|
|||||
நகை, பணத்துக்காக 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது! |
|||||
நகை, பணத்துக்காக 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது! கேரளாவின் பையனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிஜூஆன்டனி (வயது 38). வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே கல்லோடியில் வசித்து வருகிறார். வேலை எதுவும் இல்லாத இவர் திருமணம் செய்வதையே தொழிலாக கொண்டிருந்தார். பத்திரிகைகளில் 2வது திருமணத்துக்கு பெண் தேவை என கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்வார். விளம்பரத்தில் மொபைல் எண்ணையும் குறிப்பிடுவார். இதைப் பார்த்து பல இளம்பெண்கள் தொடர்பு கொள்வார்கள். இப்படி தொடர்பு கொள்பவர்களில் வசதியான பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வார். பின்னர் ஏதாவது இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து ஒருசில வாரம் மட்டும் அவருடன் வசிப்பார். பின்னர் நகை, பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விடுவார். அவர் திருமணம் செய்யும் பெண்ணின் பெயரில் சிம்கார்டு வாங்குவார். அந்த சிம்கார்டை பயன்படுத்தி அடுத்த பெண்ணுக்காக விளம்பரம் செய்வார். இவ்வாறு தொடர்ந்து பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த மும்தாஜை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். எர்ணாகுளம் வடுதலை பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கினார். ஒரு வாரம் அவருடன் தங்கிய பிறகு அவரிடம் இருந்த 15 பவுன் நகை, பணத்துடன் மாயமானார். இது குறித்து மும்தாஜ் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். உதவி கமிஷனர் லால்ஜி உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். பல சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்ததால் அவரைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில் பிஜூ ஆன்டனி வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் வசித்து வருவது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். அவர் தற்போது கூட மணமகள் தேவை என விளம்பரம் செய்திருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. பிஜூ ஆன்டனியை கைது செய்து அழைத்து வரும் வழியில் கூட அவரது செல்போனுக்கு அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து இருப்பதாகவும், ஏராளமான நகை, பணம் வாங்கி இருப்பதாகவும் கூறினார். இந்து பெண் தொடர்பு கொண்டால் இந்து பெயரையும், கிறிஸ்தவ பெண் என்றால் கிறிஸ்தவ பெயரையும், முஸ்லிம் பெண்கள் என்றால் முஸ்லிம் பெயரையும் கூறுவாராம். பின்னர் அந்த பெண்ணுடன் பேச்சு கொடுத்து நகை, பணம் உள்ள பெண்களை தேர்வு செய்து திருமணம் செய்து வந்துள்ளார். இவ்வாறு 25 வயது முதல் 50 வயது வரை உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். |
|||||
by Mani Bharathi on 11 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|