LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்

சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 04 : அமையட்டும் அகத்தியர் சித்த மருத்துவ பல்கலைகழகம்

சித்த மருத்துவர். அருள் அமுதன், BSMS, MD(siddha), MSc.(Medical Pharmacology), MSc(Yoga and Naturopathy)

உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education

அமையட்டும் "அகத்தியர் சித்த மருத்துவ பல்கலைகழகம்" மற்றும் மாவட்டம் தோறும் ஒரு சித்த மருத்துவ கல்லூரி

சீனா மற்றும் கொரியா நாடுகளில் பயணிக்கும் போது, அவர்களின் பாரம்பரிய மருத்துவ முறைக்காக, உலகத்தரம் வாய்ந்த பல்கலைகழகங்களும், கல்லூரிகளும், அருங்காட்சியகமும் வைத்து, அதை வளர்த்து வருவது கண் கூடாக பார்க்க முடிந்தது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம் தமிழ் மண்ணில் இது போல, பல்கலை கழகம் வைத்து சித்த மருத்துவம் வளர்ப்பது ஒன்றும் கடினமான செயலாக இருக்காது என்று எண்ணுகிறேன்.

தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் ஒரு முன்னோடி மாநிலம். தமிழ் நாட்டில், நமக்கு மொத்தமாக 19 அரசு மருத்துவ கல்லூரிகள் இன்று வரை நிறுவப்பட்டு உள்ளன. இது மட்டுமல்லாது, 16 தனியார் மருத்துவ கல்லூரிகளும் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு மருத்துவ கல்லூரிகள் இருந்தும், இன்றைய சூழலில் பல நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த ஆங்கில மருத்துவம் மட்டும் போதுமானதாக இல்லை. அத்துடன் நமது சித்த மருத்துவம், பாரம்பரிய வாழ்வியல் மற்றும் ஓகம் போன்றவைகளின் கூட்டு சிகிட்சை முறைகள்தான் இன்று நமக்கு தேவை. நவீன மருத்துவர் சே.நெ.தெய்வ நாயகம் அய்யா அவர்கள் AIDS என்ற கொடிய நோய்க்கு ரசகந்தி மெழுகு, அமுக்கரா சூரணம் மற்றும் நெல்லிக்காய் லேகியம் என்ற மூன்று சித்த மருந்து கலவைகளை கொண்டு பல நோயாளிகளை பிழைக்க வைத்துள்ளது மனதில் கொள்ள வேண்டியது. அவரின் காலத்திற்கு பிறகு, அந்த ஆராய்ச்சியை எவரும் தொடராதது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதைப்போல உலகத்துக்கு தேவையான, கூட்டு மருத்துவ முறை சிகிட்சை (Integrative Medicine care) முறை உருவாக தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ ஒரே வழி, மாவட்டம் தோறும் சித்த மருத்துவ கல்லூரி நிறுவி, ஆராய்ச்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்ததால் பல மக்களை நோய்களிலிருந்து காக்கலாம். மாநிலத்தின் மருத்துவ வளர்ச்சியிலும் முன்னோடியாக வர வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மாவட்ட சித்த மருத்துவ கல்லூரியிலும் ஆங்கில மருத்துவத்துடன் இணைந்த ஒரு ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி முறை உருவாக்குவது மிகுந்த பயனளிக்கும்.

“வரப்புயர நீர் உயரும்,

நீர் உயர நெல் உயரும்,

நெல் உயரக் குடி உயரும்,

குடி உயரக் கோல் உயரும்,

கோல் உயரக் கோலன் உயர்வான்”

  - ஒவ்வைபாட்டி

ஒவ்வொரு இந்திய குடிமகனும் மகிழ்ச்சியான ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்தால் மட்டுமே, நாடு நலம் பெறும். அது மாவட்டம் தோறும் சித்த மருத்துவ கல்லூரிகளை நிறுவினால் மட்டுமே சாத்தியமாகும்.

மொத்தம் எத்தனை:

தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்குமானால், அங்கு தொலை நோக்கு பார்வையுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு கல்லூரியும் ஒரு சித்தரின் பெயர் தாங்கி நிற்குமானால் அதுதான், நாம் நம் அறிவில் சிறந்த முன்னோர்களுக்கு செய்யும் நன்றிக்கடன் ஆகும். ஏற்கனவே இரண்டு அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் (பாளையம் கோட்டை மற்றும் சென்னை) உள்ளன. சமீப களத்தில், பழனியில் புதிதாக ஒரு சித்த மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஆண்டுக்கு இரு கல்லூரிகள் விகிதம் அமைத்தால், அடுத்த பதினைந்து வருடத்தில், நாம் எல்லா மாவட்டங்களிலும் சித்த மருத்துவ கல்லூரிகள் அமையப் பெற்று விடுவோம். எல்லா கல்லூரிகளையும் அகத்தியர் சித்த மருத்தவ பல்கலைகழகத்துக்கு கீழே கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும்.

எதற்கு தேவை இத்தனை கல்லூரிகள்:

முதலில் நமக்கு தோன்றும் கேள்வி, இத்தனை செலவு செய்து அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டுமா? அது அத்தனை தேவையா? என்பதுதான். எதோ சித்த மருத்துவ கல்லூரி அமைந்தால், சித்த மருத்துவர்களுக்குதானே லாபம் என்ற விவரம் அறியாத கேள்வி நம்முள் எழத்தான் செய்யும். இதை வேறு விதமாக உங்களுக்கு விளக்கலாம் என்று எண்ணுகிறேன்.

ஒவ்வருக்கு வாழ்வியல் சார்ந்த ஒரு நோய் (life style disorder, உதாரணமாக மதுமேகம் அல்லது நீரிழிவு என்ற Diabetes mellitus) 40 வயதில் வருகிறது என்று வைத்து கொள்வோம். அவர் இன்னும் சராசரியாக குறைந்தது 30 வருடமாவது ஆரோக்கியமாக வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. இந்த 30 வருடத்திற்குள், அவர் அலோபதி மருத்துவம் மட்டுமே எடுத்து கொண்டால், அது அவரது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் (glucose) அளவையும், மூன்று மாதகால சராசரி இரத்த சர்க்கரை (glycosylated hemoglobin – HbA1c) அளவையும் கட்டுக்குள் வைக்க மட்டுமே பெரும் பாடுபட வேண்டி இருக்கும். அவரது, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, இதய நோய்கள், கொழுப்பு சம்பந்தமான நோய்கள், ஆறாத புண்கள், பக்க வாதம், போன்ற பல சொல்லொண்ணா நோயின் வருங்கால விளைவுகளை (Complications of diabetes) தடுக்க அல்லது தள்ளிபோட மருந்தே இல்லை. ஒரு கட்டத்தில் நோய் கட்டுக்குள் வராமல் போகவே, அடுத்து வாழ்க்கை முழுதும் இன்சுலின் ஊசி போட்டுகொண்டே இருப்பதும், சந்தையில் ஏதாவது புதிய மாத்திரை வந்து நம்மை காப்பாற்றி விடாதா என்ற ஏக்கத்துடன் நாட்களை கழிப்பதும் ஒரு வித மன உளைச்சலை தந்து விடும். போதாக்குறைக்கு, மாத்திரை மருந்துகள் பல புதிய நோய்களையும் (Iatrogenic diseases) உண்டாக்கும். ஆக, மதுமேகம் வந்த ஒருவர் அடுத்த பதினைந்து இருபது வருடங்களில் காலின் ஒரு விரலையோ அல்லது, காலையோ இழக்க தன் மனதை தயாராக்கிக் கொள்ள நவீன மருத்துவம் பழக்கி விடுகிறது. இந்த உடல் மற்றும் மன உளைச்சலில் சிக்கி இருக்கும் ஒருவர், கண்டிப்பாக நடைபிணம் ஆகிவிடுகிறார். அவரால் தனது பணிகளை அல்லது தொழிலை கூட சரிவர செய்ய முடியாமல் போகிறது, ஆக மொத்தத்தில் அவரின் வாழ்க்கை தரம் (Quality of Life) குறைந்து விடுகிறது. இந்த சூழ்நிலையில்தான், ஒருவர் மூட நம்பிக்கைக்கு அடிமையாகி, எப்படியாவது இதுலிருந்து மீள வேண்டும் என்றும், யாராவது வந்து தம் துன்பங்களை, வலியை போக்க மாட்டார்களா என்றும் போலி சாமியார்கள் அல்லது மதவாதிகள் பின்னாலும், தொலைக்காட்சிகளிலும், தெருவோர சுவர் ஒட்டிகளில் வரும் மூலிகை ஆசாமிகளிடமும் மாட்டி, சிரமப்பட்டு, ஏமாற்றபட்டு, ஒரு கட்டத்தில், ஆண்டவன் மீதும் சித்த வைத்தியம் மீதும் நம்பிக்கை இழந்து போதல் நடக்கிறது.

சித்த மருத்துவம் ஒரு வாழ்வியல் முறை, நம் பாரம்பரிய வாழ்வியல் அறிவு. நம் முன்னோர்கள் நோய் வராமல் காப்பதற்காக உருவாக்கிய வாழ்வியல் முறையை கடைபிடிப்பதன் மூலமும், அதிக செலவில்லாத அவர்கள் வீடுகளுக்கு பக்கத்தில் கிடைக்கும் மூலிகை, உணவு முறைகளை கடைபிடித்து அவர்களின் உடல்நலனை காத்துகொள்ளவும், மாவட்ட அளவிலான சித்த மருத்துவ கல்லூரி மருத்துவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி ஆரோக்கியமான உணவு, உறக்கம் , உழைப்பு, ஓகம், தியானம் என்று அவர்களுக்கு நோய்கள் வராமல் காக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முன்வரவேண்டும். நோய் வந்தவர்களுக்கு உரிய மருத்துவம் வழங்கி அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர சரியான ஆலோசனைகளை வழங்க வழி செய்யவேண்டும். மேலை நாடுகளில் நோயாளிகளுடன் மருத்துவர்கள் அமர்ந்து உரையாடி ஒரு ஆலோசகராக அவர்களுக்கு உள்ள சிக்கலை படம் போட்டு விளக்கி அவர்களுக்கு புரியவைக்க முனைகிறார்கள். ஒவ்வொரு மருத்துவ சிகிச்சையையும் நோயாளிக்கு புரியவைத்து அவர் அனுமதித்து முழு மனதுடன் புரிந்துகொண்டபிறகு மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார். நோயாளிக்கு அதை தீர்க்க உள்ள பலவழிமுறைகளை விளக்கி அவருக்கு உரிய வழிமுறையை தேர்ந்தெடுக்க உதவுகிறார்கள். மருத்துவர்கள் ஒரு பேராசிரியர்களைப் போல விளங்குவதாக அமெரிக்காவில் உள்ள நண்பர்கள் கூறுவதுண்டு. அவர்கள் இந்தியா வரும்போது, மருந்து பெயரையோ அல்லது நோய் குறித்து ஆழமாக அறிந்துகொள்ள விரும்பி, இந்தியாவில் உள்ள மருத்துவர்களை அணுகினால், இந்திய மருத்துவர்கள் சிலர் கோபப்படுவதாகவும், உரிய நேரம் எடுத்து விளக்கிக் கூறுவதில்லை என்றும் பகிர்ந்துகொண்டார்.

ஒவ்வொரு மாவடத்திலும் ஒரு சித்த மருத்துவக் கல்லூரியும், சித்த மருத்துவ – ஆங்கில மருத்துவ ஒருங்கிணைந்த ஆய்வும் தமிழகத்திலுள்ள சித்த மருத்தவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக, மக்களின் கோரிக்கையாக மாறுமானால், இது நடைமுறைக்கு உகந்ததுதான் என்பதை நாம் காண்போம்.

ஆக, கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி, மாவட்டம் தோறும் சித்த மருத்துவ கல்லூரிகள் இருக்குமேயானால், இப்படிப்பட்ட மதுமேக நோயாளிகள் ஆரம்பத்திலேயே சித்த வைத்தியமுறைகளை கையாண்டு வந்தால், கண்டிப்பாக இருபத்தைந்து வருடம் நவீன மருந்துகள் இல்லாமேலேயே, நோயின் வருங்கால விளைவுகளும் (Complications of diabetes) இல்லாமலேயே, தனது 65 வயதை மகிழ்ச்சியாக கடக்க முடியும். அதற்கு அப்புறம், தேவைக்கேற்ப நவீன மருத்துவம் கைகொடுக்கும், அவரது ஆரோக்கியமான ஆயுளும் நீளும். அவரின் வாழ்க்கை தரம் (Quality of Life) அதிகமாகி, தனது தொழிலை சரிவர செய்யவும் வழிவகுக்கும். இதனால் தமிழகத்தின் மனித வளம் பாதுகாக்கப்பட்டு, அதன் பயனை தமிழகம் கண்டிப்பாக அடையும். நன்றாக தொழில் செய்து, பணம் சேர்த்து, மகிழ்ச்சியாக ஆவது குடும்பம் மட்டுமல்ல, தமிழ்நாடும் அதன் மூலம் இந்தியாவும் நல்ல பலனடையும்.

இதே போலதான், இதய வியாதிகள், குழந்தை இன்மை, சிறுநீரக நோய்கள், கருப்பை நோய்கள், புற்று நோய்கள், விபத்துக்களின் இழப்புகள் (Trauma, accident, etc.) என எல்லா நோய்களையும், சித்த மருத்துவம், ஓகம் மற்றும் நவீன மருத்துவத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறை கொண்டு அணுகினால், கண்டிப்பாக மனித இனம் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்யும். தமிழக அரசு மற்றும் மத்திய இந்திய அரசு தமிழ் நாட்டு மக்களின் மருத்துவ செலவுக்கு ஆண்டு தோறும் பல கோடிகள் செய்யும் செலவுகள் கண்டிப்பாக குறையும். மனிதனை நடை பிணமாக அலைய வைக்க பயன்படுத்தும் இந்த பணத்தை, வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் சித்த மருத்துவ கல்லூரிகள் அமைக்க செலவிடலாமே. தனி மனிதன் ஆரோக்கியமாக இருந்தால் தான், நாடு வளர்ச்சி அடையும்.

என்ன என்ன பலன்கள் தமிழ் நாட்டுக்கு:

  • வேலை வாய்ப்பு – சித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், யோகா வல்லுனர்கள், வர்மா வல்லுனர்கள், நவீன மருத்துவர்கள், அடிப்படை மருத்துவ அறிவியல் அறிஞர்கள், தாவரவியல் துறை வல்லுநர்கள் போன்ற பலர் வேலை வாய்ப்பை பெறுவார்.
  • நோயாளிகள் – வெளி நோயாளர் பிரிவு, உள் நோயாளர் பிரிவுகள், ஏற்படுத்தி கூட்டு மருத்துவ முறை சிகிட்சை (Integrative Medicine care) முறை தரப்பட வேண்டும்.
  • Medical tourism - உலகத்தரம் வாய்ந்த படுக்கை வசதிகள் கொண்ட தனி அறைகள் அமைத்து, அங்கே வெளிநாட்டினர்கள் வந்து தங்கி சிகிட்சை பெற வசதி செய்ய வேண்டும். இதை தமிழ்நாடு சுற்றுலா துறையினருடன் இணைந்து செய்ய வேண்டும். உங்களுக்கு தெரியுமா, இந்தியாவில் ஆண்டுதோறும் தமிழ் நாட்டுக்குத்தான் அதிகமாக சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். அவர்களை நமது சித்த மருத்துவ கல்லூரிகளில் வைத்தியம் பார்க்க வரவழைத்தால், தமிழக அரசுக்கு வருமானமும் கிடைக்கும், மருத்துவ சுற்றுலாவும் (Medical tourism) அதிகரிக்கும். வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் ஆண்டு தோறும் ஒரு முறையாவது குடும்பத்துடன் தாய்நாடு வந்து செல்கிறார்கள். இன்றைய சூழலில் அவர்கள் பாரம்பரிய மருத்துவம் தேடி கேரளா செல்கின்றனர். அவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை தமிழ் நாட்டின் சித்த மருத்துவத்தை பெற இங்கு வந்து சென்றாலே, அதுவே போதுமான வருமானத்தை அரசுக்கு ஈட்டி தரும். மருத்துவம் பார்க்கவேண்டும் என்பதற்காகவே தமிழ் மண்ணை அடிக்கடி நம் மக்கள் எட்டிப் பார்ப்பர்.
  • ஆராய்சிகள் (Evidence from Research) – இன்றைய தினத்தில், பாரம்பரிய மருத்துவ முறைகளில் எதிர்பார்த்த அளவு ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை. காரணம், போதிய வசதியுடன் கூடிய ஆராய்ச்சி மருத்துவமனைகள் இல்லாததுதான். இனி அந்த குறை இருக்காது. போதிய ஆராய்ச்சிகள் நடக்கும் போது, உலக அளவில் நம் மருத்துவ முறைகளுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்க வழி வகை செய்யும்.
  • மூலிகை பண்ணைகள் – பள்ளி மற்றும் பிற கல்லூரி மாணவர்களுக்கு மூலிகைகளை பார்த்து படிப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும், நோயாளிகளுக்கு கொடுப்பதற்கும், மூலிகை வியாபாரம் செய்து பணம் ஈட்டவும் இது பயன்படும். அங்கு மக்கள் மூலிகை வாசனையோடு நடை பயிற்சி மேற்கொள்வர்.
  • அருங்காட்சியகம் – சுற்றுலா பயணிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் நமது பாரம்பரிய அறிவை தரும்படியான அருஞ்காட்சியகம், நூலகம் மற்றும் புத்தக சாலைகள் மக்களுக்கு கண்டிப்பாக பயன்படும். கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அவர்களின் பாரம்பரிய மருத்துவத்துக்கென்றே உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் உள்ளதை நான் பார்த்துள்ளேன். தமிழகத்தில் அப்படி இன்று வரை நாம் யோசிக்கவே இல்லை. நமது மருத்துவ ஓலை சுவடிகளையும், மருந்துகள் மற்றும் மூலிகைகளையும், மருந்து செய்யும் கருவிகளையும் இன்னும் பல அம்சங்களையும் உள்ளடக்கி அருங்காட்சியகம் அமைக்கலாம்.
  • படிப்புகள் – சித்த மருத்துவம், Integrative Medicine (கூட்டு மருத்துவ முறை சிகிட்சை), வர்ம வைத்திய முறை, யோகா, உணவு முறைகள், மருந்தாளுனர், செவிலியர், தாவரவியல், Environmental Biology, Biotechnology, பண்ணை முறைகள், பாரம்பரிய விவசாயம், தேனீ வளர்ப்பு, பட்டுபுழு வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, பனை காடுகளும் அதன் பொருட்களும், தமிழ் துறை, ஓலை சுவடியியல், தொல்லியல், மானுடவியல் (anthropology) இன்னும் பல படிப்புகளை உள்ளடக்கிய கல்லுரி வளாகமாக இது அமைய வேண்டும். அங்கு நம் தமிழ் பிள்ளைகள் மட்டுமலாது, வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி நாட்டினர் வந்து படித்து செல்வர்.

அரசு என்ன செய்ய வேண்டும்:

மாற்று மருத்துவ முறைகள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை வளர்ந்து உள்ளது. பல ஆராய்ச்சிகளும் அவற்றின் பயன்பாடுகளை உறுதி செய்கின்றன. எனவே அரசு ஆண்டுக்கு இரு கல்லூரிகள் விகிதம் அமைத்தால், அடுத்த பதினைந்து வருடத்தில், நாம் எல்லா மாவட்டங்களிலும் சித்த மருத்துவ கல்லூரிகள் அமையப் பெற்று விடுவோம்.

  • “அகத்தியர் சித்த மருத்துவ பல்கலைகழகம்” அமைக்க வேண்டும். ஏற்கனவே அருமை நண்பர் சித்த மருத்துவர் விஜய் விக்ரமன் அவர்கள் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்காக, சித்த மருத்துவ ஆர்வலர்களை சேர்த்துக்கொண்டு, பல அறவழி போராட்டங்களை மேற்கொண்டும், ஆட்சியாளர்களை சந்தித்தும், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் இருந்தார், சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்ததை நாம் அறிவோம். இது நடைமுறைக்கு வர அனைவரும ஒருங்கிணைந்து கோரிக்கையை வலுவாக்கவேண்டும்.
  • எல்லா மாவட்டங்களிலும் சித்த மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டும்
  • ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியாக கூட்டு மருத்துவ முறை சிகிட்சை (Integrative Medicine care) முறை தரப்பட வேண்டும். அதற்கான பல் துறை வல்லுனர்களை ஒருங்கிணைத்து அதை செயல் படுத்த வேண்டும்.
  • அரசியல்வாதிகள் அடிக்கடி இங்கு வந்து தங்கி சிகிட்சை எடுத்து கொள்ள வேண்டும். அப்போது சிஸ்டம் தானாக சரியாகும்.
  • வெளி மாநிலம், வெளி நாட்டு நோயாளிகள் வந்து சிகிச்சை பெறவும், மாணாக்கர்கள் வந்து பயிலவும் வசதிகளை செய்து தரவேண்டும்.
  • மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க, தமிழ்நாட்டின் எல்லா ரெயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும், அந்தந்த ஊரில் உள்ள சித்த மருத்துவ கல்லூரிகளை பற்றி விளம்பரம் வைக்கலாம். இன்றளவும் எவ்வளவோ விமான நிலையங்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கடந்து செல்கிறேன். பல நாட்டு அரசுகள் அவர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பற்றியும், சிகிட்சை நிலையங்களைப் பற்றியும் விழிப்புணர்வு வீடியோ மற்றும் பதாகைகள் வைத்து பயணிகளை ஈர்க்கின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் கூட ஆயுர்வேதம் மற்றும் பஞ்ச கர்மா வைத்திய முறைகளுக்கு அரசே விளம்பரம் தருகிறார்கள். இதை போல, தமிழக அரசும் சித்த வைத்தியம் பற்றிய விழிப்புணர்வும், விளம்பரமும், செய்தால் அது ஒரு சிறந்த முயற்சி ஆகும்.
  • மத்திய அரசு இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான அமைச்சகம் (Ministry of AYUSH) அமைத்து சிறப்பாக செயல்படுவதிபோல, தமிழக அரசும் சித்த மருத்துவ அமைச்சகம் (Ministry for Siddha Medicine) விரைவில் அமைத்து மேற்சொன்ன எல்லா பணிகளையும் திறம்பட செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அமையுமேயானால், ஒவ்வொரு இந்திய குடிமகனும் மகிழ்ச்சியான ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்து, தொழில் பல செய்து, குடும்பத்தையும், நாட்டையும் முன்னேரற்றுவர் என்பதை மறுக்க முடியாது. இதைத்தான், “வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோலன் உயர்வான்” என்று அன்றே சொல்லி வைத்தாள் நம் ஒவ்வைபாட்டி.

- சித்தம் தெளியும் (சித்தம் வளரும்)...

மாற்று மருத்துவ முறைகள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை வளர்ந்து உள்ளது. பல ஆராய்ச்சிகளும் அவற்றின் பயன்பாடுகளை உறுதி செய்கின்றன. எனவே அரசு ஆண்டுக்கு இரு கல்லூரிகள் விகிதம் அமைத்தால், அடுத்த பதினைந்து வருடத்தில், நாம் எல்லா மாவட்டங்களிலும் சித்த மருத்துவ கல்லூரிகள் அமையப் பெற்று விடுவோம்.

by Swathi   on 29 Jun 2018  1 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள் பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்
மனித உடல் என்கிற அதிசயம்... மனித உடல் என்கிற அதிசயம்...
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும் ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்... சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...
வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும். வருமானம் குறைவாக இருந்தாலும், நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.
சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி சித்தர் இலக்கிய இரகசியங்கள் - மருத்துவர். அன்பு கணபதி
ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள் ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள்
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4 சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4
கருத்துகள்
01-Jul-2018 03:08:48 Dr.S.SelvakumarMD(s) said : Report Abuse
Excellent sir... All the best...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.