கஜா புயல் தமிழ்நாட்டின் நான்கு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை முற்றிலும் அடித்துச்சென்றுவிட்டது. சுனாமி ஏற்பட்டபோது, உயிர்ப்பலி அதிகம் நிகழ்ந்ததே தவிர பெரிய அளவில் வாழ்வாதார இழப்புகள், ஏழைகளின் வாழ்க்கை பாதிப்பு கஜா அளவிற்கு இல்லை என்றே சொல்லவேண்டும். மேலும் அது உலக அரங்கில் பேசப்பட்ட பேரழிவு என்பதால் உலக உதவிகளும், தன்னார்வ அமைப்புகளும் தாராளமாக வந்து உதவின. சென்னை வெள்ளத்தை எடுத்துக்கொண்டால், அங்கே பெருமாளான மக்கள் வெளியூரிலிருந்து வந்து தங்கியுள்ள சூழலில் கட்டிடங்களில் நீர் நிறைந்தது , வடித்தது , சிரமத்தை ஏற்படுத்தியது என்பதோடு உலக அரங்கில் , ஊடகங்களில் பெரிய அளவில் செய்தியாக்கப்பட்டு போதிய உதவிகள் குவிந்தன.
இன்று கஜா புயல் ஏற்படுத்தியுள்ள சேதமும், அது பயணித்த மாவட்டங்களின் பின்னணியும் சுனாமியுடனோ, சென்னை வெள்ள பாதிப்புடனோ ஒப்பிடமுடியாத ஒரு பேரழிவு. காரணம், கிராமப்புற வாழ்வியலில் ஓட்டு வீடு, கூரை வீடு என்பது அதிகமாகப் பயன்பாட்டில் இருப்பது. அவை அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. இந்த மக்களின் வாழ்வாதாரம் என்பது விவசாயமும், மரங்களும் கால்நடைகளும்தான். ஒரு தென்னை மரம் முழுமையாகப் பலன் தரக் குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில் காலங்காலமாக இருந்த ஒட்டுமொத்த மரங்களும் கீழே சரிந்துள்ளன. இதை வைத்துப் பிழைத்த அனைத்து விவசாயிகளின் வாழ்வையும் , எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், திருவாரூர் , தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கால்நடைகள் அதிகம். இந்தப் புயலில் பெரும்பாலான கால்நடைகள் இறந்துவிட்டன. அவைகளை குவியல் குவியலாக குழிதோண்டிப் புதைத்துவிட்டு இந்த நான்கு மாவட்ட மக்களும் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துள்ளனர்.
ஒரு மாட்டின் விலை இருபத்தைந்தாயிரம், முப்பதாயிரம், என்று வைத்துக்கொண்டால் பல மாடுகள் இறந்த வீடுகளின் பொருளாதார வாழ்வியல் இழப்புகள் ஈடுசெய்ய முடியாதது. இந்தப் பேரிழப்பில் குறைந்த நிலம், மரங்கள் வைத்திருந்தவர்களுக்குக் குறைந்த இழப்பு என்றும், பெரிய அளவில் தோப்புகளும், மரங்களும், கால்நடைகளும் வைத்திருந்தோருக்கு அதிக இழப்பு என்றும் வசதி வாய்ப்புள்ள பலரும் சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தக் காவிரி டெல்டா மக்களின் , விவசாயிகளின் நிலை குறைந்தது இருபதாண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என்பதே உண்மை. அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் ஓரளவு உயிர்ச்சேதம் குறைந்து பலி எண்ணிக்கை 63 (அரசின் கணைக்குப்படி) என்றுள்ளது. இந்த நிலையில், தான் குழந்தைபோல் வளர்த்த மரங்களையும், வீட்டையும், கால்நடைகளையும் , வாழைத் தோப்புகளையும், மா –தென்னந்தோப்புகளையும் இழந்த இரு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும் நிகழ்ந்துள்ளது. இது தொடரக்கூடாது என்பதே இன்று அனைவரின் கவலையாகவும் உள்ளது.
வழக்கமாகச் சென்னை வெள்ளத் துயரத்தின்போது சென்னை வாசிகள் இறங்கிப் போட்ட சத்தத்தில் உலகமே அதிர்ந்தது. உதவிகள் குவிந்தன. ஊடகங்களின் தலைப்புச் செய்தியானது. என்னவோ தெரியவில்லை, இவ்வளவு பெரிய கோர அழிவு ஏற்பட்டும், ஊடகங்கள் கொடுக்கவேண்டிய முக்கியத்துவமும் கொடுக்கவில்லை, அந்தப் பகுதியிலிருந்து வெளியூர்களில், வெளிநாடுகளில் வசிக்கும் மக்களும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை, இறங்கி உதவி செய்யவோ, செய்தியைக் கொண்டு சேர்க்கவோ, மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவோ போதிய கவனம் பொதுமக்களிடம் இல்லை. எனவே ஊட்டங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கிராமங்கள்தானே என்பதால் இந்தக் கவனக்குறைவா என்பதையும் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
காவிரி டெல்டா விவசாயிகள் நம்பிக்கை இழந்தால் அடுத்த தலைமுறை உணவுக்கு மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்கும். எனவே அவர்களைக் காப்பது, அவர்கள் மீண்டெழுந்து வரத் துணைநிற்பது அனைவரின் கடமையாகும்.
பல லட்சம் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள இந்த நிலையில் என்ன செய்யலாம்?
இதற்காக வலைத்தமிழ்.காம் பல்வேறு தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நிவாரண உதவிகளில் கைகோர்த்துள்ளது. குறிப்பாக எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை மாவட்ட நிர்வாகங்களிடமிருந்து பெற்று பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுத்து உரிய உதவிகளை , நிவாரணங்களைச் செய்ய ஏதுவாகத் தொழில்நுட்ப உதவிகளைச் செய்து www.GAJAHELP.ValaiTamil.Com/villages/ என்ற கஜா புயல் தகவல் தளம் தொடங்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொசெயலாளர் திரு.ஆறுபாதி ப.கல்யாணம் அவர்கள் தலைமையில் ஒரு தன்னார்வக் குழு மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து பாதிக்கப்பட்ட கிராமங்களின் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இந்த தகவல்களை ஒருங்கிணைத்து ஏற்கனவே தத்தெடுக்கப்பட்ட, உதவிக் கிடைத்த கிராமங்கள், உதவித் தேவைப்படும் கிராமங்கள் உள்ளிட்ட விவரங்களையும் அங்கேயே தத்தெடுக்க, உதவ விரும்பினால் பதிவுசெய்து உதவும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கே சென்று நிறுவனங்கள், தன்னார்வலர் குழுக்கள், தன்னார்வ அமைப்புகள், வெளிநாட்டு வாழ் தமிழர் அமைப்புகள், தமிழ்ச்சங்கங்கள் , தமிழக பெரு நிறுவனங்களின் CSR அமைப்புகள், தமிழக தொழிலதிபர்கள் என்று அனைவரும் கைகோர்த்து பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு தேவையான உதவிகளை அரசின் உதவிகளுக்கு அப்பாற்பட்டுச் செய்தால் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு கைகொடுத்ததாக அமையும்.
www.GAJAHELP.ValaiTamil.Com தகவல் தளத்தில் விரைவில் பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்கள்தொகை விவரங்கள் சேர்க்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையை ஓரளவு தெரிந்து உதவமுடியும்.
"எங்கள் கிராமம்" என்ற பெயரில் பலரும் தங்கள் நிதி ஆதாரத்திற்கு ஏற்ப கிராமங்களை தேர்ந்தெடுத்து முடிந்த உதவிகளைச் செய்யத்துவங்கியுள்ளனர். குறிப்பாக YMCA அமைப்பு சில கிராமங்களைத் தத்தெடுத்துள்ளது. Team Sydney என்ற ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் குழு பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை தேர்ந்தெடுத்து உரிய உதவிகளைச் செய்துவருகிறார்கள். இதுபோல் அமெரிக்கா, சிங்கப்பூர் , ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நிதி சேகரித்து “எங்கள் கிராமம்” என்று தேர்ந்தெடுத்து உதவிகளைச் செய்துவருகிறார்கள். “எங்கள் கிராமம் இது உங்கள் கிராமம் எது?” என்ற வாசகங்களுடன் அமெரிக்கவாழ் தமிழர்கள் அருகில் உள்ள தமிழ்ச்சங்கங்களும், தன்னார்வ அமைப்புகளும் இந்த மீட்புப் பணியில் கைகொடுக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நீங்கள் வசிக்கும் நாட்டில், ஊரில், படிக்கும் பள்ளியில், உறுப்பினராக உள்ள சங்கங்களில், வேலைசெய்யும் நிறுவனத்தில் என்று இங்கே தத்தெடுத்த கிராமங்களைத் தவிர்த்து மீதம் உள்ள ஓரிரு கிராமங்களை "எங்கள் கிராமம்" திட்டத்தில் உதவிட வாருங்கள். உங்கள் உதவி எவ்வளவு என்பது முக்கியமில்லை. காவிரி டெல்டா விவசாயிகளைக் காப்பது நம் கடமை என்ற உணர்வுடன் பாதித்த கிராமங்களுக்கு உதவிட வாருங்கள் என்று இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறோம்.
கிராமங்களை தேர்ந்தெடுத்து உதவமுடியாதவர்கள் இந்தியாவில் தன்னார்வப் பணி செய்து அனுபவம் மிக்க, அரசின் அனுமதிபெற்ற தன்னார்வ அமைப்புகளை தேர்ந்தெடுத்து பொருளாதார உதவிகளை வழங்கலாம்.
கிராமங்களுக்கு உதவும் அனைத்து தன்னார்வ அமைப்புகளும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசின் உரிய ஒத்துழைப்பை பெற்று நலப்பணிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Please visit http://GAJAHelp.valaitamil.com/villages/
|