|
|||||
மத்திய அரசு ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடு ! மீறினால் 50,000 அபராதம் !!! |
|||||
பெண்களுக்கு எதிராக நடத்தப்படும், ஆசிட்' வீச்சு சம்பவங்களை தடுக்கும் வகையில், அனைத்து மாநிலங்களிலும் ஆசிட் விற்பனையில் கடுமையான விதிமுறைகளை பின்பற்றுமாறு, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு,
1. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே ஆசிட் விற்பனை செய்யப்படும்.
2. அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் அலுவலகப் பயன்பாட்டுக்கு வாங்கும் ஆசிட்டை பத்திரமாக பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும். மேலும் ஆசிட் பயன்பாடு பற்றி முழு விவரங்களையும் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
3. அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு ஆசிட் விற்பனை செய்யக் கூடாது. அதை வாங்குபவரின், அடையாள அட்டை நகலைப் பெற்ற பிறகே, ஆசிட் வழங்க வேண்டும்.
4. விற்பனையாளர்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை, விற்கப்பட்ட மொத்த ஆசிட் அளவு, கையிருப்பு பற்றிய தகவல் அறிக்கையை, மாவட்ட துணை கலெக்டர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் விற்பனையாளர்களுக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
5. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களில், ஆசிட் பயன்பாடு பற்றிய அறிக்கையை, மாவட்ட துணை கலெக்டரிடம் வழங்க வேண்டும். இது பற்றிய கோப்புகளை, மாவட்ட கலெக்டர் பராமரிக்க வேண்டும்.
ஆசிட் வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு :
ஆசிட் வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறைந்தபட்சம், மூன்று லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அந்த சம்பவம் நடந்த, 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். மீதமுள்ள இரண்டு லட்சம் ரூபாயை, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஆசிட் வீச்சால், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில், பிளாஸ்டிக் சர்ஜரியை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். சிறப்பு சிகிச்சை வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளை அடையாளம் கண்டு, அரசு செலவில், அங்கு சிறப்பு படுக்கை வசதிகளை, ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மறு வாழ்வுக்கு, மாநில அரசு, போதிய நடவடிக்கைகளை, விரைவில் செய்து கொடுக்க வேண்டும்.
ஜாமீனில் வெளிவர முடியாது :
ஆசிட் வீச்சில் ஈடுபடும் குற்றவாளிகளை, ஜாமினில் வெளி வர முடியாத பிரிவுகளில், கைது செய்யும் வகையில், புதிதாக சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். |
|||||
by Swathi on 06 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|