|
|||||
பூரி ஜெகன்நாதர் கோயிலுக்குள் போலீசார் காலணி அணிந்து செல்ல உச்சநீதிமன்றம் தடை! |
|||||
பூரி ஜெகன்நாதர் கோயிலுக்குள் போலீசார் ஆயுதங்கள் எடுத்துச் செல்லவும், காலணிகள் அணிந்து செல்லவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. ஒடிசா மாநிலம், பூரியில் புகழ் பெற்ற ஜெகன்நாதர் கோயில் உள்ளது. கடந்த 3ம் தேதி இங்கு சோதனை முயற்சியாக பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ஜெகன்நாத் சேனா’ என்ற அமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷன் பட்நாயக் கைது செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது. காவல் நிலையங்களும், கோயில் அலுவலகமும் சூறையாடப்பட்டன. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கோரியும், கோயிலுக்குள் போலீசார் ஷூவுடன் நுழைந்ததாகவும் சமூக கலாசார அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர், ‘‘வன்முறை சம்பவத்தின்போது போலீசார் துப்பாக்கிகளுடன், பூட்ஸ் அணிந்து கொண்டு கோயிலுக்குள் நுழைந்தனர். இதனால், கோயிலின் புனிதம் பாதிக்கப்படுகிறது’’ என்றார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “எந்த போலீசாரும் ஆயுதம் மற்றும் ஷூக்கள் அணிந்துகொண்டு கோயிலுக்குள் நுழையக்கூடாது” என்று கூறப்பட்டு உள்ளது. |
|||||
by Mani Bharathi on 11 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|