|
|||||
தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்! |
|||||
தீபாவளிக்கான சிறப்பு பஸ்கள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சுமார் 11,367 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர நவம்பர் 3,4,5 தேதிகளில் தமிழகத்தின் மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும். எனவே தீபாவளிக்கு மொத்தம் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இதற்கான முன்பதிவு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தீபாவளி சிறப்புப் பஸ்கள் சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது: அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை வெளிச்சுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே பயணம் செய்யும் பயணிகள் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பஸ் நிறுத்தங்களுக்குப் பதிலாக ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திட்டமிட்டபடி ஆந்திரா செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் செல்லும் பஸ்கள், திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. மதுரை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டப் பேருந்துகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. |
|||||
by Mani Bharathi on 22 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|