LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 718 - அமைச்சியல்

Next Kural >

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உணர்வது உடையார்முன் சொல்லல் - பிறர் உணர்த்தலின்றிப் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவினை உடையவர் அவைக்கண் கற்றார் ஒன்றனைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று - தானே வளர்வதொரு பயிர் நின்ற பாத்திக்கண் நீரினைச் சொரிந்தாற்போலும். (தானேயும் வளர்தற்குரிய கல்வி மிக வளரும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும், ஒத்தார் அவைக்கண் எவ்வழியும் சொல்லுக என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
யாதாயினும் ஒன்றைச் சொல்லுங்கால் அதனைத் தெரிந்தறியும் அறிவுடையார்முன்பு சொல்லுவது, வளர்வதொன்று நின்ற பாத்தியின்கண்ணே நீர் சொரிந்தாற்போலும்.
தேவநேயப் பாவாணர் உரை:
உணர்வது உடையார்முன் சொல்லல் -பிறர் உணர்த்த வேண்டாது தாமே பொருள்களை யுணரவல்ல அறிவுடையாரவைக்கண் கற்றார் ஒன்றைச் சொல்லுதல்; வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்த அற்று -தானாக வளரும் பயிர் நின்ற பாத்திக்குள் நீரை வார்த்தாற் போலும். தானே வளரும் அறிவு மிக விரைந்து வளரும் என்பதாம். இவ்விரு குறளாலும், ஒத்தாரவைக்கண் கற்றோர் தமக்குரிய இலக்கியநடையிற் பேசுக என்பது கூறப்பட்டது.
கலைஞர் உரை:
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.
Translation
To speak where understanding hearers you obtain, Is sprinkling water on the fields of growing grain!.
Explanation
Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).
Transliteration
Unarva Thutaiyaarmun Sollal Valarvadhan Paaththiyul Neersorin Thatru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >