குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, ஆலங்குடியில் உள்ள ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் கோயிலில் லட்சார்ச்சனை விழா நாளை (செப். 27-ந் தேதி) தொடங்குகிறது.
நவக்கிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகும் நாளில் குரு பெயர்ச்சி விழா நடத்தப்படுகிறது. குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வருகிற 4.-ந் தேதியன்று பெயர்ச்சி ஆவதையொட்டி, அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயிலில் முதல்கட்ட லட்சார்ச்சனை விழா வருகிற 1- ஆம் தேதி வரை நடக்கிறது.
இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை, குருபெயர்ச்சிக்கு பின்னர் அக்.8 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த லட்சார்ச்சனையில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்களும் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.
லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அருள்மிகு குரு பகவான் உருவம் பொறித்த வெள்ளியினாலான 2 கிராம் டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.
தோஷ பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் அதற்கான கட்டணம் ரூ.400-ஐ பணவிடை அல்லது வரைவோலை எடுத்து திருக்கோயில் முகவரிக்கு அனுப்பி வைத்து, பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.
காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும், வரைவோலைகளை உதவி ஆணையர், செயல் அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கியில் மாற்றத்தக்க வகையிலோ எடுத்து அனுப்பலாம் என்றும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|