் கணக்கில் ;
    எதிலும் சுகமிலா ஏழைக் கிராமம்
    எழுநூ றாயிரம், அவற்றில்
    பதிலும் பேசிடாப் பாமர மக்களின்
    பட்டினிக் கொடுமையை மாற்றக்
    கதியென அவர்க்குப் புத்துயிர் கொடுக்கக்
    கைத்தொழில் ராட்டையும் கதராம்.

    ஆகையால் நாமும் அனுதினம் நூற்போம் ;
    ஆடையும் கதரன்றி அணியோம் ;
    போகமாய்க் கிராமக் கைத்தொழில் செய்த
    பொருளையே கூடிய மட்டும்
    ஓகையால் வாங்கிப் பிறரையும் அதற்கே
    உதவிடத் தூண்டுவோம் ; உண்மை ;
    சாகுமோ என்னும் கைத்தொழில் எல்லாம்
    தழைத்துயிர் பெற்றிடச் செய்வோம்.

    காங்கிரஸ் கொள்கைக் கட்டளை தம்மைக்
    கடமையிற் பணிவுடன் காப்போம் ;
    ஓங்கிடும் போது சத்தியப் போரில்
    உவப்புடன் கலந்துகொள் வதற்கே
    ஆங்கது கூவி அழைத்ததும் உதவ
    ஆயத்த மாகவே இருப்போம் ;
    ஈங்கிவை எங்கள் சத்தியம் சபதம்
    இந்தியா சுதந்திரம் பெறவாம்.

    74. இந்தியத் தாய் புலம்பல்

    காலக் கதியடியோ
    கைவிரித்து நான்புலம்ப
    ஆலம் விதையெனவே
    அளவிறந்த மக்கள்பெற்றும்
    ஞாலத்தில் என்னைப்போல்
    நலிந்தா ளருத்தியுண்டோ?
    நீலக் கடலுலகில்
    நீடித்தும் பிள்ளைகளால்
    கோல மிழந்துநிலை
    குலைந்துருகி வாடுகின்றேன்!

    மெத்தப் பகட்டுடையாள்
    மேற்கத்திப் பெண்ணொருத்தி
    'அத்தை'யெனக் கூவியென்றன்
    ஆசார வாசலிலே
    தத்தித் தடுமாறித்
    தலைவணங்கி நின்றிருந்தாள்.
    "புத்தம் புதியபெண்ணே
    போந்தகுறை என்னசொல்லு
    சித்தங் கலங்காதே
    சின்னவளே" என்றுசொன்னேன்.

    வெள்ளைத் துகிலுடுத்து
    வெட்டிருந்த பட்டணிந்து
    கள்ளக் குறிசிறிதும்
    காட்டா முகத்தினளாய்
    அள்ளிச் செருகிவிட்ட
    அழகான கூந்தலுடன்
    பிள்ளை மொழிவதெனப்
    பின்னுகின்ற சொற்பேசி
    மெள்ளத் தலைகுனிந்தே
    மெல்லியலாள் நின்றிருந்தாள்.

    "எங்கிருந்தே இங்குவந்தாய்?
    என்னகுறை பெண்மணியே?
    சங்கிருந்த வெண்ணிறத்தாய்!
    சஞ்சலத்தால் வந்ததுண்டோ?
    இங்கிருந்தே உள்ளதைநீ
    என்னுடைய மக்களுடன்
    பங்கிருந்து கொள்வாய்நீ
    பயமொழிவாய்" என்றுசொல்லி
    இங்கிதம்நான் சொன்னவுடன்
    இருதாளும் மண்டியிட்டு.

    குன்றி உரைகுழறிக்
    குளிரால் நடுங்கினள்போல்
    சின்னஞ் சிறுகுரலால்
    சிந்தைமிக நொந்தவளாய்
    "உன்னுடை னேபிறந்தோன்
    ஊரைவிட்ட ஆரியனாம்
    முன்னம் உனைப்பிரிந்து
    மேல்நாடு மேவினவன்
    அன்னவன் புத்திரிநான்
    அத்தைநீ சித்தம்" என்றாள்.

    "நெஞ்சம் கலங்காதே
    நீயெதற்கும் அஞ்சாதே
    தஞ்ச முனக்கிருப்பேன்
    தையலே மெய்யிதுகாண் ;
    கொஞ்சும் இளமையினில்
    குறையுனக்கு வந்ததென்ன?
    பஞ்சை யெனத்தனியே
    பட்டணத்தை விட்டுவந்தாய்
    வஞ்சி யிளங்கொடியே
    வந்துபசி யாறுகென்"றேன்.

    சற்றுத் தலைநிமிர்ந்தாள்
    தையலவள் புன்சிரிப்பை
    உற்ற முகத்தினொடும்
    உள்ளம் குளிர்ந்தவள்போல்
    சுற்றி அயல்பார்த்துச்
    சொன்னபடி என்னுடனே
    முற்ற மதனைவிட்டு
    முன்கட்டில் வந்துநின்று
    தத்தியதன் மேல்நடக்கத்
    தயங்கினவள் போலநின்றாள்.

    "தாவில்லை உள்ளேநீ
    தாராள மாய்வரலாம்
    வா" என்று சொன்னவுடன்
    வல்லியவள் மெல்லவந்தாள் ;
    தூவெள்ளை யானஅவள்
    துணியும் அணியிழந்தும்
    தாவள்ய மானஅந்தத்
    தையலவள் மெய்யழகில்
    கோவென்று கூட்டமிட்டென்
    குழந்தைமார் கூடிவிட்டார்.

    ஆனபடி என்னுடனே
    அன்னமந்தக் கன்னிவர
    மேனியவள் ஆடையெல்லாம்
    வாடையன்று வீசியது.
    "ஏனி· திளங்கொடியே!
    என்ன?" என்று கேட்டதற்கு
    "மீனுணவும் ஊனுணவும்
    மெத்தஉண்ட தந்தையரே
    தேனுங் கனிகாய்என்
    தேசத்தில் கொஞ்சம்" என்றாள்

    சொல்லி முகஞ்சுளித்தாள்
    சோக மதைமாற்றி
    கொல்லைச் சிறுவீட்டிற்
    கொண்டவளைச் சென்றிருத்தி
    மல்லிகை முல்லைமலர்
    மணமிகுந்த நன்னீரால்
    அல்லி நிறத்தவளை
    அங்கமெல்லாம் நீராட்டி
    மெல்லத் துவட்டிவிட்டு
    மெய்யழகு செய்துவைத்து

    தக்க உடைகொடுத்து
    டாக்காவின் சல்லாவால்
    மிக்க விலையுயர்ந்து
    மிகமெலிந்த ஆடையினால்
    ஒக்க அவளைமிக
    ஒய்யாராம் செய்துவிட்டுப்
    பக்கம் உடனிருத்திப்
    பரிந்தே விருந்துமிட்டேன்
    துக்கம்மிக ஆறியவள்
    துதித்தாள் மிகவும் என்னை.

    என்னுடைய மக்களுடன்
    என்வீட்டுத் தாதியரும்
    இன்னும் பணியாட்கள்
    எல்லோரும் பக்தியுடன்
    என்ன சிறுகுறையும்
    ஏதுமவட் கில்லாமல்
    சொன்னபடி எல்லாரும்
    சோடாச உபசாரம்
    பண்ணியந்தப் பெண்மணியைப்
    பார்த்து வந்தார் நேர்த்தியுடன்.

    அஞ்சி அடக்கமுடன்
    அத்தையென்ற பக்தியுடன்
    வஞ்சி யிளங்கொடியாள்
    வாழ்ந்திருந்தாள் வீட்டில்என்றன்
    குஞ்சு குழந்தையெல்லாம்
    கோதையவள் தன்னிடத்தில்
    கொஞ்சி விளையாடிக்
    குலவி மகிழ்ந்திருந்தார்
    நெஞ்சம் மிகக்களித்து
    நிம்மதியாய் நானிருந்தேன்.

    இந்தவிதம் என்வீட்டில்
    என்னுடைய மக்களினும்
    சொந்தம்மிகக் கொண்டாடிச்
    சொன்னபடி கேட்டுவந்தாள்
    வந்திருக்கும் நாளையிலே
    ஒருநாள் அருகில்வந்து
    "எந்தனுடை ஊரின்மேல்
    ஏக்கமின்று வந்ததனால்
    உன்றனுடை உத்தரவில்
    ஓலைவிட ஆசை" என்றாள்.

    "என்ன தடைஇதற்கே?
    எழுதுவாய்" என்றுசொன்னேன்.
    சொன்னவுடன் என்றனக்குத்
    தோன்றா மொழிகளிலே
    கன்னியவள் தன்னவர்க்குக்
    காகிதமும் போட்டுவிட்டாள்
    பின்னைச் சிலநாளில்
    பெண்ணவளின் தன்னினத்தார்
    அண்ணனென்றும் தம்பியென்றும்
    அக்கமென்றும் பக்கமென்றும்

    வந்தார் பலபேர்கள்
    வந்தவரைச் சொந்தமுடன்
    தந்தே னிடமவர்க்கும்
    தக்க விருந்துமிட்டேன்
    சந்தேகம் நானவர்மேல்
    சற்றும் நினைக்காமல்
    அந்தோ! இருந்துவிட்டேன்
    அந்தஒரு காரணத்தால்
    நொந்தேன் நிலைதவறி
    நோவேன் விதியினையே.

    அன்னவர்கள் கொண்டுவந்த
    அழகாம் பலபொருள்கள்
    மின்னுகின்ற கண்ணாடி
    மினுக்குகின்ற பொம்மைகளும்
    இன்னும் மயக்குகின்ற
    என்னென்ன வோபொருள்கள்
    என்னுடைய மக்களுக்கே
    எடுத்துக் கொடுத்தவளாய்க்
    கன்னி யவள்சிரிக்கக்
    களித்துவிட்டார் மக்களெல்லாம்.

    நாளுக்கு நாளதன்மேல்
    நலிந்தபடி என்வீடு
    மேலுக்கு மேலாக
    மிகவும் பயந்தவள்போல்
    'பாலுக்குங் காவலொடு
    பூனைக்கும் தோழன்' என்றே
    தோல்நிற்க உள்ளிருந்த
    களைமறைந்த கொள்கையெனக்
    கோல்செய்த என்வாழ்வைக்
    குலைத்துவிட்டாள் மெல்லமெல்ல.

    என்ன உரைத்தாளோ!
    ஏதுமருந் திட்டாளோ!
    அன்னைதந்தை தெய்வமென்றே
    ஆரா தனைபுரிந்த
    என்னுடைய மக்களென்னை
    ஏறெடுத்தும் பார்ப்பதில்லை ;
    சொன்னபடி கேட்பதில்லை ;
    'தூ'வென்றும் 'போ'வென்றும்
    கன்னியவள் மோகத்தால்
    காலால் எனைஉதைப்பார்.

    கொண்ட சமயம்விட்டார்
    குலதெய்வப் பூசைவிட்டார்
    பண்டைப் பெருமையுள்ள
    பக்திகளும் விட்டொழிந்தார் ;
    கண்டபடி உண்டுடுத்துக்
    கண்டபடி யாய்க்களித்துப்
    பெண்டொருத்தி தன்மயக்கில்
    பெற்றஎன்னை யும்இகழ்ந்து
    சண்டையிட்டுத் திரிவார்நான்
    தவங்கிடந்த மக்களெல்லாம்.

    75. நாட்டை மறந்தனை மனமே!

    நாட்டை மறந்தனை மனமே
    நாளுமிங் கெளியவர் வருந்தும்
    பாட்டை நினைத்திலை சிறிதும்
    படித்தனை யதன்பயன் இதுவோ?
    பூட்டிய விலங்குடன் புலம்பும்
    பெற்றபொன் னாட்டினைப் போற்றாய்
    ஏட்டிற் படித்தனை அறநூல்
    ஏதும்உன் செய்கையில் இல்லை.

    வேதம்வே தாந்தங்கள் வளர்த்து
    வேண்டிய வளம்முற்றும் பொருந்திப்
    பூதங்கள் விபத்துகள் குறைந்து
    பூமியில் இணையற்ற நாட்டில்
    சாதமும் வயிற்றிற்கில் லாமல்
    சாகாதும் பிணமெனத் தளர்ந்தோம்
    ஏததன் காரணம் என்றே
    எண்ணவும் மாட்டனை நெஞ்சே!

    தன்னுயிர் போற்பிற உயிரைத்
    தாங்கிய பெரியவர் வாழ்ந்து
    பொன்னொளி வீசிய நாட்டின்
    புகழறம் நீபிறந் தழித்தாய்
    அன்னியர்க் குளவுகள் சொல்லி
    அவர்தந்த எச்சிலை அருந்தி
    உன்னுடன் பிறந்தவர் வருந்த
    உடல்சுகித் திருந்தனை மனமே!

    மாற்றலர்க் கிடங்கொடுத் தேழை
    மக்களைப் பிழிந்துடல் வளர்த்தாய்
    கூற்றுவன் கணக்கிடும் நாளில்
    கூறுவை பதிலென்ன மனமே!
    வீற்றிருந் தாண்டஉன் அரசை
    விற்றுடல் சோம்பினை யினிமேல்
    ஆற்றுவை இப்பழி அகற்ற
    அன்னையின் விடுதலைக் கறமே.

    சொந்த சுதந்தரம் மறந்தாய்
    சோற்றினுக் குடல்சுமந் திருந்தாய்
    பந்தம கன்றிட நினையாய்
    பாரதத் தாயினைப் பாடாய்
    அந்தமி லாதவள் செல்வம்
    அன்னியர்க் கிழந்தனை குடிகள்
    கந்தையும் கஞ்சியும் அற்றார்
    காரணம் நீயெனக் கருதாய்.

    அடிமையிற் பழகினைப் பொழுதும்
    ஆண்மையை மறந்தனை முழுதும்
    குடிமுறை குறைந்தனை சிறிதும்
    குலமுறை நினைந்திலை பெரிதும்
    மிடிமையிற் கிடந்ததுன் நாடு
    மேன்மையை இகழ்ந்ததுன் வீடு
    மடமையில் மயங்கியிப் பிறப்பின்
    மகிமையை மறந்தனை மனமே!

    கொண்டவள் குலக்கொடி வாடக்
    கூத்தியர் மையலிற் குறையும்
    வண்டர்கள் எனவல்ல முன்னோர்
    வழக்க ஒழுக்கத்தை மறந்து
    கண்டவர் சிரித்திடக் களித்து
    கற்றவர் மொழிகளைப் பழித்தாய்
    அண்டிய அயலவர் மயக்கால்
    அழித்தனை மனையறம் அறிவோ?

    ஜாதியை மதத்தினைப் பழித்துச்
    சண்டையில் உவந்தனை மனமே
    வாதுகள் மிகுந்தன நாட்டில்
    வறியவர் வரிகளால் வருந்த
    ஏதினி விடுதலை எனவே
    யாவரும் ஏங்கினர் நல்லோர்
    ஓதிய ஒற்றுமைக் குழைத்தே
    ஒப்புற ஒழுகுவை உயர்வாய்.

    தேனுள்ள தாமரை மேலே
    தினமுள்ள தவளையைப் போலே
    நானுள்ள இப்பெரும் நாட்டின்
    ஞாலமெல் லாந்திரண் டாற்போல்
    ஊனுள்ள தேகத்தி னோடும்
    உன்முன்னே காந்தியன் றுற்றும்
    ஏனென்ன என்றிலை மனமே
    இருந்தென்ன போயென்ன நீயே!

    ஆண்டவன் உனக்கென்ற நாட்டில்
    அன்னியர்க் கரசளித் தடிமை
    பூண்டுடல் வளர்த்தனை நெஞ்சே!
    புண்ணியம் உனக்கிலை; நரகே.
    மீண்டுமுன் நாட்டினை மீட்க
    மெய்ப்பொருள் ஆவியும் ஈந்தே
    ஆண்டொழில் புரிகுவை யாயின்
    ஆன்ம சுதந்திரம் அடைவாய்.

    76. சுதந்திரம் வேண்டும்

    கண்ணொளி யின்றி மற்றக்
    கட்டழ கிருந்தா லென்னப்
    பண்ணளி இனிமை யூட்டாப்
    பாட்டுகள் கேட்ப தென்னப்
    புண்ணியப் புகழொன் றில்லாப்
    பொற்பொதி யுடையார் போலும்
    திண்ணிய சுதந்தி ரத்தின்
    தெரிசனம் இல்லா வாழ்க்கை.

    உண்டிகள் பலவும் செய்தே
    உப்பிலா துண்ணல் போலும்
    கண்டொரு கனிவு சொல்லக்
    கனிவிலான் விருந்து போலும்
    பெண்டரும் அழகு மிக்காள்
    பிரியமில் லாமை யக்கும்
    தொண்டுசெய் துரிமை யின்றிச்
    சுகித்துடல் வளர்க்கும் வாழ்க்கை.

    அன்பறம் வளர்த்தி டாமல்
    ஆற்றலும் அறிவும் குன்றும்
    வன்புகள் சூதும் வாதும்
    வழக்குகள் வளரும் வாழ்வின்
    இன்பமும் ஊக்கம் ஆன்ம
    எழுச்சியும் இன்றி என்றும்
    துன்பமும் சோம்பல் சூழும்
    சுதந்தரம் இல்லா நாட்டில்.

    கல்வியும் கலைகள் யாவும்
    களைமிகும் பயிர்க ளாகும்
    செல்வமும் புகழும் தேயும்
    செருக்கவர் தருக்கி வாழ
    நல்லவர் வருந்தி வாட
    நடுநிலை ஞாயங் கெட்டுத்
    தொல்லைகள் கட்சி கட்டும்
    சுதந்திரம் இழந்த நாட்டில்.

    இச்சைபோல் இருந்து வாழ
    ஈப்புழு எறும்பும் கோரும் ;
    உச்சமாம் மனித ஜென்மம்
    சுதந்திர உணர்ச்சி யின்றி
    நச்செனும் அடிமை வாழ்வை
    நயந்திட ஞாய முண்டோ?
    நிச்சய சபதம் பூண்டு
    சுதந்திரம் நிலைக்கச் செய்வோம்.

    உலகினுக் கறிவு தந்த
    உண்மைகள் மிகுந்து ஞானக்
    கலைகளைக் கணித்து ஜீவக்
    கருணைசேர் நமது நாடு
    பலபல கொடுமை முற்றிப்
    பதைத்திடும் பிறநாட் டார்க்கு
    நலமெடுத் துரைக்க வேண்டும்
    சுதந்திரம் நமக்கு வேண்டும்.

    77. சுதந்திரமில்லா ஒரு நாடு

    சுதந்திரத் திருநாள் தொழுவோம்நாம்
    துன்பம் தொலைந்தினி எழுவோம்ஆம்
    நிதந்தரும் தரித்திரம் நீங்கிடுவோம்
    நீதியும் அறங்களும் ஓங்கிடுவோம். . .(சுதந்தர)

    கோயில் குளங்களை இடித்தெரியும்
    குழந்தைகளை பெண்களைக் கொலைபுரியும்
    பேயின் கூத்தினைத் தடுத்திடவே
    பெரிதும் சுதந்திரம் தொடுத்திடுவோம். . .(சுதந்தர)

    மூர்க்கர்கள் உலகினை ஆள்வதையும்
    முற்றிலும் தருமம் தாழ்வதையும்
    போக்கிடச் சுதந்திரம் வேண்டிடுவோம்
    புண்ணிய முறைகளில் ஆண்டிடுவோம். .(சுதந்தர)

    பகைவர்கள் தங்களுக் குபசாரம்
    பக்தரைச் சிறையிடும் அபசாரம்
    நகைமிகும் அரசியல் முறைமாற
    நம்முடைச் சுதந்திரம் நிறைவேற . .(சுதந்தர)

    சுதந்திரம் இல்லா ஒருநாடு
    சூழ்புலி பேய்மிகும் பெருங்காடு ;
    எதிர்த்திடும் துயர்களைச் சகித்திடுவோம் ;
    எம்முடைச் சுதந்திரம் வகித்திடுவோம். . .(சுதந்தர)

    பொதுஜன நாயக முறைகாணும்
    பூரண சுதந்திரம் பெறவேணும் ;
    எதுதடை நேரினும் அஞ்சாமல்
    எவரையும் அதற்கினிக் கெஞ்சாமல் . .(சுதந்தர)

    78. சுதந்தரத் தேவி

    சுதந்தரத் தேவியைத் தொழுவோம் வாரீர்
    சுகம்பெற அதுதான் வழியாம் பாரீர்
    பதந்தரும் மானிடப் பண்புகள் வளரும்
    பரமனை உணர்ந்திடப் பக்தியும் கிளரும்.

    விடுதலை யடைந்தது சுதந்தரம் இல்லை
    வெற்றிகள் என்பதும் வெறிதரும் தொல்லை
    கெடுதலை நீக்கிடக் கிருபைகள் செய்யும்
    கேண்மையின் வடிவே சுதந்தரத் தெய்வம்.

    அன்னிய உதவியை அவசியம் நீக்கும் ;
    அதுதான் சுதந்தர ஆற்றலைக் காக்கும் ;
    பொன்னிலும் உயர்ந்தது சுதந்தரச் சிறப்பு ;
    பொறுமையும் வாய்மையும் அதற்குள பொறுப்பு.

    ஆயுத வெறிகளை அப்புறம் ஒதுக்கி
    அன்பின் நெறிகளில் அரசியல் புதுக்கி,
    சாய்கிற வரையிலும் சமரசம் பரப்பி,
    சண்டைகள் விலக்குதல் சுதந்தரப் பொறுப்பு.

    அற்புதன் காந்தியின் அறநெறி கொண்டோம் ;
    அடிமை விலங்குகள் அகன்றன கண்டோம் ;
    கற்பெனக் காந்தியின் நன்னெறி காப்போம் ;
    கருணையும் ஆற்றலும் கலந்திட நோற்போம்.

    79. நம் சுதந்தரம்

    சுதந்தரம் அடைந்தோம் என்ற
    சுகங்களை அடையு முன்னால்
    எதிர்ந்தன எதிர்பா ராத
    இடர்பல சகித்து வென்றோம்
    முதிர்ந்துள யுத்த வேகம்
    முற்றிலும் மறைந்து போகும்
    விதந்தனில் நமது நாட்டின்
    சுதந்தரம் உதவ வேண்டும்.

    அரும்பெரும் காந்தி யண்ணல்
    அற்புத அறிவு சேர்ந்த
    பெருந்திறல் காங்கி ரஸ்தன்
    பெருமையிற் குறைந்து போகக்
    குறும்புகள் வளர்ந்தி டாத
    குறியுடன் கொள்கை காத்து
    விரும்பிடும் ராம ராஜ்ய
    சுதந்தரம் விளங்க வேண்டும்.

    அதிகார மோக மின்றி
    ஆதிக்க தாக மின்றிச்
    சதிகார எண்ணம் சேராச்
    சமதர்ம உணர்ச்சி யோடு
    துதிபாடி நாட்டை வாழ்த்தும்
    தொண்டர்கள் சூழ்ந்து நிற்கும்
    நிதியாக காங்க்ரஸ் நின்று
    சுதந்தரம் நிரக்க வேண்டும்.

    காந்தியை மறந்தி டாமல்
    கருணையைத் துறந்தி டாமல்
    சாந்தியிற் குறைந்தி டாமல்
    சத்தியம் இரிந்தி டாமல்
    மாந்தருக் கறிவு காட்டும்
    மாபெரும் சோதி யாக
    நேர்ந்துள நமது நாட்டின்
    சுதந்தரம் நிலைக்க வேண்டும்.

    பாரினில் ஒருநா டேனும்
    நம்மிடம் பகைகொள் ளாமல்
    சீரிய முறையில் ராஜ
    நீதியின் செம்மை காத்துப்
    போரிட நினைப்பா ருண்டேல்
    புலிகண்ட மான்போல் அஞ்சத்
    தீரமாய் நமது நாட்டின்
    சுதந்தரம் திகழ வேண்டும்.

    ஆயுத வெறிகள் மிஞ்சி
    அழிவுக்கே முனைந்து நிற்கும்
    தீயன குறிகள் கண்டே
    உலகெலாம் திகைக்கும் துன்பை
    நாயகன் காந்தி தந்த
    நன்னெறி தன்னைக் காட்டும்
    தாயகம் நமது நாட்டின்
    சுதந்தரம் தடுக்க வேண்டும்.

    80. சுதந்தரச் சபதம்

    அன்னியர்கள் நமைஆண்ட அவதி நீங்கி
    அரசுரிமை முழுவதையும் அடைந்தோம் நாமே
    என்னினும்என்? சுதந்தரத்தின் இன்பம் காண
    எவ்வளவோ மனமாற்றம் இன்னும் வேண்டும் ;
    தன்னலமே பெரிதாகக் கருதி டாமல்
    பொதுநலமே தன்னலமாய்த் தரிக்க வேண்டும் ;
    பொன்னின்உயர் சுதந்தரத்தைப் பாது காக்கப்
    பொறுப்புணர்ந்து கடமைகளைப் புரிய வேண்டும்.

    உயிர்கொலையை அஞ்சிஅஞ்சி ஒதுக்க வேண்டும் ;
    உயிர்கொடுக்க அஞ்சாத உறுதி வேண்டும் ;
    பயிற்சியுடன் அன்புநெறி பழக வேண்டும் ;
    பல்லுயிரும் நல்லுறவாம் பரிவு வேண்டும் ;
    முயற்சிமிக உணவளிக்கும் தொழில்க ளெல்லாம்
    முன்னேறப் புதுமுறையில் முனைதல் வேண்டும் ;
    உயர்ச்சியென்றும் தாழ்ச்சியென்றும் பேதமின்றி
    உழைப்புகளில் சமமான ஊக்கம் வேண்டும்.

    அஞ்ஞானச் சூழ்நிலையை அதிக மாக்கி
    அருள்மறந்த செயல்களுக்கே ஆசை மூட்டும்
    விஞ்ஞான வெறிமறைய வேண்டு மென்ற
    வித்தகமாயச் சத்தியத்தின் விளக்காய் நிற்கும்
    இஞ்ஞாலம் இதுவரைக்கும் காணாத் தூயன்
    எம்மான்அக் காந்திமகான் ஏந்திச் செய்த
    மெய்ஞ்ஞானத் தவநெறியால் நமது தேசம்
    மேவியநல் சுதந்தரத்தின் மேன்மை காப்போம்.

    81. காந்தி தந்த குடியரசு

    எண்ணரிய தியாகிகளை எழும்ப வைத்த
    எழுதரிய காந்திமகான் தவத்தி னாலே
    மண்ணுலகம் இதுவரையில் அறியா நல்ல
    மார்க்கத்தில் அடிமைமனம் மறையச் செய்து
    கண்ணனைய சுதந்தரத்தின் காட்சி மேவக்
    கருதரிய குடியரசு தொடங்கக் கண்டோம்
    திண்ணமுடன் காந்திவழி நிற்போ மானால்
    தீராத குறைகளெல்லாம் தீர்ந்து போகும்.

    புண்படுத்தல் எதற்கெனினும் தீதே என்றும்
    பொதுவான நல்லறிவை மிகவும் போற்றி
    உண்பதற்கும் உடுப்பதற்கும் மட்டு மின்றி
    உயிர்களுக்கும் சமதர்ம உணர்ச்சி காட்டும்
    பண்புடைய மனப்பான்மை பலிக்க வேண்டி
    பக்தியுடன் காந்திவழி பயில்வோ மானால்
    மண்புகழும் குடியரசு நமதே யாகும் ;
    மனிதருக்குள் சண்டைகளை மறையச் செய்வோம்.

    சட்டதிட்டச் சிறப்புமட்டும் சரிசெய் யாது
    சைந்நியத்தின் மிகுதிமட்டும் சாதிக் காது
    கட்டுதிட்ட உணர்ச்சியுடன் குடிக ளெல்லாம்
    கடமையெனப் பொறுப்புகளைக் கருத வேண்டும்.
    திட்டமிட்டுக் காத்திருந்து சேவைசெய்யும்
    தியாகபுத்தி குடியரசின் தேவை யாகும்.
    வட்டமிட்டு நம்மறிவைப் பாது காக்க
    வள்ளலந்தக் காந்தியைநாம் வணங்க வேண்டும்.

    பிறநாட்டு வழிகளைநாம் பின்பற் றாமல்
    பிற்போக்கு வெறிகளுக்கும் இடங்கொ டாமல்
    திறம்காட்டி மெய்யறிவின் தெளிவும் சேர்ந்த
    சீலர்களைத் தேர்ந்தெடுக்கத் தெரிந்து கொண்டால்
    உறங்காமல் காந்திமகான் உபதே சத்தை
    ஊரூராய்ப் பரப்புவதில் ஊக்கம் கொள்வோம் ;
    அறங்காட்டும் புதுமுறையில் ஆட்சி செய்வோம் ;
    அதற்கென்றே அவதரித்தார் அண்ணல் காந்தி.

    எந்திரங்கள் தந்தவெறி குறைய வேண்டும் ;
    எங்கெங்கும் கைத்தொழில்கள் நிறைய வேண்டும் ;
    தந்திரங்கள் பணம்பறித்தல் தடுக்க வேண்டும் ;
    தன்னலங்கள் தலையெடுப்பை ஒடுக்க வேண்டும் ;
    சிந்தனையில் தெய்வபயம் சேர வேண்டும் ;
    செய்கையெல்லாம்பொதுநலத்தைக்கோர வேண்டும் ;
    மந்திரமாய்க் காந்திமகான் திருநா மத்தை
    மக்களெல்லாம் மறவாமல் ஜெபிக்க வேண்டும்.

    82. கற்பகச் செடி

    சுதந்தரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும்
    சுகந்தரும் உணர்ச்சியும் வேறுண்டோ?
    பதம்தரும் பெருமையும் பணம்தரும் போகமும்
    பார்த்தால் அதைவிடக் கீழன்றோ?
    இதம்தரும் அறங்களும் இசையுடன் வாழ்தலும்
    எல்லாம் சுதந்தரம் இருந்தால்தான்.
    நிதந்தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட
    நிச்சயம் சுதந்தர நிலைவேண்டும்.

    சோறும் துணிமணி சுகங்களைக் காட்டிலும்
    சுதந்தர உணர்வே மேலாகும்
    கூறும் நலங்களை விலைகொடுத் தாயினும்
    கொள்ளத் தகுந்தது சுதந்தரமே.
    வீறும், கருணையும், வித்தக ஞானமும்
    விளைவது சுதந்தர விருப்பத்தால்
    தேறும் பொழுதினில் சுதந்தரம் தொழத்தகும்
    தெய்வம் என்பது தெளிவாகும்.

    உத்தமன் காந்தியின் மெய்த்தவ பலத்தால்
    உலகம் இதுவரை கண்டறியாச்
    சுத்தநல் வழிகளில் சுதந்தரம் அடைந்தோம்
    சொல்லரும் பாக்கியம் நமதாகும் ;
    கைத்தலம் கிடைத்துள கற்பகச் செடிஇதைக்
    காயவும் கருகவும் விடமாட்டோம்
    சத்திய சபதம் பக்தியில் காப்போம்
    சர்வே சன்துணை புரிந்திடுவான்.

    83. தேசீய வாரம்

    தேசீய வாரத்தைச் சிந்திப்போம்--இந்தத்
    தேசத்தின் தந்தையை வந்திப்போம்
    மாசற்ற காந்தியின் நாமமே--என்றும்
    மனிதர் குலத்துக்குச் சேமமாம்.

    சேவைகள் காரியம் வெல்லுமா--அன்றிச்
    செல்வச் செருக்குகள் செல்லுமா
    தேவை நமக்கின்று சேவைதான்--அது
    தெய்வக் கருணையை மேவுமால்.

    சத்தியம் நம்மிற் குறைந்ததால்--பல
    சங்கடம் வந்து நிறைந்ததே.
    பத்தியம் விட்டுப் பிரிந்திடில்--என்ன
    பயனுள வாகும் மருந்துகள்?

    நீரில் குளித்திடும் ஆசையால்--சேற்றை
    நிறையத்தன் மேனியில் பூசல்போல்
    ஊரைத் திருத்திட எண்ணினோம்--சொந்த
    ஊழல் மிகுந்திடப் பண்ணினோம்.

    ஒற்றுமை சேரப் புகுந்தவர்--தம்முள்
    ஒருவரை ஒருவர் இகழ்ந்தனர் ;
    குற்றம் நிறைந்தது நாட்டிலே--உண்ணக்
    கூழும்கு றைந்தது வீட்டிலே.

    84. இலங்கைச் சுதந்திர கீதம்

    வீர கேசரி என்ன நின்றுநம்
    வெற்றி யோசை முழக்குவோம்
    விட்டொ ழிந்தது கெட்ட காலமும்
    வீழ்ந்த ழிந்தன தீமைகள்
    தூரம் ஓடின சூது வாதுகள்
    சூழ்ந்தி ருந்தன யாவையும்
    சூடு பட்டன கேடு கெட்டன
    சூழ்ச்சி வஞ்சனை ஆட்சிகள்!
    கோர மாகிய அடிமை வாழ்வெனும்
    கொடுமை தந்தன மடமைகள்
    குற்றம் முற்றிலும் பற்று விட்டன
    கூடி விட்டது விடுதலை
    ஈரம் மிக்க இலங்கை நாடினி
    இன்ப மோங்கி இலங்கவே
    இன்று தொட்டுச் சுதந்த ரம்தரும்
    இனிய வாழ்வு துவக்கினோம்.

    ஏசு நாதனைப் புத்த தேவனை
    ஏற்ற முள்ள மகம்மதை
    இணையி லாதநம் காந்தி அண்ணலை
    ஈன்று மெய்ப்புகழ் ஏந்திடும்
    ஆசி யாவினில் பகுதி யாகிய
    அழகு சொட்டு மிலங்கையில்
    ஆதி வந்தவர் பாதி வந்தவர்
    யாவ ராயினும் இவ்விடம்
    வாச மாயுள மக்கள் யாவரும்
    நேச மாயினி வாழவே
    வம்பு துன்புகள் வாதபேதமும்
    வந்தி டாவகை ஆளுவோம்.
    ஈச னுண்மையை எண்ணு புண்ணிய
    இந்த நாட்டு நினைப்புடன்
    எதிரி யென்றிட எவரு மின்றியே
    சுதந்த ரக்கொடி ஏற்றுவோம்.

    மலைவ ளத்திலும் நதிவ ளத்திலும்
    மரவ ளத்திலும் மிக்குளோம்
    மதிவ ளர்த்தினி நிதிவ ளர்த்திடும்
    மார்க்கம் முற்றிலும் தீர்க்கமாம் ;
    கலைவ ளர்த்தொரு நிலைகொ டுத்திடும்
    கருணை வாழ்வு நடத்துவோம்
    கடமை செய்தபின் உரிமை எய்திடும்
    கதிய றிந்த கருத்துடன்
    கொலைவ ளர்த்திடும் மதவெ றித்திமிர்
    கொடுமை முற்றிலும் அற்றதாய்க்
    குவல யத்தவர் கவலை யற்றிடக்
    கூடு மானதைச் செய்யவே
    அலைக டல்நடு அரண மைந்துள
    அழகு கொஞ்சு மிலங்கையில்
    அச்ச மற்ற சுதந்த ரத்துடன்
    ஆண்மை யோடர சாளுவோம்.

    சேர சோழரின் பாண்டி மன்னரின்
    செந்த மிழ்த்திரு நாட்டுடன்
    சேர்ந்தி ருந்திட நேர்ந்தி டும்படி
    செய்து வைத்தது தெய்வமே!
    தீர யோசனை செய்யி லிந்தநம்
    தீவின் நன்மைகள் யாவையும்
    திட்ட மாகவும் ஒட்டி நிற்பது
    தேவி இந்தியத் தாயுடன்
    தூர மாகிய தேச மக்களின்
    தொடர்பு வேண்டிய தென்னினும்
    தொன்று தொட்டுளம் ஒன்று பட்டுள
    தொலைவி லாத சரித்திரம்
    வாரம் மிக்குள இந்தி யாவுடன்
    நாரம் மிக்குள நட்புடன்
    வந்த இந்த சுதந்த ரத்தினை
    எந்த நாளிலும் வாழ்த்துவோம்.

    புத்த தேவரின் போத நன்னெறி
    போற்றும் சிங்கள மக்களும்
    பூர ணத்தமிழ் ஞான மென்பதைப்
    பூசை செய்திடும் தமிழரும்
    ஒத்து வாழ்வது மெத்த வும்சுல
    பத்தி லாவது உண்மையால்
    உன்ன வேறினி என்ன வேற்றுமை?
    ஒன்று மேயிலை என்னலாம்.
    சத்தி யத்தினும் சாத்வி கத்தினும்
    சார மாகிய காந்தியின்
    சமர சத்தினி சங்க நாதம்
    முழக்கு கின்றஇச் சமயமே
    யுத்த மென்கிற பித்தை வெட்டிட
    உலகி னுக்கொரு உதவியாய்
    ஊழி யம்செய ஈழ நாடுதன்
    உரிமை பெற்றதை வாழ்த்துவோம்.

    85. ஆயுத பலத்தை நம்பாதே

    ஆயுத பலத்தை நம்பாதே
    ஐரோப் பியர்போல் வெம்பாதே
    ஞாயமும் அன்பும் நமதுதுணை
    நமக்கார் உலகில் வேறுஇணை?

    எந்திர சக்திகள் ஏய்த்துவிடும்
    எய்தவர் தமையும் மாய்த்துவிடும்
    தந்திர யுக்தியும் சதமல்ல
    தாரணி மதிப்பது அதையல்ல.

    சாகிற துணிச்சல் போதாது
    சற்குணம் இலையேல் தீதாகும்
    வேகிற நெருப்பால் சமைத்திடலாம்
    வெறுந்தணல் உணவாய் அமைந்திடுமோ?

    தைரியம் எத்துணை இருந்தாலும்
    தர்மமும் கருணையும் பொருந்தாமல்
    செய்கிற தெல்லாம் சிறுமை தரும்
    செம்மையும் நன்மையும் வறுமையுறும்.

    வீரரும் சேனையும் வேண்டியதே
    வெல்லவும் கொல்லவும் தூண்டிடவா!
    ஈரமும் இரக்கமும் கெடுத்தவரை
    இடித்துரைத் தறவழி நடத்திடவே.

    விஞ்ஞா னத்தால் கொல்லுவதை
    வீரர்கள் போரெனச் சொல்லுவதோ?
    அஞ்ஞா னத்தின் வடிவன்றோ
    அணுகுண் டாகிய வெடிகுண்டு?

    கண்டுபி டித்தவர் நடுங்குகிறார்!
    காணா தவர்கள் ஒடுங்குகிறார்!
    மண்டலத் தறிஞர்கள் மயங்குகிறார்!
    மறைத்திட முயற்சியில் தியங்குகிறார்!

    கொல்லும் வித்தைகள் பெருகுவதா!
    கொஞ்சிடும் வாழ்வினி அருகுவதா!
    சொல்லும் வல்லவர் சொல்லுங்கள்
    சுதந்தரம் இதற்கா சொல்லுங்கள்?

    இதுதான் தருணம் அடுத்துளது
    இம்சையின் தீமையை எடுத்துரைக்க.
    பொதுவாய் உலகினில் போர்வெறியை
    போக்கிடப் புகல்வோம் ஓர்நெறியை.

    உத்தமன் காந்திசொல் கடைப்பிடித்தால்
    உண்மையில் போர்களைத் தடைப்படுத்தும்
    சத்தியம் சாந்தமும் வளராமல்
    சண்டையின் மோகமும் தளராது.

    இந்திய மக்கள் பொதுச்சிறப்பாம்
    இம்சை வழிகளில் அதிவெறுப்பே ;
    வந்தனை புரிவது வாய்மைகளை
    வணங்குதல் வாழ்க்கையின் தூய்மையரை.

    கொலைவழி மறுப்பவர் தமிழ்மக்கள்
    கொள்கையில் சிறப்பவர் தமிழ்மக்கள்
    நிலைதரும் வள்ளுவன் மொழிகற்போர்
    நிச்சயம் காந்தியின் வழிநிற்பார்.

    86. புரட்சி வேண்டும்

    புரட்சி வேண்டும் புரட்சி வேண்டும்
    புரட்சி வேண்டும்டா!
    புரட்சி என்னும் சொல்லின் பொருளிலும்
    புரட்சி வேண்டும்டா!

    புத்தம் புதிதென நத்தப் படுவதைப்
    புரட்சி என்றிடலாம் ;
    நித்தம் கண்டுள சொத்தை வழிகளில்
    புரட்சி நின்றிடுமோ!

    மருட்சி தந்திடும் முரட்டு வார்த்தையில்
    புரட்சி வந்திடுமோ?
    திரட்சி யாகிய மகிழ்ச்சி வாழ்க்கையைத்
    தீயன தந்திடுமோ!

    பொதுநலம் வந்திடப் புதுவழி தந்தால்
    புரட்சி அதுவாகும் ;
    சதிபல செய்திடும் வழிகளில் விழுவதும்
    புரட்சி மதியாமோ?

    வேதனை யேதரும் தீதுள நெறிபல
    புரண்டு வீழ்ந்திடும்ஓர்
    போதனை தந்திடும் நூதன வழிகளில்
    புரட்சி சூழ்ந்திடுவோம்.

    சூதுகள் அரசியல் நீதிகள் என்றிடும்
    சுத்தப் பொய்யுரையை
    வீதியில் சந்தியில் விழிக்க விட்டொரு
    புரட்சி செய்திடுவோம்.

    கொன்று குவிப்பதை வென்றி எனச்சொலும்
    கொச்சை எண்ணமெலாம்
    சென்று மறைந்தன என்று சொலும்ஒரு
    புரட்சி பண்ணிடுவோம்.

    சண்டையும் கொலைகளும் பண்டைய நாள்முதல்
    கண்டு சலித்ததடா!
    வண்டர்கள் வழிகளைக் கொண்ட புரட்சியில்
    நன்மை பலித்திடுமோ?

    தீமையி னால்எதும் நன்மைகள் வரினும்
    தேய்ந்தவை மாய்ந்துவிடும்.
    வாய்மையின் அன்பால் வருகிற நலமே
    புரட்சி வாய்ந்ததுவாம்.

    உத்தமன் காந்தியின் உபதே சம்தான்
    புரட்சி போதனையாம் ;
    சத்திய நெறிதரும் சாத்விக முறையே
    புரட்சி சாதனையாம்.

    87. மன்னவன் நானே

    மன்னவன் நானே மந்திரி என்சொல்
    மற்றவர் யாருக்குச் சுற்றமிது?
    என்னுடை நாடு என்னுடை வீடு
    யாரிதில் என்னை மிரட்டுவது!
    அன்னியர் இங்கே உள்ளவர் யாரும்
    அண்டிப் பிழைத்திட வந்தவரே!
    என்னுடை ஏவல் சொன்னதைச் செய்தோர்
    என்னை அடக்குதல் இன்னுமுண்டோ?

    என்னுடைக் காடு என்னுடைப் பாடு
    என்றன்வெள் ளாமையை யார்அறுக்க?
    மன்னவன் நானே மந்திரி என்ஆள்
    மற்றவர் யாரிதை ஒத்துக்கொள்ள!
    சொன்னதைச் செய்து பண்ணையைக் காக்கச்
    சோற்றுக்கு வந்தவன் மாற்றியதேன்?
    இன்னமும் இந்தச் சின்னத் தனத்தில்
    ஏங்கிக் கிடந்திடத் தூங்குவனோ!

    என்னுடைப் பெட்டி என்னுடைத் துட்டு
    யாரிடம் சாவி இருத்தல்சரி?
    பொன்னையும் வெள்ளிச் செம்புஎன் றாலும்
    பூட்டவும் நீட்டவும் என்பொறுப்பு ;
    சின்னப் பயலோநான் சித்தம்கெட் டேனோ
    சீச்சீ! ஏன்இந்த ஏச்செனக்கு?
    மன்னவன் நானே மந்திரி வைப்பேன்
    மற்றவர் யாருடைச் சித்தம்அது?

    மந்திரி நானே மன்னன் ஆவேன்
    மற்றவர் யாருக்குக் குற்றம்இதில்?
    இந்திய நாட்டில் நொந்தவ ரின்றி
    இன்னர சாக்குவேன் என்னரசை!
    அந்தமி லாதான் ஆண்டவன் தந்தான்
    ஆரிய நாடென்றன் ஆட்சியன்றோ!
    சிந்திய செல்வம் சேகரம் செய்து
    சீக்கிரம் பாக்கியம் ஆக்கிவைப்பேன்!

    88. புது வழி

    எத்திசையில் எம்மொழியில் எவர்வாய்ச் சொல்லில்
    எப்படியாய் வரும்கதைகள் எதுவா னாலும்,
    சத்தியத்தின் வழிகாட்டும் அறிவை யெல்லாம்
    தமதாக்கிக் கலைவளர்த்த தமிழர் நாட்டில்,
    இத்தினத்தே கூட்டியுள்ளோம் இனிதே எண்ணி
    இந்தியத்தாய் சுதந்தரத்தை எய்தும் மார்க்கம்
    நித்தியமாம் அறங்களையே நினைவில் வைத்து
    நிந்தையில்லாச் செயல்முறைகள் நிறுவ வேண்டும்.

    மன்னவரைச் சதிபுரிந்து வெட்டி மாய்த்தும்,
    மாறுபட்ட கருத்துடைய வார்த்தை யன்றைச்
    சொன்னவரைச் சுட்டெரித்தும், துன்மார்க் கத்தால்
    அயல்நாட்டைப் படையெடுத்துத் துன்பம் செய்தும்,
    இன்னபல கொடுமைசெயும் பிறநாட் டாரை
    இந்நாட்டின் விடுதலைக்குப் பின்பற் றாமல்
    முன்னையநம் நாகரிகம் முரண்ப டாமல்
    முடிவுசெய்வீர் சுதந்தரப்போர் முறைக ளெல்லாம்.

    அடிமைகொளும் நம்விலங்கை அகற்ற வேண்டும் ;
    அதையும்உயர் அன்பின்வழி அகற்ற வேண்டும் ;
    கொடுமைசெயும் வழக்கமெல்லாம் கொளுத்த வேண்டும் ;
    ஒருவருக்கும் கொடுமையின்றிக் கொளுத்த வேண்டும் ;
    'முடியுமெனில் அப்படியே முடிப்போம் ; இன்றேல்
    முயற்சியோடு நாமெல்லாம் முடிவோம்,' என்னும்
    திடமதுதான் தீரமோடு வீர மாகும் ;
    தெரிந்துரைகள் அதற்குதவச் செப்பு வீரே.

    ஒருபகுதியில் ஒருஜாதி ஒரும தத்தார்
    ஒன்றாகச் சேர்ந்திருந்தார் உறவாய் என்னும்
    மருவாத பழங்கால நிலைமை யெல்லாம்
    மலையேறிப் போனதுகாண் ; மண்மேல் இந்நாள்
    ஒருநாட்டில் பலமதங்கள் பலநாட் டாரும்
    ஒன்றாகச் சேர்ந்திருக்கும் உறவே வேண்டும் ;
    பெருநீதி இதைமனத்தில் பிசகி டாமல்
    பேசிடுவோம் விடுதலையின் பேச்சை யெல்லாம்.

    வள்ளுவரின் வாழ்க்கைதனை நினைப்பு மூட்டி
    வான்புகழும் திருக்குறளை நடந்து காட்டும்
    கள்ளமிலாக் காந்திமுனி காட்டித் தந்த
    கருணையோடு சத்தியத்தின் வீரம் சேர்ந்த
    தெள்ளியநல் புதுவழியே உலகுக் கின்று
    தேவையென்று தெரிந்தவர்கள் செப்பு கின்றார்
    தள்ளரிய அப்பெரிய தவத்தைத் தாங்கத்
    தமிழர்கள்நாம் மிகமிகவும் தகுதி ஆவோம்.

    89. தமிழ் வழி அரசு

    தமிழ்மொழி வளர்த்த ஞானம்
    தரணியில் பரவி எங்கும்
    தமிழ்வழி அரசு நீதி
    தழைத்திட முடியு மானால்
    குமிழ்தர உலகை வாட்டும்
    கொடுமைகள் குறையும், உண்மை,
    அமிழ்தினை உண்டா லென்ன
    அனைவரும் சுகித்து வாழ்வோம்.
    சிலம்பினைக் காட்டிக் கேட்ட
    கண்ணகி சீற்றம் கண்டு
    குலம்பழி கொண்ட தென்று
    குமுறிய துயரால் நொந்து
    நலம்பிழைத் தறத்தைக் கொன்ற
    நாணத்தால் உயிரை விட்ட
    தலம்புகழ் மன்னன் காதை
    தமிழுக்கே சொந்த மாகும்.

    கன்றினை மைந்தன் கொல்லக்
    கதறிய பசுவைப் பார்த்தான்
    'இன்றுனக் குற்ற துன்பம்
    எனக்குறச் செய்வேன்' என்று
    தன்மகன் உயிரைக் கன்றின்
    உயிருக்கே ஈடாய்த் தந்து
    வென்றிகொள் நீதி மன்னன்
    வேறெந்த மொழியில் உண்டு?

    கொண்டவன் அயலூர் போகக்
    குலமகள் தனித்த வீட்டை
    அண்டினர் கதவைத் தட்டில்
    கரத்தினை அறுப்போம் என்று
    விண்டதை மறந்து செய்த
    குற்றத்தால் விதித்த வாறே
    தண்டனை தனக்கே தந்த
    மன்னனும் தமிழ னாகும்.

    திடமிகும் தெய்வ பக்தன்
    தீவிர தேச பக்தன்
    கடமையும் தீர வீரக்
    கருணசேர் கட்ட பொம்மன்
    'அடிமையாய் வாழ மாட்டேன்
    அன்னியர்க் கஞ்சேன்' என்று
    கொடுமையை எதிர்த்து நின்ற
    கொள்கையும் தமிழின் கூற்றாம்.

    உள்ளமும் உடலும் கூம்ப
    உலகெலாம் வணங்கும் ஜோதி
    வள்ளலக் காந்தி செய்த
    அறந்தரு வாழ்க்கை முற்றும்
    தள்ளரும் அறங்க ளாகத்
    தமிழ்த்திருக் குறளில் முன்பே
    வள்ளுவன் வாழ்ந்து சொன்ன
    கொலைதவிர் வாய்மை யாகும்.

    90. சாந்தி தரும் கொடி

    கற்புடைப் பெண்கட் கெல்லாம்
    கணவனே தெய்வ மென்பார் ;
    சொற்பொருள் அறிந்தோர்க் கெல்லாம்
    சொன்னசொல் தெய்வ மென்பார் ;
    மற்பெரும் வீரர்க் கெல்லாம்
    மானமே தெய்வ மாகும் ;
    நற்பெயர் நாட்டிற் காக்கும்
    நமக்கிந்தக் கொடியே தெய்வம்.

    அன்னிய கொடிக ளெல்லாம்
    அரசியல் ஒன்றே பேசிப்
    பொன்னியல் போக வாழ்வின்
    பொதுநலம் தனையே கோரும் ;
    என்னுடைப் பரத நாட்டின்
    இக்கொடி இந்த வாழ்வின்
    பின்னையும் அறிவு தேடும்
    பேரின்பம் தனையும் பேசும்.

    பிறநாட்டுக் கொடிக ளெல்லாம்
    பிறநாட்டைப் பிடிக்க எண்ணி
    மறம்நாட்டி மக்கள் தம்மைச்
    சண்டையில் மடியச் செய்யும் ;
    அறம்நாட்டி உலகை யாண்ட
    அரியநம் கொடியோ, மூன்று
    நிறம்காட்டி நிலையா யுள்ள
    நீதியே ஓத நிற்கும்.

    பச்சையாம் நிறத்தினாலே
    பசுமையாம் அன்பை யூட்டும் ;
    நிச்சயம் வெள்ளை அந்த
    நிமலமாம் உண்மை நீட்டும் ;
    துச்சமிவ் வுலக மென்னும்
    துறவினைக் காவி சொல்லும் ;
    அச்சமில் குடிசைக் கூலி
    அதிலொரு ராட்டை காட்டும்.

    தருமமே குறியாக் கொண்டு
    தனக்கென்று எதையும் வேண்டாக்
    கருமமே கடனென் றோதிக்
    கருணையின் வழியே காட்டி
    வருமமும் வஞ்சம் நீக்கும்
    வாழ்க்கையை வகுத்துப் பேசும்
    பெருமைநம் கொடியைப் போலப்
    பிறிதொரு கொடியும் உண்டோ!

    இந்திய மகனே! இந்த
    இணையிலாக் கொடியைக் காத்தல்
    முந்தியுன் முன்னோர் தந்த
    அறமெலாம் முடிப்ப தாகும்
    எந்தஓர் நாட்டிற் கேனும்
    எதிரியாய் எடுத்த தல்ல
    சந்ததம் உலகுக் கெல்லாம்
    சாந்தியைத் தரவே யாகும்.

    91. இளைஞரின் சபதம்

    'எந்தத் தேசம் எந்தக் குண்டை
    எந்த நாட்டிற் போடுமோ'
    என்று மக்கள் உலகில் எங்கும்
    ஏங்கும் இந்த நாளில்
    இந்த நாடு பெற்றெ டுத்த
    இளைஞர் யாரும் கூடுவோம் ;
    இன்பமாக மனிதர் வாழ
    ஏற்ற மார்க்கம் நாடுவோம் ;
    சொந்த ஞானத் தெளிவு கொண்டு
    வந்த நம்சு தந்தரம்
    சுத்த மாக நின்று சாந்த
    சத்தி யத்தைக் காக்கவே
    தந்து போன இந்த நாட்டின்
    தந்தை யாகும் காந்தியைத்
    தாழ்ந்து போற்றி உலக முற்றும்
    வாழ்ந்தி ருக்கப் பண்ணுவோம்.

    இமயம் தொட்டுக் குமரி மட்டும்
    இங்கி ருக்கும் யாவரும்
    இந்தி யாவின் மக்க ளென்ற
    சொந்தம் காணச் செய்குவோம்.
    சமயம் என்றும் ஜாதி என்றும்
    சண்டை யற்று வாழவும்
    சமதை யாக மொழிகள் யாவும்
    சலுகை பெற்று வளரவும்
    அமைதி யாக தேச சேவை
    அச்ச மின்றி ஆற்றுவோம் ;
    அவதி மிக்க ஏழை மக்கள்
    வறுமை போக மாற்றுவோம் ;
    நமது நாடு உலகி னுக்கு
    நல்ல மார்க்கம் காட்டவே
    நாங்கள் என்றும் பணிபு ரிந்து
    வெற்றி மாலை சூட்டுவோம்.

    முன்னி ருந்த நமது நாட்டின்
    முனிவர் கண்ட ஞானமே
    முற்று மிந்த உலகி னுக்கும்
    உற்ற நன்மை யானது
    என்ன துன்பம் எந்த வேளை
    எங்க டுத்த போதிலும்
    எந்தை காந்தி தந்த சாந்த
    மந்தி ரத்தை ஓதுவோம் ;
    தன்ன லம்ம றந்து நாட்டின்
    நன்ன லத்தைத் தாங்கவும்
    தரணி தன்னில் யுத்தம் என்ற
    இரணப் பேச்சு நீங்கவும்
    மன்ன னிந்த பரத நாட்டின்
    மகிமை காக்கும் ஜவஹர்லால்
    மாசி லாத சேவை செய்து
    பேசும் நீதி தவறிடோம்.

    92. தேசபக்தர் திருக்கூட்டம்

    தேச பக்தர்திருக் கூட்டம்--தேச
    சேவை செய்வதெங்கள் நாட்டம் ;
    பாச பந்தமெல்லாம் ஓடி--விடப்
    பாரதப் பெருமை பாடி. . . .(தேச)

    பிச்சை யெடுக்கவந்த தல்ல--வேறு
    பிழைக்க வழியிலையென் றல்ல
    இச்சை வந்துமிகத் தள்ள--தேசம்
    இருக்கும் நிலைமைதனைச் சொல்ல. .(தேச)

    தூங்கித் தூங்கிவிழும் தமிழா!--உன்
    தூக்கம் போக்கவந்தோம் தமிழா!
    ஏங்கிப் படுத்திருக்கும் தமிழா!--உன்னை
    எழுப்ப வந்தசக்தி தமிழா! . .(தேச)

    எழுந்து நின்றுகண்ணைத் துடைத்தே--உன்
    இருகை யாலும்கொடி பிடித்தே
    அழுந்திக் கீழிருந்து வாடும்--அன்னை
    அடிமை நீக்கவழி தேடும் . . .(தேச)

    வெட்டி வெட்டியெறிந் தாலும்--எமை
    வேறு ஹிம்சைபுரிந் தாலும்
    சுட்டி ரத்தம்சொரிந் தாலும்--நாங்கள்
    தூய்மை மாறிடோம் நாளும். . .(தேச)

    சாந்த மூர்த்தியந்தக் காந்தி--சொன்ன
    சத்தி யந்தனையே ஏந்தி
    மாந்தர் யாருமினி உய்ய--உயர்
    மார்க்க போதனைகள் செய்ய. . .(தேச)

    தேவி சக்திதுணை கொண்டு--இந்தத்
    தேசம் சுற்றிவர வென்று
    கூவிக் கூவியெங்கள் தொண்டு--செய்யக்
    குறைகள் தீருமினி நன்று. . .(தேச)

    93. சத்தியச் சங்கு

    'சத்தியம் நிலைக்கும்' என்று சங்கூதுவோம்!
    'சாந்தமே ஜெயிக்கும்' என்று சங்கூதுவோம்!
    'நித்தியம் கடவுள்' என்று சங்கூதுவோம்!
    'நீர்க்குமிழாம் வாழ்க்கை' என்று சங்கூதுவோம்!

    'நீதியே நிலைக்கும்' என்று சங்கூதுவோம்!
    'நியாயமே கெலிக்கும்' என்று சங்கூதுவோம்!
    'வாது சூது பொய்மையாவும் ஒன்றோடொன்றாய்
    வம்புகொண்டு மறையும்' என்று சங்கூதுவோம்!

    'புண்ணியம் பலிக்கும்' என்று சங்கூதுவோம்!
    'பொறுமையே கெலிக்கும்' என்று சங்கூதுவோம்!
    'மண்ணிற்செய்த நன்மைதீமை யல்லாமலே
    மற்ற தொன்றும் மிச்சமில்லை' என்றூதுவோம்!

    'தருமமே நிலக்கும்' என்று சங்கூதுவோம்!
    'தானமே தழைக்கும்' என்று சங்கூதுவோம்!
    'கருமமே சிறக்கும்' என்று சங்கூதுவோம்!
    'கடவுளுண்மை வடிவம்' என்று சங்கூதுவோம்!

    'உண்மையைக் கடைபிடித்து யர்ந்தவர்களை
    உலகமோசம் என்னசெய்யும்?' என்றூதுவோம்!
    'தண்மையான சாந்திபெற்ற தக்கோர்முன்னே
    சஞ்சலங்கள் ஓடும்' என்று சங்கூதுவோம்!

    'கோபமற்றுக் குணமிகுந்த நல்லோர்முன்னால்
    கூர்மழுங்கும் ஆயுதங்கள்'என் றூதுவோம்!
    'பாபமற்ற வாழ்க்கையுள்ள பண்பாளரைப்
    . பயமுறுத்த ஒன்றுமில்லை,' என்றூதுவோம்!

    'அன்புகொண்டு ஆசையற்ற நல்லார்களை
    அரசனும் வணங்கும்' என்று சங்கூதுவோம்!
    'வன்புதுன்பம் வஞ்சமாயம் எல்லாமிதோ
    வழிகொடுத்து விலகும்' என்று சங்கூதுவோம்!

    'கொல்லுகின்ற தில்லையென்ற நல்லோர்கள்பேர்
    குவலயத்தில் வாழும்' என்று சங்கூதுவோம்!
    'வெல்லுகின்ற போதுமாசை விட்டார்களே
    வீரர்தீரர் சூரர்' என்று சங்கூதுவோம்!

    'ஆன்மசக்தி கண்டுகொண்ட அன்பாளரை
    அடிமையாக்க யாரும்' இல்லை என்றூதுவோம்!
    தான்மறந் தகந்தைவிட்ட தக்காரையே
    தலைவணங்கும் உலகமென்று சங்கூதுவோம்!
    சாந்திசாந்தி சாந்தியென்று சங்கூதுவோம்!
    'சாத்திரங்கள் முடிவி¦'தன்று சங்கூதுவோம்!
    காந்திகாந்தி காந்தியென்று நம்நாட்டிலே
    கால்நடக்கும் வேதமென்று சங்கூதுவோம்!

    94. சங்கொலி

    சங்கொலி எழுந்தது சங்கட மழிந்தது
    தைரியம் கொள்வாய் தமிழ் மகனே!
    கங்குலும் கழிந்திடும் கதிரொளி பொழிந்திடும்
    கவலையெ லாம்விடு தமிழ் மகனே!

    கூரிருள் மறைந்திடும் குளிர்வது குறைந்திடும்
    குறுகிப் படுத்திடல் இனிவேண்டா!
    பேரருள் சுரந்திடும் பெருவழி திறந்திடும்
    பேதமை விடுவாய் தமிழ் மகனே!

    திருட்டுகள் நீங்கிடும் தீயன நடுங்கிடும்
    தீனர்க்க பயக்குரல் சங்கோசை!
    இருட்டினிற் செய்திடும் யாவையும் மறைந்திடும்
    எழுந்து கடன்முடி தமிழ் மகனே!

    சூதரும் குடியரும் சுருக்கெனப் பயப்படும்
    சுதந்திரச் சங்கொலி கேட்குதடா!
    வேதமும் கலைகளும் வித்தைகள் விளங்கிட
    விடிந்திடும் சஞ்சலம் விட்டிடுவாய்!

    மங்களச் சங்கொலி மகிழ்தரக் கேட்குது
    மயக்கம்விட் டெழுந்தினி மறைபாடு!
    எங்கணும் யாவினும் இருந்தருள் கடவுளும்
    இருக்குது பயமிலை எழுந்திரடா!

    95. இணையில்லாக் கொடி

    இந்திய நாட்டின் இணையிலாக் கொடியே
    இயங்குவாய் என்றும் வயங்கொளி பரப்பி
    தந்திரம் மோசம் தன்னலம் கருதா
    சத்தியம் நிறைந்த உத்தம வாழ்வின்
    எந்திரப் பேயின் இறுமாப் பழித்து
    ஏழ்மையும் தாழ்மையும் இல்லா தொழித்துச்
    சந்திர சூரியர் வந்துபோம் வரையிலும்
    தன்னர சாட்சியின் சின்னமாய் நிற்பாய்!

    பாரத நாட்டின் பகையிலாக் கொடியே!
    பன்னலம் மிகுந்த உன்னுடை நிழலில்
    ஊரெலாம் செழித்து உயிரெலாம் களித்து
    யாரொடும் எவரும் அன்பே அறமென
    பாரிடைக் கடவுள் படைத்ததன் பொருள்கள்
    பங்கிட மூளும் பகைத்தி றம்குன்றி
    நேரிய வாழ்வில் நியாயம் நிலவிடும்
    நீதிசேர் அரசின் ஜோதியாய் நிற்பாய்!

    ஆருயிர் நாட்டின் அரசியற் கொடியே!
    ஐம்புலன் வென்று செம்பொருள் கண்ட
    வீரிய ஞான வித்தகர் தங்கி
    வேதம் வளர்த்த இமய மலையின்
    ஊரிய மனிதன் உளம்மிக மகிழ
    உன்னதச் சிகரத் துச்சியில் நின்று
    பாருள யாரும் பணிந்திடு மாறு
    பற்பல ஊழி பறந்திடு வாயே!

    96. கொடி வணக்கம்

    கொடிவ ணக்கம் செய்வோம்--நாட்டின்
    குறைகள் நீங்கியினி உய்வோம்
    முடிவ ணங்கியதைப் பற்றி--அதன்
    மூன்று நிறக்குறிகள் சாற்றி . .(கொடி)

    புதுமை யானகொடி பாரீர்--வேறு
    பூத லத்திலிலை தேரீர்
    முதுமை யாயெவர்க்கும் பொதுவாம்--வாழ்வின்
    முறையைக் காட்டுவதும் இதுவாம். .(கொடி)

    பச்சை யானஒரு தோற்றம்--நமக்குப்
    பக்தி வேண்டுமெனச் சாற்றும் ;
    இச்சை யானபொருள் கூடப்--பக்தி
    இருக்க வேணுமதை நாட. . .(கொடி)

    துய்ய வெள்ளைநிறக் காட்சி--உண்மை
    துலங்கு மென்பதற்குச் சாட்சி
    மைய மாகநிற்கும் மர்மம்--சத்யம்
    மதங்கள் யாவினுக்கும் தர்மம். .(கொடி)

    துறவின் வர்ணமந்தக் காவி--உலகின்
    துக்கப் பூட்டினுக்குச் சாவி ;
    சிறையும் வீடுமதற் கொன்றே--என்னும்
    சேதி ஓதுவதற் கென்றே . .(கொடி)

    நடுவில் ராட்டையன்று பார்ப்போம்--அதில்
    நலிந்த பேர்க்குக்கஞ்சி வார்ப்போம்
    வடுவி லாததொழில் நூற்றல்--குடிசை
    வாழும் ஏழைக்கென்று சாற்றல். .(கொடி)

    பக்தி, சத்தியம், தியாகம்--இவற்றின்
    பண்பே வாழ்க்கையின் யூகம்
    நித்தம் நித்தமிந்த நீதி--தம்மை
    நீட்டும் இக்கொடியின் ஜோதி. .(கொடி)

    ஜாதி பேதமதில் இல்லை--மற்றும்
    சமய பேதமதில் இல்லை
    நீதி யானபல முறைகள்--தமக்கு
    நிலைய மாகும்அதன் குறிகள். .(கொடி)

    என்ன புதுமையிது பாரும்--கொடி
    ஏதிது போலென்று கூறும்.
    அன்னைக் கொடியிதனைப் பாடு--அதன்
    அடியில் நின்றுபுகழ் கூடி. . .(கொடி)

    ஏழை எளியவர்கள் யார்க்கும்--பயம்
    இல்லை யென்னஅறங் காக்கும்
    வாழி நமதுகொடி வாழி--புது
    வாழ்வு தந்தினிது ஊழி. . .(கொடி)

    97. 'ஜேய் ஹிந்த்'

    'ஜேய் ஹிந்த்' என்கிற
    ஜீவநன் னாதம்
    தேசத்தில் ஒற்றுமை
    சேர்க்கின்ற கீதம்
    பேய்கொண்ட தென்ன
    நமைப்பிடித் தாட்டும்
    பேத உணர்ச்சியை
    நாட்டைவிட் டோட்டும். .(ஜேய்)

    அச்சத்தைப் போக்கி நல்
    ஆண்மையைப் போற்றி
    அடிமைக் குணங்களை
    அடியோடு மாற்றி
    துச்சம் உயிரெனத்
    தொண்டுகள் செய்யத்
    தூண்டிடும் சக்திகள்
    ஆண்டிடும் துய்ய .(ஜேய்)

    விடுதலை ஆர்வத்தில்
    வேகத்தை மூட்டி
    வீரத் தனங்களில்
    ஆசையை ஊட்டி
    துடிதுடிப் போடிந்தத்
    தேசத்தில் எங்கும்
    சொல்லித் தராமலும்
    சொல்லி முழங்கும். . .(ஜேய்)

    'வந்தே மாதரம்'
    பாடி வணங்கி
    வாழ்த்திநம் அன்னையின்
    வெற்றி முழங்கி
    'தந்தோம் உன்றன்,
    சுதந்தரம்' என்றே
    தைரியம் சொல்வது
    'ஜேய் ஹிந்த்' அன்றோ! .(ஜேய்)

    வாலிபர் நெஞ்சின்
    வசீகர மாரன்
    வரையற்ற த்யாகி
    சுபாஷ்சந்த்ர வீரன்
    கோலிய சேனையின்
    விடுதலை கோஷம்
    குறையாது ஜேய் ஹிந்த்
    மேலுள்ள பாசம். . .(ஜேய்)

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.