|
|||||
தமிழகத்தில் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுத்தால் உரிமம் ரத்து செய்யப்படும்: மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் உறுதி! |
|||||
தமிழகத்தில் எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுத்தால் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என் சி இ ஆர் டி) பாடத்திட்ட விதிகளை மீறி, சிபிஎஸ்இ பள்ளிகள் ஒன்று முதல் 3 -ஆம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. சிறு குழந்தைகளுக்கும் வீட்டுப் பாடம், அசைன்மென்ட் போன்றவை கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. தனியாரிடம் இருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக இந்தப் பாடங்களை தனியார் பள்ளிகள் குழந்தைகள் மீது திணிக்கின்றன. குழந்தைகள் தங்களது எடையைக் காட்டிலும் கூடுதல் எடையை புத்தக சுமையாக சுமந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத் திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் எம். புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பள்ளிகளில் 2 -ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய, அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தெலங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இந்த உத்தரவைப் பின்பற்றி அறிவிப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளது. |
|||||
by Mani Bharathi on 23 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|