பாட்னா குண்டுவெடிப்புக்கான தகவல் பரிமாற்றம் நிம்பஸ் இணையதளம் மூலம் நடைபெற்றதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பாட்னா மற்றும் புத்த கயா குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீனின் ராஞ்சி கிளைதான் நடத்தியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் இணை நிறுவனராக கருதப்படும் யாசின் பட்கல் கடந்த ஆகஸ்ட் மாதம் போலீசில் சிக்கினான். ஆனால் அந்த அமைப்பின் தலைவர் ரியாஸ் பட்கல் பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டான். அவன் அங்கிருந்தபடியே இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத செயல்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறான். அவனுடன் தெஷீன் அக்தர் நேரடி தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிம்பஸ் இணையதளம் மூலமாக சந்தேகத்துக்குரிய செல்போன்களுக்கு வரும் குறுந்தகவல்களை தேசிய புலனாய்வு இடைமறித்துப் பார்த்ததில் இந்த தகவல் கிடைத்துள்ளது.
ராஞ்சியில் ஹைதர் அலி என்ற தீவிரவாதி தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவன் தப்பி ஓடிவிட்டான். அங்கு கைப்பற்றப்பட்ட குண்டுகள் புத்த கயாவிலும் பாட்னாவில் வெடித்தவை. அதனாலேயே இந்தியன் முஜாஹிதீனின் ராஞ்சி கிளைதான் இரு குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தியிருக்கிறது என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் உறுதியுடன் கூறுகின்றனர். தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் மேலும் அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|