|
|||||
வியக்க வைக்கும் அரியலூர் அகழாய்வுப் பணிகள், முதலாம் இராஜேந்திர சோழனின் அரண்மனை பாகம் கண்டுபிடிப்பு |
|||||
வியக்க வைக்கும் அரியலூர் அகழாய்வுப் பணிகள் ,முதலாம் இராஜேந்திர சோழனின் அரண்மனை பாகம் கண்டுபிடிப்பு அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் அமைந்துள்ளது மாளிகைமேடு பகுதி. இங்கு தமிழக தொல்லியல் துறையினரால் முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகள் மார்ச் மாதம் தொடங்கப்பட்டன. கொரோனா காரணமாக அகழாய்வுப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டிருந்தன. ஜூன் 14 ஆம் தேதி முதல் மீண்டும் பணிகள் துவங்கியுள்ளன. ஏற்கனவே இப்பகுதியில் இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள், சீன கலை நயமிக்க மணிகள், பழங்கால ஓட்டு பகுதிகள் ஆகியவை அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளன.முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் சுற்றுச்சுவர் மட்டும் கண்டறியப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்ட அகழாய்வின் போது அரண்மனையின் இரண்டாவது பாகம் கண்டறியப்பட்டுள்ளது. வரலாற்று ஆவணங்களில் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் மாளிகைமேடு பகுதியில் அரண்மனை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கூறப்பட்டுள்ள அரண்மனையின் பகுதி கண்டறியப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் சோழர் வரலாற்றினை மேலும் அறிந்து கொள்ளலாம் என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர். தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம்- மாளிகைமேடு ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெறவும்,கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகத்தினை கண்டறிவதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கள ஆய்வு செய்யவும் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழுவினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் சென்ராயன் பாளையம், சிவகங்கை மாவட்டம் இலந்தக்கரை,கோவை மாவட்டம் மூலப்பாளையம், வேலூர் மாவட்டம் வசலை, புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டு அது பரிசோதனையில் உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து அகழாய்வின் போது கிடைக்கும் பழைமையும் நாகரிகச் சிறப்பும் உணர்த்தும் கண்டுபிடிப்புகள் தமிழரை பெருமிதம் கொள்ள வைத்துள்ளன. |
|||||
by R.Gnanajothi on 12 Jul 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|