வேளாண் உற்பத்தியாளர்களுக்காக 1,00,000 கோடி நிதியுதவி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் - பிரதமர் மோடி! வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் கோடி நிதியுதவி வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில் 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ. 17 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குவதில் தான் மிகவும் திருப்தி அடைவதாகவும் ஊரடங்கு காலத்தில் மட்டுமே ரூ. 22 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. ஒரே தேசம், ஒரே சந்தை என்பது தற்போது சாத்தியமாகியுள்ளது. இந்த திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் தான் பெருமிதம் கொள்வதாகவும் இத்திட்டம் மூலம் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய முடியும் எனவும் பிரதமர் மோடி காணொலியில் தெரிவித்தார். இந்த நிதியுதவியானது பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அறுவடை செய்த பின்னர் சேகரித்து வைக்கக் குளிர்சாதன கிடங்கு, சேமிப்பு கிடங்கு ஆகியவை அமைக்க இதன் மூலம் விவசாயிகள் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக மத்திய அரசு 12 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடனும், 11 வேளாண் வங்கிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது . இத்திட்டம் மூலம் விவசாயிகள் 3 சதவீத வட்டி விகிதத்தின் கீழ் அதிகபட்சமாக 2 கோடி வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.. நடப்பு ஆண்டில் 10 ஆயிரம் கோடி நிதியுதவியும், அடுத்த 3 ஆண்டுகளில் தலா 30 ஆயிரம் கோடி நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளில் மட்டுமே இந்த கடன் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|