+2 பொதுத் தேர்வு இரத்து, மத்திய அரசு அறிவிப்பு கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஊரடங்கு கொண்டுவரப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இணைய வழி வகுப்புகள் மாணவர்களுக்கு நடைபெற்று வந்தன. பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு முப்பது சதவிகிதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணையை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். அதில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 ஆம் தேதி தொடங்கி ஜூன் 7ஆம் தேதி வரையிலும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4-ஆம் தேதி தொடங்கி ஜூன் 11ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா இரண்டாம் அலை உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் பரீட்சை நடத்துவதில் சிக்கல் எழுந்தது.இந்நிலையைக் கருத்தில் கொண்டுசி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் + 2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகவும் மத்திய கல்வித்துறை அறிவித்தது. மீண்டும் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் நடத்தப்பட ஆலோசனைகள் நடந்து வந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மாணவர்களால் வழக்கு தொடரப்பட்டது. + 2 பொதுத் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் ,இந்நோய் தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை தேர்வெழுத நிர்ப்பந்திக்கக் கூடாது விரைவில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் உரிய முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
|