சொல்லப் பயன்படுவர் சான்றோர் -மெலியர் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்; கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும் - மறைக் கீழயினார் கரும்பு போல வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர். (பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற, மேலாயினாரையும் உடன் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பிறர் தங்குறையைச் சொல்ல அதற்கு இரங்கிப் பயன்படுவர் மேன்மக்கள். அவ்வாறன்றிக் கரும்பு பயன்படுமாறு போலத் தம்மை நெருக்கினால் பயன்படுவர் கீழ்மக்கள். இஃது ஒறுப்பார்க்குக் கொடுப்பரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
சான்றோர் சொல்லப் பயன்படுவர் - மேன்மக்கள் வலியாரும் மெலியாரும் சென்று தமக்கு வேண்டிய தொன்றைக் கேட்டவளவிற் கொடுத்துதவுவர்; கீழ் கரும்பு போல் கொல்லப் பயன்படும் - ஆனால், கீழ்மக்களோ; வலியார் சென்று கரும்பை ஆலையில் வைத்து நெறித்துப் பிழிந்தாற்போல, வருத்தி நெருக்கிய போதே ஒன்றை வருந்தித் கொடுப்பர். கீழ் மக்களின் இழிவு விளங்கித் தோன்றுமாறு மேன்மக்கள் இயல்பும் உடன் கூறினார். இது வேற்றுமையணி. 'கீழ்' ஆகுபெயர்.வலியாரும் வருத்தினாலன்றிக் கயவர் கொடார் என்பது இக்குறளாற் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.