|
||||||||
ஏழாம் திருமுறை-97 |
||||||||
7.097.திருநனிபள்ளி
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நற்றுணையப்பர்.
தேவியார் - பர்வதராசபுத்திரி.
985 ஆதியன் ஆதிரையன் அயன்
மாலறி தற்கரிய
சோதியன் சொற்பொருளாய்ச் சுருங்
காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங்கோன் உல
கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெருமான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே.
7.097.1
எப்பொருட்கும் முதலானவனும், ஆதீரை நாண்மீனைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும், பிரமனும் திருமாலும் அறிதற்கரிய ஒளிவடிவானவனும், சொல்லும் சொற்பொருளுமாய் நின்று, சுருங்குதல் இல்லாத வேதங்கள் நான்கினையும் ஓதியவனும், தேவர்களுக்குத் தலைவனும், உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் தந்தையும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே.
986 உறவிலி ஊனமிலி உண
ரார்புரம் மூன்றெரியச்
செறுவிலி தன்னினைவார் வினை
யாயின தேய்ந்தழிய
அறவில கும்மருளான் மரு
ளார்பொழில் வண்டறையும்
நறவிரி கொன்றையினான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே.
7.097.2
உறவுத் தொடக்கு இல்லாதவனும், குறைவில்லாதவனும், தன்னை மதியாதவரது மூன்று ஊர்களும் எரிந்தொழியும்படி அழித்த வில்லை உடையவனும், தன்னை நினைபவரது வினையெல்லாம் வலிமை குன்றி அழியும்படி, மிகவும் விளங்குகின்ற திருவருளை உடையவனும், தேனோடு மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர், மயக்கத்தைத் தருகின்ற சோலைகளில் வண்டுகள் ஒலிக்கின்ற திருநனிபள்ளியே.
987 வானுடை யான்பெரியான மனத
தாலும் நினைப்பரியான்
ஆனிடை ஐந்தமர்ந்தான் அணு
வாகியொர் தீயுருக்கொண்
டூனுடை இவ்வுடலம் ஒடுங்
கிப்புகுந் தான்பரந்தான்
நானுடை மாடெம்பிரான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே.
7.097.3
விண்ணுலகத்தைத் தனதாக உடையவனும், யாவரினும் பெரியோனும், மனத்தாலும் நினைத்தற்கரியவனும், பசுவினிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை விரும்புபவனும், நுண்ணிய பொருளாகி, சுடர் வடிவத்தைக்கொண்டு, ஊனையுடையதாகிய இவ்வுடம்பினுள் அடங்கிப் புகுந்தவனும், உலகம் எல்லாம் தன்னுள் அடங்க விரிந்தவனும், நான் உடைய செல்வமாய் இருப்பவனும் ஆகிய எம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் திருநனிபள்ளியே.
988 ஓடுடை யன்கலனா உடை
கோவண வன்னுமையோர்
பாடுடை யன்பலிதேர்ந் துணும்
பண்புடை யன்பயிலக்
காடுடை யன்னிடமா மலை
ஏழுங் கருங்கடல்சூழ்
நாடுடை நம்பெருமான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே.
7.097.4
ஓட்டினை உண்கலமாகவும், கோவணத்தை உடையாகவும், உடையவனும், ஒரு பக்கத்தில் உமையை உடையவனும், பிச்சை எடுத்து உண்ணும் தன்மையை உடையவனும், வாழ்வதற்குரிய இடமாகக் காட்டை உடையவனும், ஏழு மலைகளையும், கரிய கடல் சூழ்ந்த ஏழு நாடுகளையும் உடையவனும் ஆகிய நம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே.
989 பண்ணற் கரியதொரு படை
ஆழி தனைப் படைத்துக்
கண்ணற் கருள்புரிந்தான்
கரு தாதவர் வேள்விஅவி
உண்ணற் கிமையவரை
உருண் டோட உதைத்துகந்து
நண்ணற் கரியபிரான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே.
7.097.5
ஆக்குதற்கு அரிதாகிய சக்கரப்படை ஒன்றை ஆக்கி, அதனைத் திருமாலுக்கு அளித்தவனும், தன்னை மதியாதவனாகிய தக்கனது வேள்வியில் அவிசை உண்ணச் சென்ற தேவர் அனைவரையும் சிதறி ஓடும்படி தாக்கிப்பின் அவர்கட்கு அருள் செய்து, ஒருவராலும் அணுகுதற்கரிய தலைவனாகியவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே.
990 மல்கிய செஞ்சடைமேல் மதி
யும்மர வும்முடனே
புல்கிய ஆரணன்எம் புனி
தன்புரி நூல்விகிர்தன்
மெல்கிய விற்றொழிலான் விருப்
பன்பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெருமான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே.
7.097.6
நிறைந்த, சிவந்த சடையின்மேல், சந்திரனும் பாம்பும் ஒருங்கியைந்து பொருந்திய திருமேனியனாகிய வேத முதல்வனும், எங்கள் தூயோனும், முப்புரி நூலையணிந்த, வேறுபட்ட தன்மையை உடையவனும், தன்மேல் அன்புடையவனாகிய மிக்க தவத்தையுடைய அருச்சுனனுக்கு, மெல்லிய வில்தொழிலினால் அருள்பண்ணினவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே.
991 அங்கமொ ராறவையும் அரு
மாமறை வேள்விகளும்
எங்கும் இருந்தந்தணர் எரி
மூன்றவை யோம்புமிடம்
பங்கய மாமுகத்தாள் உடை
பங்கன் உறைகோயில்
செங்கயல் பாயும்வயல் திரு
வூர்நனி பள்ளியதே.
7.097.7
தாமரை மலர்போலும் முகத்தையுடைய உமா தேவியைப் பாகத்தில் உடையவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற இடம், அந்தணர்கள் மூன்று எரிகளோடே, ஆறு அங்கங்களையும், அரிய வேதங்களையும், வேள்விகளையும் எவ்விடத்தும் இருந்து வளர்க்கின்ற இடமாகிய, செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய அழகிய ஊரான திருநனிபள்ளியே.
992 திங்கட் குறுந்தெரியல் திகழ்
கண்ணியன் நுண்ணியனாய்
நங்கட் பிணிகளைவான் அரு
மாமருந் தேழ்பிறப்பும்
மங்கத் திருவிரலால் அடர்த்
தான்வல் அரக்கனையும்
நங்கட் கருளும்பிரான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே.
7.097.8
சிறிய பிறையாகிய, விளக்கம் அமைந்த கண்ணிமாலையைச் சூடியவனும், நுண்ணியனாய் நின்று, எழுவகைப் பிறப்புக்களும் கெடும்படி, நம்மிடத்து உள்ள வினையாகிய நோயை நீக்குகின்ற, உயர்ந்த அரிய பெரிய மருந்தாய் உள்ளவனும், வலிய அரக்கனாகிய இராவணனையும், அழகிய ஒரு விரலால் நெரித்தவனும் ஆகிய, நமக்கு அருள்செய்யும் பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே.
993 ஏன மருப்பினொடும் எழில்
ஆமையும் பூண்டுகந்து
வான மதிள்அரணம் மலை
யேசிலை யாவளைத்தான்
ஊனமில் காழிதன்னுள் ளுயர்
ஞானசம் பந்தர்க்கன்று
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும்
ஊர்நனி பள்ளியதே.
7.097.9
பன்றியின் கொம்பையும், அழகிய ஆமையோட்டையும் விரும்பியணிந்து, வானத்திற்செல்லும் மதிலாகிய அரணின்முன், மலையையே வில்லாக வளைத்து நின்றவனும், குறையில்லாத சீகாழிப்பதியுள் உயர்ந்தோராகிய ஞானசம்பந்தர்க்கு ஞானத்தை அருள்செய்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே.
994 காலமும் நாள்கழியுந் நனி
பள்ளி மனத்தின்உள்கிக்
கோலம தாயவனைக் குளிர்
நாவல ஊரன்சொன்ன
மாலை மதித்துரைப்பார் மண்
மறந்துவா னோர்உலகில்
சாலநல் லின்பமெய்தித் தவ
லோகத் திருப்பவரே.
7.097.10
காலமும் நாள்தோறும் கழியாநிற்கும், அதனால், குளிர்ந்த திருநாவலூரனாகிய நம்பியாரூரன், கருணையால் திருவுருக்கொண்ட இறைவனைத் திருநனிபள்ளியுள் வைத்து மனத்தில் நினைத்துப் பாடிய இப்பாமாலையின் பெருமையை உணர்ந்து பாடுவோர், தேவருலகில் மிக்க இன்பத்தைத் துய்த்து, பின்பு மண்ணுலகத்தில் வருதலை மறந்து, சிவலோகத்தில் இருப்பவரே யாவர்.
திருச்சிற்றம்பலம்
7.097.திருநனிபள்ளி பண் - பஞ்சமம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நற்றுணையப்பர். தேவியார் - பர்வதராசபுத்திரி.
985 ஆதியன் ஆதிரையன் அயன் மாலறி தற்கரிய சோதியன் சொற்பொருளாய்ச் சுருங் காமறை நான்கினையும் ஓதியன் உம்பர்தங்கோன் உல கத்தினுள் எவ்வுயிர்க்கும் நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.097.1
எப்பொருட்கும் முதலானவனும், ஆதீரை நாண்மீனைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும், பிரமனும் திருமாலும் அறிதற்கரிய ஒளிவடிவானவனும், சொல்லும் சொற்பொருளுமாய் நின்று, சுருங்குதல் இல்லாத வேதங்கள் நான்கினையும் ஓதியவனும், தேவர்களுக்குத் தலைவனும், உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் தந்தையும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே.
986 உறவிலி ஊனமிலி உண ரார்புரம் மூன்றெரியச் செறுவிலி தன்னினைவார் வினை யாயின தேய்ந்தழிய அறவில கும்மருளான் மரு ளார்பொழில் வண்டறையும் நறவிரி கொன்றையினான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.097.2
உறவுத் தொடக்கு இல்லாதவனும், குறைவில்லாதவனும், தன்னை மதியாதவரது மூன்று ஊர்களும் எரிந்தொழியும்படி அழித்த வில்லை உடையவனும், தன்னை நினைபவரது வினையெல்லாம் வலிமை குன்றி அழியும்படி, மிகவும் விளங்குகின்ற திருவருளை உடையவனும், தேனோடு மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர், மயக்கத்தைத் தருகின்ற சோலைகளில் வண்டுகள் ஒலிக்கின்ற திருநனிபள்ளியே.
987 வானுடை யான்பெரியான மனத தாலும் நினைப்பரியான் ஆனிடை ஐந்தமர்ந்தான் அணு வாகியொர் தீயுருக்கொண் டூனுடை இவ்வுடலம் ஒடுங் கிப்புகுந் தான்பரந்தான் நானுடை மாடெம்பிரான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.097.3
விண்ணுலகத்தைத் தனதாக உடையவனும், யாவரினும் பெரியோனும், மனத்தாலும் நினைத்தற்கரியவனும், பசுவினிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை விரும்புபவனும், நுண்ணிய பொருளாகி, சுடர் வடிவத்தைக்கொண்டு, ஊனையுடையதாகிய இவ்வுடம்பினுள் அடங்கிப் புகுந்தவனும், உலகம் எல்லாம் தன்னுள் அடங்க விரிந்தவனும், நான் உடைய செல்வமாய் இருப்பவனும் ஆகிய எம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் திருநனிபள்ளியே.
988 ஓடுடை யன்கலனா உடை கோவண வன்னுமையோர் பாடுடை யன்பலிதேர்ந் துணும் பண்புடை யன்பயிலக் காடுடை யன்னிடமா மலை ஏழுங் கருங்கடல்சூழ் நாடுடை நம்பெருமான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.097.4
ஓட்டினை உண்கலமாகவும், கோவணத்தை உடையாகவும், உடையவனும், ஒரு பக்கத்தில் உமையை உடையவனும், பிச்சை எடுத்து உண்ணும் தன்மையை உடையவனும், வாழ்வதற்குரிய இடமாகக் காட்டை உடையவனும், ஏழு மலைகளையும், கரிய கடல் சூழ்ந்த ஏழு நாடுகளையும் உடையவனும் ஆகிய நம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே.
989 பண்ணற் கரியதொரு படை ஆழி தனைப் படைத்துக் கண்ணற் கருள்புரிந்தான் கரு தாதவர் வேள்விஅவி உண்ணற் கிமையவரை உருண் டோட உதைத்துகந்து நண்ணற் கரியபிரான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.097.5
ஆக்குதற்கு அரிதாகிய சக்கரப்படை ஒன்றை ஆக்கி, அதனைத் திருமாலுக்கு அளித்தவனும், தன்னை மதியாதவனாகிய தக்கனது வேள்வியில் அவிசை உண்ணச் சென்ற தேவர் அனைவரையும் சிதறி ஓடும்படி தாக்கிப்பின் அவர்கட்கு அருள் செய்து, ஒருவராலும் அணுகுதற்கரிய தலைவனாகியவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே.
990 மல்கிய செஞ்சடைமேல் மதி யும்மர வும்முடனே புல்கிய ஆரணன்எம் புனி தன்புரி நூல்விகிர்தன் மெல்கிய விற்றொழிலான் விருப் பன்பெரும் பார்த்தனுக்கு நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.097.6
நிறைந்த, சிவந்த சடையின்மேல், சந்திரனும் பாம்பும் ஒருங்கியைந்து பொருந்திய திருமேனியனாகிய வேத முதல்வனும், எங்கள் தூயோனும், முப்புரி நூலையணிந்த, வேறுபட்ட தன்மையை உடையவனும், தன்மேல் அன்புடையவனாகிய மிக்க தவத்தையுடைய அருச்சுனனுக்கு, மெல்லிய வில்தொழிலினால் அருள்பண்ணினவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே.
991 அங்கமொ ராறவையும் அரு மாமறை வேள்விகளும் எங்கும் இருந்தந்தணர் எரி மூன்றவை யோம்புமிடம் பங்கய மாமுகத்தாள் உடை பங்கன் உறைகோயில் செங்கயல் பாயும்வயல் திரு வூர்நனி பள்ளியதே. 7.097.7
தாமரை மலர்போலும் முகத்தையுடைய உமா தேவியைப் பாகத்தில் உடையவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற இடம், அந்தணர்கள் மூன்று எரிகளோடே, ஆறு அங்கங்களையும், அரிய வேதங்களையும், வேள்விகளையும் எவ்விடத்தும் இருந்து வளர்க்கின்ற இடமாகிய, செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய அழகிய ஊரான திருநனிபள்ளியே.
992 திங்கட் குறுந்தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய் நங்கட் பிணிகளைவான் அரு மாமருந் தேழ்பிறப்பும் மங்கத் திருவிரலால் அடர்த் தான்வல் அரக்கனையும் நங்கட் கருளும்பிரான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.097.8
சிறிய பிறையாகிய, விளக்கம் அமைந்த கண்ணிமாலையைச் சூடியவனும், நுண்ணியனாய் நின்று, எழுவகைப் பிறப்புக்களும் கெடும்படி, நம்மிடத்து உள்ள வினையாகிய நோயை நீக்குகின்ற, உயர்ந்த அரிய பெரிய மருந்தாய் உள்ளவனும், வலிய அரக்கனாகிய இராவணனையும், அழகிய ஒரு விரலால் நெரித்தவனும் ஆகிய, நமக்கு அருள்செய்யும் பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே.
993 ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டுகந்து வான மதிள்அரணம் மலை யேசிலை யாவளைத்தான் ஊனமில் காழிதன்னுள் ளுயர் ஞானசம் பந்தர்க்கன்று ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே. 7.097.9
பன்றியின் கொம்பையும், அழகிய ஆமையோட்டையும் விரும்பியணிந்து, வானத்திற்செல்லும் மதிலாகிய அரணின்முன், மலையையே வில்லாக வளைத்து நின்றவனும், குறையில்லாத சீகாழிப்பதியுள் உயர்ந்தோராகிய ஞானசம்பந்தர்க்கு ஞானத்தை அருள்செய்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே.
994 காலமும் நாள்கழியுந் நனி பள்ளி மனத்தின்உள்கிக் கோலம தாயவனைக் குளிர் நாவல ஊரன்சொன்ன மாலை மதித்துரைப்பார் மண் மறந்துவா னோர்உலகில் சாலநல் லின்பமெய்தித் தவ லோகத் திருப்பவரே. 7.097.10
காலமும் நாள்தோறும் கழியாநிற்கும், அதனால், குளிர்ந்த திருநாவலூரனாகிய நம்பியாரூரன், கருணையால் திருவுருக்கொண்ட இறைவனைத் திருநனிபள்ளியுள் வைத்து மனத்தில் நினைத்துப் பாடிய இப்பாமாலையின் பெருமையை உணர்ந்து பாடுவோர், தேவருலகில் மிக்க இன்பத்தைத் துய்த்து, பின்பு மண்ணுலகத்தில் வருதலை மறந்து, சிவலோகத்தில் இருப்பவரே யாவர்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 24 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|