புனேயில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்தது. கடைசி நாளான நேற்று பெண்களுக்கான 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை புரிந்தது. இந்தியாவின் ஆஷா ராய் (200 மீ., ஓட்டம்), ரஞ்சித் மகேஸ்வரி (டிரிபிள் ஜம்ப்), ஜிதின் தாமஸ் (உயரம் தாண்டுதல்) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். நேற்று மட்டும் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உட்பட மொத்தம் 8 பதக்கங்கள் கிடைத்தன. போட்டிகள் முடிந்த பின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் வண்ணமயமாக நடந்தது. இதில் பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரியம் மிக்க நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நேற்று 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற நிர்மலா, அனு மரியம் ஜோஸ், பூவம்மா, டிண்டு லூகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, அடுத்த மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
|