|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் – நிகழ்வு – 18 |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் – நிகழ்வு – 18 Dr.G. Sivaraman, BSMS, Ph.D., அறிமுகம்: சித்த மருத்துவத்தின் அடையாளம் இவர்; இளம் சித்த மருத்துவர்களின் RollModel இவர்; நூலாசிரியர்; பேச்சாளர்; சமூக செயல்பாட்டாளர்; பூவுலகின் நண்பர் எனப் பன்முகத்தன்மைக் கொண்டு சித்த மருத்துவத்தைப் பல தளங்களுக்கு எடுத்துச் சென்றவர். முப்பது நாடுகளுக்கு மேல்; சென்று உரையாற்றியுள்ளார். வாழ்வியல் நோய்கள்: தமிழர்கள் நோய் தடுப்பானை உணவாக உட்கொண்டவர்கள். வரக் கூடிய நோயைத் தடுக்கக்கூடிய ஆற்றல் அவர்கள் உண்ணும் உணவிலேயே காணப்பட்டன. இன்று அவற்றை மறந்து துரித உணவுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறோம். உணவுகள் குறித்த என்னுடைய ஆய்வில் தமிழர்களுடைய அறிவையும் ஆற்றலையும் கண்டு நான் வியந்தேன் என்று குறிப்பிடுகிறார் டாக்டர். சிவராமன் அவர்கள்.. மேலும் இன்று வாழ்வியல் நோய்கள் என்று கருதப்படும் சர்க்கரை நோய், மாரடைப்பு, புற்றுநோய், நாள்பட்ட நுரையீரல் நோய்கள் பெரிய நோய்க்கூட்டமாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.. இதைத் தடுக்க மனித உணவில். சூழலில், மனத்தில் மாற்றம் வேண்டும் என்கிறார். துன்பத்தைத் தரும் துரித உணவுகள்: ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையில் துரித உணவுகளை மிகுதியாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது இளம்வயது குழந்தைகளும், இளையோர்களுமே ஆவர். என்றைக்காவது ஒருநாள் சாப்பிடட்டும் என்று நாம் கொடுக்கும் துரித உணவானது அக்குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கும் போது முழுமையாகத் துரித உணவுக்குள் செல்ல வழிவகுக்கிறது. துரித உணவுகளைக் குப்பை உணவுகள், நச்சு உணவுகள் என்றே சொல்ல வேண்டும். துரித உணவுகளால் 8 வயதுக்குழந்தை வயதுக்கு மீறிய எடையுடன் காணப்படுகிறது. 9, 10 வயதுக் குழந்தை வயதுக்கு வருகிறது. 24 வயதில் சர்க்கரை நோய் வருகிறது. துரித உணவுகளால் மரபணுக்களையே மாற்றிக் கொண்டு இருக்கிறோம் என்கிறார் டாக்டர். சிவராமன் அவர்கள்.. பாட்டிகளைத் தொலைத்த தலைமுறை: முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் பெற்றோரோ பெரியவர்களோ இந்தப் பொருளை அடிக்கடி சேர்க்காதே வாயு; இதைச் சேர்க்காதே பித்தம் என்று கூறுவர். இன்றோ வாயு, பித்தம், கபம் என்றால் என்ன என்று தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நம் தலைமுறை பாட்டிக்கு இவையெல்லாம் தெரிந்திருந்தன இன்றோ ஒரு புறம் பாட்டிகளை தொலைத்து கொண்டிருக்கிறோம், இன்னொரு புறம் இவை எதுவும் தெரியாத பாட்டிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தமிழ் சமுதாய பண்பாட்டோடு ஊறியது இன்று தன்னை மறந்து கொண்டிருக்கிறது. குடும்ப அறிவியலை தொலைத்து விட்டோம். இதில் வைட்டமின் ஏ உள்ளது; இதில் வைட்டமின பி உள்ளது என்று சொல்லும் குழந்தைக்கு இதைச் சாப்பிட்டால் பித்தம் அதிகமாகும், அதைச் சாப்பிட்டால் வாயு அதிகமாகும் என்று சொல்லத் தெரியவில்லை. அப்படிப்பட்ட தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அஞ்சறைப்பெட்டியில் நாம் செலவிடும் அதிகபட்ச நேரம் மனித ஆயுட்காலத்தின் வாழ்நாளை 20 ஆண்டு உயர்த்தும் என்பதைத் தெரியாமல் இருக்கிறோம் என்கிறார் டாக்டர். சிவராமன் அவர்கள்... உடல்நலம்: முந்தையக் காலத்தில் உடல்நலம் என்பது நாம் மட்டும் நலமாக இருப்பது; இன்று உடல்நலம் என்பது உடல், மனம், சூழல் ஆகிய அனைத்தையும் சார்ந்துள்ளது. மண்ணில் வாழும் ஒரு மண்புழு நலமாக இருந்தால் தான் மனிதன் நலமாக வாழ முடியும். இதை இன்றைய கொரோனா மனிதனுக்கு உணர்த்திவிட்டது. இந்த கொரோனா காலத்திலும் அதன் வீரியத்தன்மை குறைந்ததற்கு காரணம் சித்த மருத்துவமே; இருப்பினும் இரண்டாவது அலை பரவலுக்குக் காரணம் மக்களின் அலட்சியமே. சமூக இடைவெளி, முகக்கவசம், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுதல் போன்றவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும். ஒருங்கிணைந்த மருத்துவம்: கூட்டு முயற்சியால் மட்டுமே மருத்துவம் மகத்துவம் பெறும். ஒருங்கிணைந்த மருத்துவம் என்பது காலத்தின் கட்டாயம். இந்திய மருத்துவம் முதலில் இணைய வேண்டும். பிறகு நவீன மருத்துவத்துடன் கைகோர்க்க வேண்டும். மத நல்லிணக்கம் போல் மருத்துவ நல்லிணக்கமும் வேண்டும். தன் மருத்துவ முறைதான் பெரியது என்ற பற்றை அறுத்து மக்களைக் காக்கும் மருத்துவமாக நினைத்து சேவையாற்ற வேண்டும் என்கிறார் டாக்டர். சிவராமன் அவர்கள்.. இளம் மருத்துவர்களுக்கு… இன்றைய இளம் மருத்துவர்கள் சித்த மருத்துவத்தின் மீது பற்றும், காதலும் கொள்ள வேண்டும். சித்த மருத்துவத்தை நேசிக்க வேண்டும். ஒரு நல்ல சித்த மருத்துவரை உலகம் இன்றும் தேடிக் கொண்டு இருக்கிறது. எனவே இன்றைய இளம் மருத்துவர்களும், மாணவர்களும் தங்களை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்; தயக்கத்தை அகற்ற வேண்டும்; எந்த நிலையிலும் தேங்கிவிடக்கூடாது; சமூகம், சூழல், உணவு போன்ற அனைத்திலும் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உழைப்பதற்கும், மக்களோடு இணக்கமாக இருப்பதற்கும், பல இடங்களுக்குப் பயணிப்பதற்கும் பழகிக்கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர். சிவராமன் அவர்கள்.. |
||||||||
by Lakshmi G on 23 Apr 2021 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|