|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். ஜெ. ஸ்ரீராம் - நிகழ்வு 16 |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். ஜெ. ஸ்ரீராம் - நிகழ்வு 16 அறிமுகம்: அனைத்து சித்த மருத்துவர்களும். சித்த மருத்துவ மாணவர்களும் அறிந்த மிகச்சிறந்த மருத்துவர் இவர். சித்த மருத்துவத்தில் ‘குழவி மருத்துவம்’ என்ற ஒரு பிரிவைத் தனிப்பட்ட முறையில், பயிற்சி செய்யலாம் என்று அனைவருக்கும் நம்பிக்கையூட்டியவர் இவர். சித்த மருத்துவ அடிப்படைத் தத்துவங்களில் ஆழ்ந்த அனுபவமும், அறிவும் பெற்றவர். நாடிநடை, முக்குற்றயியல், நீர்க்குறி போன்ற சித்த மருத்துவ நோய்க்கணிப்பு முறைகளில் தனித்துவம் பெற்றவர் இவர். அவரே மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள் ஆவார். குழந்தை மருத்துவத்தில் ஆர்வம்: குழந்தை மருத்துவம் என்ற துறையானது மிகப் பெரியது. ஆன்டிபயாடிக் மருந்துகள் பெருகிய பிறகு சித்த மருத்துவத்தின் குழந்தை மருத்துவத் துறை கேட்பாரற்று போனது. அதனால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். இதனை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே குழந்தை மருத்துவத் துறையைத் தான் எடுத்துப் படித்ததாக மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள் குறிப்பிடுகிறார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சித்த மருத்துவத்தின் குழந்தை மருத்துவத்தைக் கள ஆய்வு செய்வதற்காக நாட்டின் பல்வேறு ஊர்களுக்குச் சென்றதாகக் குறிப்பிடுகிறார். தொலைந்து போன பாரம்பரியம்: நம்முடைய தமிழ் சமுதாய பாரம்பரியத்திலேயே குழந்தைகளின் நலன் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள். நடைவண்டி வைத்து குழந்தைகளை நடக்கப் பழக்கும் வழக்கம் இன்று தமிழர்களிடையே காணாமல் போய் விட்டது. தமிழர்கள் அந்த நடைவண்டியைச் செய்வதற்கென்றே தனிமரம் (நுணா மரம்) வைத்திருந்தனர். சங்க இலக்கியம் குறிப்பிடும் ‘சிறுதேர்’ என்ற விளையாட்டும் கூட நடைவண்டியைக் குறித்ததே. தொட்டில் கட்டும் பழக்கம், மரக்குதிரை விளையாடும் பழக்கம் போன்றவை அறிவியல் ரீதியாகக் குழந்தைகளுக்கு நன்மையைப் பயப்பவை. இன்று அவற்றை மறந்து விட்டுப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என வருத்தம் தெரிவிக்கிறார் மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள். சித்த மருத்துவத்தில் குழந்தை மருத்துவம்: சித்த மருத்துவத்தில் கிட்டத்தட்ட 108 நிதானங்கள், 60 உட்பிரிவுகள் என 2000. 3000 பாடல்கள் குழந்தை மருத்துவத்தைக் குறித்தே உள்ளன. அதிக நோய்களுக்கு எளிமையான மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘குலச்சல்’ என்ற பகுதியில், குழந்தைகளுக்குக் கொடி சுற்றி விட்டால் அதற்கு முடக்கத்தான் ஒரு கையளவு, தேங்காய்ப்பூ, சீரகம் போன்றவற்றைச் சேர்;த்து வேகவைத்து அதன் சாற்றைக் கொடுக்கின்றனர். அலோபதி மருத்துவத்தால் கூட குணப்படுத்த முடியாததைச் சித்த மருத்துவத்தின் இச்சாறு குணப்படுத்திவிடுகிறது. இன்றைய வளர்ப்பு முறை: இன்று குழந்தைகளை வெளியே செல்லவிடாமல் வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்க்கிறோம். உடலிற்கு ஆரோக்கியத்தைத் தரும் விளையாட்டுகளை கற்றுக் கொடுக்காமல் கைப்பேசியைக் கொடுத்து அதில் விளையாடச் சொல்கிறோம். 24 மணி நேரமும் குழந்தைகளுக்கு டயாப்பரை மாட்டி விடுகிறோம். இதனால் பல நோய்த் தொற்றுகள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. முன்னோர்கள் சொல்லிச் சென்ற சிறந்த முறைகளை மறந்துவிட்டு நாகரீகம் என்ற பெயரில் நோயை விலைகொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறார் மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள். சில சித்த மருத்துவ உணவு முறைகள்: பெரும்பாலும் குழந்தைகளை அதிகம் பாதிப்பது நிமோனியா காய்ச்சல் ஆகும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் போது குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பெற்ற உடலாக மாறுகிறது. உலகிலேயே சிறந்த நோய்த் தடுப்பு ஆற்றல் கருவேலம்பிசினில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கருவேலம்பிசினை சர்க்கரையோடு சேர்த்து சவலக் குழந்தைகளுக்கு அதாவது உடல் தேறாத குழந்தைகளுக்குக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதே போல் நேந்தரங்காய் எனப்படும் காயை வட்ட வட்டமாகச் சீவி வெயிலில் காய வைத்து அரைத்துப் பொடி செய்து, தண்ணீர் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் மிகச்சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி குழந்தைகளுக்கு உண்டாகும் என்கிறார் மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள். செய்யக்கூடாதவை: இரண்டு வயது மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆடாதொடை, துளசி போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. அதே போல் எந்த மருந்தாக இருந்தாலும் சங்கில் வைத்து ஊற்றக் கூடாது, தாயின் மார்புக் காம்பைச் சுற்றி மருந்தைத் தடவி குழந்தைகள் பால் அருந்தும் போது அதன் வழியாகக் கொடுக்கப்பட வேண்டும். அதனால் மட்டுமே குழந்தைகளுக்கு எவ்வித பக்க விளைவுகளும் வராது. ஒன்றரை வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தேன் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் என்னதான் சாப்பிட்டாலும் 6 வயது வரை மாத்திரைகளை அப்படியே விழுங்கும் படியாகக் கொடுக்கக் கூடாது, எந்த மாத்திரையாக இருந்தாலும் தண்ணீரில் கலந்தே கொடுக்க வேண்டும். என்றாவது குழந்தைகளுக்கு அதிக சாப்பாடு கொடுத்துவிட்டால் ஓமத்தண்ணீரை கொடுக்கக் கூடாது. அதற்குப் பதிலாகச் சோம்பு வேக வைத்த தண்ணீரைக் கொடுக்கலாம் என்கிறார் மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள். பிஸ்கட்டுகள், தேநீர் போன்றவற்றைக் குழந்தைகளுக்கு அறவேத் தடுக்க வேண்டும். 6 மாதத்திலிருந்தே தினமும் ஒரு காயைச் சாப்பிட வைத்து குழந்தைகளை வளர்க்க வேண்டும். பச்சை பச்சையான பேதிக்கு வலம்புரிக்காயை வேகவைத்து அதன் சாற்றை 10 சொட்டு கொடுக்கலாம். இரத்தமாகப் பேதி போனால் பொடுதலை கொடுக்க வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களைக் குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும். ஜீரகத் தண்ணீர் கொடுக்கலாம். நெய்யை உருக்கி உணவுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஆப்கானிஸ்தானில் எலும்பும் தோலுமாக இருந்த பல குழந்தைகளைக் காப்பாற்றியது முறிங்கா இலையும், அதன் சாறும் ஆகும். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அதை மறந்து விட்டு, நாகரிகம் என்ற பெயரில் வேறு எங்கோ சென்று கொண்டிருக்கின்றனர் என்று வருத்தப்படுகிறார் மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள். ஒருங்கிணைக்கும் முயற்சி: மருத்துவர் ஸ்ரீராம் அவர்கள் தற்போதைய இளைய தலைமுறையினருக்கு உதவும் வகையில் சித்த மருத்துவ குறிப்புகளை எளிமையாக எழுதி புத்தகமாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். வார்த்தைகள் புரியவில்லை என்று மாணவர்கள் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும், அனைவருக்கும் சித்த மருத்துவம் பயன்பட வேண்டும் என்ற வகையிலும் இம்;முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை நான்கு தொகுதிகள் வெளியிட்டுள்ளார். இன்னும் நூலாக்கம் குறித்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.
|
||||||||
by Lakshmi G on 08 Apr 2021 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|