இத்தலத்தில் குருபகவான், அம்பிகையின் நேரடிப்பார்வையில் இருக்கிறார். எனவே இங்கு அம்பிகையை வேண்டிட குரு பார்வை கிடைக்கும், குருவால் உண்டாகும் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. இத்தகைய அமைப்பைக் காண்பது அரிது. இங்கு தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். எனவே இக்கோயிலை "செவ்வாய்கோயில்' என அழைக்கிறார்கள்.
பிரகாரத்தில் நடராஜர், பைரவர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வில்வாம்பிகை, ஆதிசங்கரர், நால்வர் சன்னதிகள் உள்ளன. நால்வர் சன்னதியில் அகத்தியர் இருக்கிறார். வளர்பிறை பஞ்சமியில் ஆதிசங்கரருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர். அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது, அம்பாள் திருமணக்கோலத்தில் தங்கநகைகள் அணிந்திருந்தாள்.
எனவே இவள், "ஸ்வர்ணாம்பிகை' எனப்படுகிறாள். இவளது சன்னதி முகப்பில் மகாலட்சுமி, சரஸ்வதி சன்னதியும், எதிரே நவக்கிரக மண்டபமும் உள்ளது. வில்வலன் மற்றும் வாதாபியை அகத்தியர் அழித்த தலம் என்பதால் இவ்வூர், "வில்லிவாக்கம்' என்றழைக்கப்படுகிறது. வைகாசி பிரம்மோற்ஸவத்தின்போது அகத்தியர் அசுரர்களை வதம் செய்த வைபவம் நடக்கிறது. |