|
|||||
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம்: யாருக்கும் சலுகை அளிக்கவில்லை- முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்! |
|||||
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. இணையதள ஒப்பந்தப்புள்ளியில் எப்படி முறைகேடு நடைபெறும்? ஒட்டன்சத்திரம், அவினாசி, தாராபுரம் சாலை ஒப்பந்தப்புள்ளி உறவினருக்கு வழங்கப்பட்டு உள்ளதாக கூறினர். கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலேயே யார் ரத்த உறவினர்கள், யார் நெருங்கிய உறவினர்கள் என்பது விளக்கப்பட்டு இருக்கிறது. அதில், எந்த வகையிலும் ஒப்பந்தப்புள்ளி பெற்றவர்கள் இடம்பெறவில்லை. உலக வங்கி நடைமுறையின்படி தான் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு உள்ளது. இதில், அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் டி.என்.ஆர்.எஸ்.பி. ஒப்பந்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தத்த தொகையைவிட அவர்கள் அதிக தொகையை வழங்கி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் என்ன பதில் சொல்ல இருக்கிறார்கள் என்று காத்திருக்கிறேன். நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தேவையில்லாமல் அவதூறு பரப்புகின்றனர். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் என்று மக்களும் கருதுகின்றனர், நானும் அதையே கருதுகிறேன். டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மக்களும் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் இடங்களில் கயிறுகள், தேங்காய் தொட்டிகள் போன்ற பழைய பொருட்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் இடங்களில், கொசு உற்பத்தியாகும் இடங்களில் தடுப்பு மருந்துகளை அடித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜாக்டோ-ஜியோ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு மட்டும் அரசு 14,719 கோடி ரூபாய் செலவழிக்கிறது. மேலும், அகவிலைப்படியும் உயருகிறது. அதற்காக அவர்களுக்கு 1600 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழக அரசுக்கு நிதி ஆதாரம் இல்லை. நிதிச் சுமை இருக்கிறது என்பது அவர்களுக்கும் நன்றாக புரியும். அதனால், துறைசார்ந்த செயலாளர்களும், அமைச்சர்களும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்." இவ்வாறு அவர் கூறினார். சபரிமலை விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்டதற்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றார். |
|||||
by Mani Bharathi on 20 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|