நடிகர் சூர்யா, அஞ்சான் படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆக்சன் படங்கள், வரலாற்று படங்கள் என கலக்கி கொண்டிருந்த சூர்யா இந்த படத்தில் ஆவிகளை மையமாக வைத்த கதையில் நடித்து வருகிறாராம்.
இந்த படத்தில் இறந்து போன சில ஆன்மாக்கள் சூர்யாவின் கண்களுக்கு மட்டுமே தெரிவார்களாம். அதாவது ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் இறந்து போன கமல், இன்னொரு கமலின் கண்களுக்கு மட்டுமே தெரிவாரே அதேபோன்றுதானாம்.
மேலும், முதலில் யாரோ சிலர் தன்னை எங்கு சென்றாலும் பின்தொடர்வதை கண்டு கோபப்படும் சூர்யாவுக்கு, அவர்கள் மற்றவர்களின் கண்களுக்கு தெரியாதபோதுதான், அவர்கள் ஆவிகள் என்பதை உணர்கிறாராம்.
அதையடுத்து, எதற்காக என்னையே தொடர்ந்து வருகிறீர்கள்? என்று ஆவிகளிடம் சூர்யா கேட்கும்போதுதான், தங்களுக்கு ஏற்பட்டுள்ள சில பிரச்சினையை சூர்யாவிடம் சொல்லி, அதை நிவர்த்தி பண்ணுமாறு கூறுகிறார்களாம். அதையடுத்து அவர்கள் ஒவ்வொருவரின் பிரச்சினைகளையும் சூர்யா எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் மாஸ் படத்தின் முழு கதையாம்.
|