மலரவன் பனிக்கும் கவினும் குலமீன் அருகிய கற்பும் கருதிஉள் நடுங்கித் திருமகள் மலர்புகும் ஒருதனி மடந்தையின்று இருகடல் ஓருழி மருவிய தென்னச் செருப்படை வேந்தர் முனைமேல் படர்ந்தநம் (5)
காதலர் முனைப்படை கனன்றுடற் றெரியால் முடம்படு நாஞ்சில் பொன்முகம் கிழித்த நெடுஞ்சால் போகிக் கடுங்கயல் துரக்கும் மங்கையர் குழைபெறு வள்ளையில் தடைகொண்டு அவர்கருங் கண்எனக் குவளை பூத்த (10)
இருள் அகச் சோலையுள் இரவெனத் தங்கிய மற்றதன் சேக்கையுள் வதிபெறும் செங்கால் வெள்ளுடல் ஓதிமம் தன்னுடைப் பெடைஎனப் பறைவரத் தழீஇப்பெற் றுவைஇனக் கம்பலைக்கு ஆற்றாது அகன்று தேக்குவழி கண்ட (15)
கால்வழி இறந்து பாசடை பூத்த கொள்ளம் புகுந்து வள்ளுறை வானத்து எழில்மதி காட்டி நிறைவளை சூல்உளைந்து இடங்கரும் ஆமையும் எழுவெயில் கொளுவும் மலைமுதுகு அன்ன குலைமுகடு ஏறி (20)
முழுமதி உடுக்கணம் காதலின் விழுங்கி உமிழ்வன போல சுரிமுகச் சூல்வளை தரளம் சொரியும் பழனக் கூடல் குவளை நின் றலர்ந்த மறைஎழு குரலோன் இமையவர் வேண்ட ஒருநகை முகிழ்ப்ப (25)
ஓர் உழிக் கூடாது உம்பரில் புகுந்து வானுடைத் துண்ணும் மறக்கொலை அரக்கர்முப் பெருமதில் பெற்றன அன்றோ மருவலர் அடைந்தமுன் மறம்கெழு மதிலே? (29)
|