LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 445 - அரசியல்

Next Kural >

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான், மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க. (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லனாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி , அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின்சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல்; காரியமெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான்.
தேவநேயப் பாவாணர் உரை:
சூழ்வார் கண்ணாக ஒழுகலால் -மந்திரிமாரைக் கண்ணாகக் கொண்டு அரசியல் நடத்தலால்; மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் -அரசன் மந்திர வினைஞரை ஆராய்ந்து அவருட் சிறந்தவரைத் தனக்குத் துணையாகக் கொள்க. அரசரெல்லார்க்கும் சூழ்வினைத்திறம் இன்மையானும், அத்திற முள்ளவர்க்கும் பல்வேறு தொழிற்சுமை வந்தழுத்துதலானும், அரசர்க்கு இயல்பாகவுள்ள போர்த்திறம் சூழ்வினைத்திறத்தை மறைத்தலானும், மந்திரித்தொழிற்கென்றே பிறந்தவரும் அஃதொன்றையே தொழிலாகக் கொண்டவருமான மந்திரிமாரின்றிப் பொதுவாக எவ்வரசும் இனிது நடைபெறாமையின் , அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தலென்றது, திருக்குறள் போலும் முப்பால் அற நூல்களுள் அல்லது அரசியலொன்றே கூறும் பொருள் நூல்களுள், அமைச்சியலிற் சொல்லப்படும் அமைச்சிலக்கணங்களை, மன்னவன் என்னும் குறுநில அரசன் பெயர் இங்குப் பெருநிலவரசனையுங் குறித்து நின்றது.
கலைஞர் உரை:
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்த கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.
Translation
The king, since counsellors are monarch's eyes, Should counsellors select with counsel wise.
Explanation
As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.
Transliteration
Soozhvaarkan Naaka Ozhukalaan Mannavan Soozhvaaraik Soozhndhu Kolal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >