சாப்பிடுவதற்கு முன்பு அரைமணி நேரம். தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுநடுவே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு குறைந்தது அரைமணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டும்.
சிலர் சாப்பிட ஆரம்பிக்கும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீரை அருந்தி விட்டுச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு ஜீரணம் ஒழுங்காக ஆகாது. ஏனென்றால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கும். இந்த அமிலம்தான் உணவை ஜீரணிக்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். வயிற்றில் உணவை ஜீரணம் செய்வதற்காக சுரந்துள்ள அமிலத்தைத் தண்ணீர் குடித்தால் அது நீர்த்து விடும் (டைலூட்). வயிற்றில் இருக்கும் அமிலத்தை நீர்த்த பிறகு நாம் என்னதான் நல்ல உணவை நல்ல முறையில் சாப்பிட்டாலும் அது ஜீரணம் ஆகாது. எனவே, தண்ணீர் குடித்தவுடன் யாராவது உங்களைச் சாப்பிட அழைத்தால் நான் இப்பொழுது வர மாட்டேன். இப்பொழுதுதான் தண்ணீர் குடித்து அமிலத்தை அணைத்துள்ளேன். எனவே, ஒரு அரை மணி நேரம் கழித்துச் சாப்பிட வருகிறேன் என்று கூற வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பிட உட்காரும் பொழுதும் கடந்த அரை மணி நேரத்தில் தண்ணீர் குடித்தோமா என்று யோசிக்க வேண்டும். எனவே, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நாம் சாப்பிடுகிற உணவு பிரமாதமாக ஜீரணமாகும்.
சாப்பிடும் பொழுது இடை இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படி குடித்தாலும் ஜீரணம் கெட்டு விடும். சாப்பிடும் பொழுது நன்றாக உணவைப் பற்களால் மென்று கூடிந போல செய்து எச்சில் கலந்து சாப்பிடுபவர் களுக்கு நடுவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது.
சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. நம்மில் பலபேர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர், ஒரு சொம்பு என்ற விதத்தில் தண்ணீர் குடிக்கிறோம். இதுவும் ஜீரணத்தைக் கெடுக்கும். எனவே, சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு அரை மணி நேரம் காத்திருந்து பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன்பு அரைமணி நேரம், சாப்பிடுவதற்கு ஒரு அரை மணி நேரம் ஆகும். சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் ஆக மொத்தம் 1½ மணி நேரம் தண்ணீர் குடிக்கக் கூடாது. 1½ மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் எப்படி இருப்பது? இந்த நேரத்தில் விக்கல், சிக்கல், தாகம், தொண்டை வறண்டு போதல், நாக்கு வறண்டு போதல், உணவு காரமாக இருத்தல் போன்ற சிக்கல்கள் வரும் பொழுது எப்படித் தண்ணீர் குடிக்காமல் இருப்பது என்று சிலர் மனதில் சந்தேகம் எழலாம்.
உணவு காரமாக இருந்தால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும். நமது நாக்கு உணவு காரமாக இருக்கிறது என்று நம்மிடம் பேசுகிறது. நமது நாக்கு தண்ணீர் குடியுங்கள் என்றா கூறியது? உணவு காரமாக இருந்தால் காரத்தைக் குறைப்பதற்கு என்ன வழி என்று யோசிக்க வேண்டுமே தவிர தண்ணீர் குடிக்கக்கூடாது. எனவே, உணவு காரமாக இருக்கும் பொழுது தேவைப்பட்டால், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களை ஊற்றி காரத்தைக் குறைக்க வேண்டுமே தவிர தண்ணீர் குடிக்கக் கூடாது. ஜீரணம் நடக்கும் பொழுது எண்ணெய் சென்றால் கூட ஒழுங்காக ஜீரணம் ஆகும். ஆனால், தண்ணீர் சென்றால் ஜீரணத்தைக் கெடுக்கும். எனவே, உணவு காரமாக இருந்தால் காரத்தைக் குறைக்க மாற்று வழி யோசியுங்கள். தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.
சாப்பிடும் பொழுது விக்கல் சிக்கல் வந்தால் என்ன செய்வது ? முதலில் சாப்பிடும் பொழுது விக்கல், சிக்கல் ஏன் வருகிறது என்று பார்ப்போம். சாப்பிடும் பொழுது கவனம் உணவில் வைத்து சாப்பிடுபவர் எவருக்கும் விக்கல், சிக்கல் வராது. நமது மூளைக்கும், அதாவது மனதிற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் வேகஸ் என்ற நரம்பு இணைப்பாக உள்ளது.
சாப்பிடும் பொழுது உணவைப் பற்றிய எண்ணம் மட்டுமே மனதில் இருந்தால் இந்த நரம்பு ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளையும் ஒழுங்காக வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கும். திடீரென நமது மனது குடும்பம், வியாபாரம் அல்லது வேறு நபரைப் பற்றி சிந்திக்கும் பொழுது இந்த நரம்பிற்குக் குழப்பம் ஏற்படும். வயிற்றில் ஜீரணம் சம்பந்தப்பட்ட சுரப்பி சுரப்பதா ? அல்லது இவர் மனம் யோசிக்கும் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட சுரப்பி சுரப்பதா என்ற குழப்பம் ஏற்படும் பொழுது வருவதுதான் விக்கல் சிக்கல். விக்கல் சிக்கல் வரும் பொழுது நாம் பொதுவாகக் கூறுவதுண்டு, யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்று. கண்டிப்பாக யாரும் உங்களை நினைக்கவில்லை. நீங்கள் யாரையாவது நினைத்தால் மட்டுமே விக்கல், சிக்கல் வரும். எனவே, சாப்பிடும் பொழுது நமது கவனம் உணவில் இருக்கும் வரை யாருக்கும் விக்கல் சிக்கல் வராது.
தொண்டை தாகமாக இருந்தால் நாக்கு வறண்டு போனால் என்ன செய்வது? இந்த ஒன்றரை மணி நேரத்தில் ஒரு வேளை தாகமோ, தொண்டை வறட்சியோ அல்லது விக்கல் சிக்கல் வந்தாலோ, தண்ணீர் குடிக்கலாம். ஆனால், அதற்கு ஒரு அளவு உண்டு. நாம் குடிக்கும் நீரின் அளவு வயிற்றில் சென்று சேராத அளவுக்கு குறைவாக குடிக்க வேண்டும். தொண்டை தாகமாக இருக்கிறது என்றால் தொண்டைக்கு அளவாகவும், நாக்கு வறண்டு போயிருந்தால் நாக்குக்கு அளவாகவும் குடிக்க வேண்டும். அதாவது உதடு, வாய், நாக்கு, உணவுக் குழாய் முதல் நெஞ்சுக் குழி வரை தண்ணீர் செல்லும் அளவிற்குக் குடிக்கலாம். நெஞ்சு குழிக்குக் கீழே வயிறு உள்ளது. குடிக்கும் நீரின் அளவு வயிற்றில் சென்று விழக் கூடாது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்குக் காற்று எதிரி, வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்குத் தண்ணீர் எதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே, சாப்பிடுவதற்கு முன்பாக வயிற்றில் சேராத அளவிற்கு ஒரு கால் டம்ளர் தண்ணீரை லேசாக வாயை நனைத்துக் கொள்ளலாம். உணவு சாப்பிடும் பொழுது நடுவே ஒரு வேளை தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கட்டாயம் இருந்தால்மட்டுமே மீண்டும் கால் டம்ளர் வயிற்றில் நீர் சென்று விழாத அளவிற்குக் குடித்துக் கொள்ளலாம். இதே போல் சாப்பிட்டு முடித்தவுடனே நம்மில் பலர் ஒரு டம்ளர், ஒரு சொம்பு என்று நீர் அருந்துகிறோம். தயவு செய்து அப்படிக் குடிக்காதீர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு கால் டம்ளர் முதல் அரை டம்ளர் வரை குறைவாக வாயைக் கொப்பளித்து முழுங்கும் அளவிற்கு குடித்தால் போதும், பிறகு ஒரு அரை மணி நேரம் காத்திருங்கள். அரை மணி நேரத்திற்குப் பிறகு தாராளமாக இரண்டு டம்ளர் அல்லது ஒரு சொம்பு வீதம் குடித்தால் ஜீரணத்திற்கு எந்த ஒரு கெடுதலும் ஏற்படாது.
எனவே, சாப்பிடுவதற்கு முன்பு அரை மணி நேரமும், சாப்பிடும் பொழுதும், சாப்பிட்ட பிறகு அரை மணி நேரமும் முடிந்த வரை தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். தேவைப்பட்டால் அளவு குறைவாகக் குடித்துக் கொள்ளுங்கள்.
பிராமணர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக வலது கையில் ஆள் காட்டி விரலையும், கட்டை விரலையும் ஒன்று சேர்த்து மற்ற மூன்று விரலையும் நீட்டி உள்ளங்கையில் நீர் விட்டு உதட்டால் மணிக்கட்டு ரேகையில் வாய் வைத்துக் கொண்டு உறிஞ்சி குடிப்பது வழக்கம். இதற்கு ஜலபரிஷேஸனம் என்று பெயர். இப்படி உணவு சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிக்காதீர்கள், வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது என்று நம் முன்னோர்கள் டெக்னிக்ளாக பிரச்சாரம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக நல்ல பழக்கம் (ஆச்சாரம்) என்று சில பழக்கம் வழக்கங்களை நமக்கு கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். எனவே, சாப்பிடும் பொழுது ஒரு வேளை தேவைப்பட்டால் இந்த முறையில் மூன்று முறை நீரை உறிஞ்சிக் குடிப்பதன் மூலமாக வயிற்றில் உள்ள அமிலத்தைக் காப்பாற்ற முடியும்.
பிராமணர்கள் மற்றும் ஆச்சாரம் என்ற வார்த்தை பயன்படுத்திய உடன் இந்த சிகிச்சை இந்து மதம் சம்பந்தப் பட்டது என்று தயவு செய்து ஒரு முத்திரையைக் குத்தி விடாதீர்கள். இந்தச் சிகிச்சை எந்த மதமும் சம்பந்தப்பட்டது அல்ல. நோய்களுக்கும், மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிகிச்சைக்கும், மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நல்ல பழக்கங்கள் எந்தக் கலாச்சாரத்திலும் எந்த மதத்திலும் இருந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம்.
எனவே, ஜீரணத்தின் பொழுது, தண்ணீர் எவ்வாறு தடையாக உள்ளது என்பதை புரிந்து கொண்டு இனி தண்ணீரின் அளவைக் குறைத்து ஜீரணத்தை அதிகப்படுத்துங்கள்.
நாம் பொதுவாக ஒரு மருத்துவரிடம் சென்றால் ஒரு மாத்திரையைக் கொடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் சாப்பிடுங்கள் என்று கூறுவார். சாப்பிடும் பொழுது கவனத்தை சாப்பாட்டில் வையுங்கள் என்றால் நீங்கள் என்ன செய்கிறீர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை சாப்பிட வேண்டும். சாப்பிட்டவுடன் மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சாப்பிடும் பொழுது கவனத்தை மாத்திரையின் மீதே வைத்துச் சாப்பிடுகிறோம். சாப்பிட்டு முடித்தவுடன் ஓடிச் சென்று மாத்திரையை வாயில் போட்டு ஒரு சொம்பு தண்ணீர் குடிக்கிறோம். இந்த மருந்து மாத்திரைகள் நோயைக் குணப்படுத்துகிறதோ, இல்லையோ ஆனால் அந்த மருந்து மாத்திரைக்காக நாம் சாப்பிடும் தண்ணீர் ஜீரணத்தைக் கெடுத்து நோய்களைப் பெரிதுபடுத்துகிறது.
எனவே, மருந்து மாத்திரையை முடிந்த வரையில் சாப்பிடாமல் தவிருங்கள். சில நேரங்களில் மருந்து மாத்திரை நமக்குத் தேவைப்படுகிறது. அப்பொழுது சாப்பிட வேண்டும். என்ற அப்படி இருக்கும் பொழுது உணவு சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை சாப்பிடாதீர்கள். ஒரு அரை மணி நேரம் காத்திருந்து பிறகு மாத்திரை சாப்பிட்டு தண்ணீர் குடியுங்கள். அந்த நீர் ஜீரணத்தைக் கெடுக்காது.
சிலர் நான் சாப்பிடும் பொழுதுதான் மாத்திரை சாப்பிடுவேன். அரை மணி நேரம் காத்திருந்து சாப்பிட என்னால் முடியாது. இதற்கு வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் என்றால் குழம்பு சாப்பாடு சாப்பிடும் பொழுது அதில் மாத்திரையை கலந்து பிணைந்து சாப்பிட்டு விடுங்கள் உங்களுக்கு தண்ணீர் தேவைப்படாது.
நன்றி - ஹீலர் பாஸ்கர்
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |