மகாகவி நாள்
அடிமை மனிதர் நடுவில் வீரக்கவிதை முழங்கியவன். பிணமும் உயிர் கொள்ளுமளவு உணர்வுப்பூர்வமான கவிதைகள் இசைத்தவன். செப்டம்பர் 11, இந்த வீரக்கவி, தமிழ்க்கவி இன்னுயிரை காலம் பறித்தது இந்நாளில் தான்.
"உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை என முழங்கியவன்" "நானுமோர் கனவோ ஞாலமும் பொய்தானோ" என ஞானம் பேசியவன். "பகைவனுக்கருள்வாய்" எனக் கனிவு சொன்னவன். 13 மொழிகள் அறிந்து "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று கூவியவன். தமிழை உயிராய் போற்றியவன்.
பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11, இனி மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்ததோடு பாரதியாரை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் முதல்வர் அவர்கள்.
1. பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11, இனி அரசின் சார்பாக மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும். 2.பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இந்நாளில் மாநில அளவில் கவிதைப் போட்டிகள் நடத்தி இளங்கவிஞர் விருது வழங்கப்பட்டு,ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும். 3.பாரதியாரின் தொகுக்கப்பட்ட பாடல்கள்,கட்டுரைகள் "மனதில் உறுதி வேண்டும்" என்ற தலைப்பில் புத்தகமாக வழங்கப்படும். 4.பாரதியைக் குறித்த ஆய்வாளர்களுக்கு விருதுகளும் பரிசுத்தொகையும் வழங்கப்படும். 5.பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் தொகுக்கப்பட்டு வடிவம் மாறாத செம்பதிப்பாக வெளியாகும். குழந்தைகள் அறியும் வகையில் பாரதியாரின் வாழ்வை விளக்கும் பல சித்திரக் கதை நூல் மற்றும் சிறந்த நூறு கவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியத்தோடு புத்தகம் வெளியாகும். பாரதியின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த ஆய்வு நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகும். 6. பாரதியாரின் நினைவு இல்லம் மற்றும் அமையவிருக்கும் கலைஞர் நினைவு நூலகத்தில் 'பாரதியியல்' என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும். 7.உலகத் தமிழ்ச் சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பாரதி பற்றிய நிகழ்வுகள் 'பாரெங்கும் பாரதி' என்ற தலைப்பில் நடைபெறும். 8.பாரதியாரின் திரையிசைப் பாடல்கள் மட்டும் இடம்பெறும் இசைக்கச்சேரி 'திரையில் பாரதி' என்ற நிகழ்வு நேரு உள்விளையாட்டு அரங்கில் கொரோனா பாதிப்பு முடிந்தவுடன் நடைபெறும். 9.நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டு சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரம்தோறும் நிகழ்ச்சிகள் செய்தித் துறை மூலமாக நடைபெறும். 10. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும். 11.காசியில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டினை பராமரிக்க அரசு சார்பாக நிதியுதவி வழங்கப்படும். 12.பாரதியாரின் படைப்புகள், குறும்படம் நாடகங்களாக்கப்பட்டு நவீன ஊடகங்கள் மூலமாக வெளியிடப்படும். 13.பாரதியாரின் உணர்வுமிக்க வரிகள் பள்ளிகள் கல்லூரிகள் பேருந்து நிலையங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும். 14.ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு 'மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா' எனப் பெயர் சூட்டப்படும்.
போன்ற அறிவிப்புகள் பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளன.
|