LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மத்திய பட்ஜெட் 2019-2020: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்!

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை  தாக்கல் செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு இருமடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிக்கும். புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அரசின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

2014-ல் ஆட்சியமைக்கும்போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது.

சந்திராயன், ககன்யான் என விண்வெளித்துறையில் சாதனை படைத்துவருகிறது. அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் கொண்டு செல்ல முனைப்பு காட்டப்படும். டிஜிட்டல் இந்தியாவின் பலனை நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை சென்றடையச் செய்வதே இந்த அரசின் நோக்கம். 

அனைவருக்கும் வீடு, கழிவறையை உறுதிப்படுத்துவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தொழில் தொடங்குவதற்கான இடையூறுகளை களைவதே மத்திய அரசின் நோக்கம். கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களில் ஏழை, எளிய மக்கள் பலன் அடைந்துள்ளனர்.

இந்திய பொருளாதாரம் உயர்வதற்கு தனியார் முதலீடுகளின் பங்களிப்பு இன்றியமையாதது. 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி டாலருக்கு பொருளாதாரத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. முத்ரா கடன் திட்டம் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் சொத்தை அதிகரிக்கிறது; அந்த திட்டம் ஊக்குவிக்கப்படும். அந்நிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  உதான் திட்டங்கள் நாட்டின் சாதாரண மக்களுக்கு விமான சேவை கிடைப்பதை உறுதி செய்துள்ளன. 

பாதுகாப்பு துறையிலும் சிறு, குறு தொழில்முனைவோர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதே நோக்கம். பொருளாதார அளவில் இந்தியா உலக அளவில் 6-வது இடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 657 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது.

ரூபே கார்டுகள் மூலமாக போக்குவரத்து கட்டணங்கள் செலுத்தும் வசதி மேம்படுத்தப்பட்டு உள்ளது. பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் தயாரிப்பை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். கங்கையாற்றில் நடைபெறும் படகு சரக்குப் போக்குவரத்தை 4 மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மின்சார வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். 2019-20 ஆண்டுகளில் ரெயில்வே உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை என்பதால் தனியார் பங்களிப்பு அவசியம். 

ஒரே நாடு, ஒரே மின்சாரம் விநியோக அமைப்புத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சமஅளவில் மின் விநியோகம் செய்யப்படும். மின்கட்டண வரையறையில் மறுசீரமைப்பு தேவை.  

வாடகைக்கு குடியிருப்போருக்கான புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படும்.

நாட்டின் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளை நல்ல முறையில் பராமரிப்பதற்காக பெட்ரோல், டீசல் மீதான ‘செஸ் வரி’ லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு: 

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை ஒழிப்பதற்காக தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

அரசுத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் டிஜிட்டலில் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன.

மின்சக்தி வீணடிக்கப்படுவதை தவிர்க்க 35 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. இலவச எல்இடி பல்புகளால் ரூ.18,341 கோடி மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது.

தொழிலாளர் முன்னேற்றத்துக்கான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்.

தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் பொது வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதை தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன.

சுய உதவிக்குழு பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் பெற அனுமதி வழங்கப்படும்.

என்ஆர்ஐ-கள் இந்தியா வந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும். அவர்கள் 180 நாள் காத்திருக்கத் தேவையில்லை.

உலகத்தரத்தில் 74 புதிய சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும்.

வங்கிகளில் வாராக்கடன் கடந்தாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி முதலீட்டு மூலதனம் தரப்படும்.  பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக சீரமைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கிசாரா நிதி நிறுவனங்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப் படும்.

அடுத்த 5 ஆண்டில் நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி அரசு முதலீடு செய்யும் வீட்டுக்கடன் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு குறைந்தபட்சம் 51 சதவீதமாக நீடிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்ட திட்டம் உள்ளது.

இந்தியாவின் சர்வதேச கடன் அளவு நாட்டின் ஜிடிபியில் 5 சதவிகிதத்துக்குள் உள்ளது.

ஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும்.

பார்வையற்றோரும் தெரிந்துகொள்ளும் வகையில் 1,2,5,10,20 ரூபாய் புதிய நாணயங்கள் வெளியிடப்படும்.

விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்காக தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும். நாடு முழுவதும் 4 தொழிலாளர் நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு

வழிகாட்டுதல் வழங்க புதிய தொலைக்காட்சி சேவை தொடங்கப்படும். இந்த புதிய தொலைக்காட்சியும் ஸ்டார்ட் அப் நிறுவனமாகவே தொடங்கப்படும். 

சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுப்படுத்தப்படும். 

கார்ப்பரேட் கடன் சந்தை சீரமைப்புக்கு கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

சிறு வியாபாரிகளுக்கான பென்சன் திட்டம் மூலம் 3 கோடி பேர் பயன் பெறுவார்கள்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஏற்கனவே அறிவித்தபடி முழுமையாக செயல்படுத்தப்படும் தன்னார்வ நிறுவனங்கள் நிதி ஆதாரங்களை திரட்டுவது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக இந்தாண்டு மட்டும் ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

விமான போக்குவரத்து, ஊடகத்துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க திட்டம்.

சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தமாக இருந்தபோதிலும் இந்தியாவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மட்டும் ஆண்டுதோறும் ரூ.20 லட்சம் கோடி முதலீடு செய்வது அவசியமாக இருக்கிறது.

காப்பீட்டுத்துறையில் இடைநிலை அமைப்புகளுக்கு 100 சதவிகித அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும்.

இஸ்ரோவின் வணிகரீதியான செயல்பாடுகளுக்காக புதிய அமைப்பு தொடங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இலவச சமையல் எரிவாயு திட்டம், சவுபாக்யா திட்டங்கள் ஊரகப் பகுதி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி உள்ளன

5 ஆண்டுகளில் ரூ.80,250 கோடியில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கான சாலைகள் அமைக்கப்படும்.

நீர்வழிப்பாதைகளை உருவாக்குவதன் மூலம், சாலை போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்.

13,000 கிராம சாலைகள் பசுமைத் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டு உள்ளன

2022-ம் ஆண்டுக்குள், அனைத்து ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பத்தினரும் சொந்தமாக வீடு பெற்றிருப்பார்கள்.

அடுத்த கட்டமாக நாடு முழுவதும் உள்ள 1.95 கோடி ஏழை குடும்பத்தினருக்கு வீடுகள் வழங்கப்படும்.

மேற்கண்டவை உள்பட பல அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

by Mani Bharathi   on 05 Jul 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.