சுசீந்தரன் இயக்கத்தில், விஷால், லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி, கடந்த 1 ம் தேதி ரிலீசான பாண்டியநாடு திரைப்படம் வசூலில் சிகரம் தொட்டு வருகிறது. இந்நிலையில் பாண்டியநாடு திரைப்படம் என்னுடைய கதை என புவனராஜா என்ற உதவி இயக்குனர் ஒருவர் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.
இது குறித்து இயக்குனர் புவனராஜா கூறியதாவது, அழகர்சாமியின் குதிரை படப்பிடிப்புக்கு ஆண்டிப்பட்டிக்கு இயக்குனர் சுசீந்திரன் வந்தபோது, நான் இயக்கிய குறும்படம் மட்டுமின்றி, என்னிடமிருந்த இரண்டு கதைகளை சொன்னேன். அந்த இரண்டு கதைகளையும் இணைத்துதான் இப்போது அவர் பாண்டியநாடு படத்தை இயக்கியிருக்கிறார் மேலும், கதையின் முக்கிய சாரம்சத்தை எடுத்துக்கொண்டு, மணல் திருட்டை கிரானைட் திருட்டு என்றும், லாரி மோதி சாவதை பஸ் மோதி சாவது போலவும் மாற்றியிருக்கிறார் என குற்றம் சாட்டுகிறார் உதவி இயக்குனர்.
ஆனால் இதுகுறித்து சுசீந்திரன் தரப்பில் கூறும்போது, தேனி பகுதிகளில் ஒருவரை பழி வாங்கும்போது கை கால்களை கட்டி கிணற்றில் போட்டு விடுவார்கள் என்பதைத்தான் ஒருமுறை என்னிடம் சொன்னார் புவனராஜா. அதை மட்டுமே நான் க்ளைமாக்சில் பயன்படுத்தினேன். மற்றபடி அவர் கதையை நான் படமாக்கி விட்டேன் என்று கூறுவதில் உண்மையில்லை என்று மறுத்துள்ளார். அதோடு, புவனராஜா மீது இயக்குனர் சங்கத்திலும் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளார்.
|