சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ காலமானார் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவருக்கு வயது 91.
பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ க்வான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ குவான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது.
சிங்கப்பூரில் தமிழர்கள், சீனர்கள், மலேசியர்கள் ஆகிய மூன்று தேசிய இனங்களையும் ஒருங்கிணைத்து, அவர்களின் பாசத்தையும், பேராதரவையும் பெற்ற இவர். தமிழ், சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருப்பதற்குக் காரணகர்த்தாவும் லீ குவான் யூ தான்.
நியுமோனியாவினால் பாதிக்கப்பட்ட லீ குவான் யூ, சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தகவல் வெளியாக, நூற்றுக்கணக்கான சிங்கப்பூர் மக்கள் மலர்களை வைத்து நாட்டின் முதலாவது பிரதமரின் உடல் நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.
இந்நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.18 மணிக்கு அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. லீ குவான் யூவின் மறைவுக்கு சிங்கப்பூர் மக்கள் மட்டுமல்லாது, உலக தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
|