|
||||||||
தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார் |
||||||||
தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார் அறிமுகம்: மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் முனைவர். தெய்வசுந்தரம் நயினார் அவர்கள் ஆவார். ஆராய்ச்சி மேற்படிப்பை முடித்து 35 ஆண்டுகளாகச் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழியியல் துறையில் பணியாற்றி அத்துறையின் தலைவராக உயர்ந்து 2010ல் ஓய்வு பெற்றார். தமிழ் கற்பித்தல், தமிழ் கணக்கீட்டு மொழியியல், தமிழ் இலக்கணம், Neuro Lingustics, Clinical Lingustics ஆகிய துறைகளில் சிறப்புத்தகுதி பெற்ற இவர் நான்கு புத்தகங்களையும், 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தைப் பிழையில்லாமல் தட்டச்சு செய்ய Microsoft Word--ஐ நாம் பயன்படுத்துவது போல, தமிழ் மொழிக்கும் ஒரு அதி நவீன பயன்பாட்டு மென்பொருள் வேண்டும் என்ற நோக்கில் ‘மென்தமிழ்’ எனப்படும் பயன்பாட்டு மென்பொருளைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய வழிகாட்டலின் கீழ் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்ஃபில் பட்டமும், 25 மாணவர்கள் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். இளமைக்காலம்: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பாளையங்கோட்டை கதிட்ரல் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பைப் படித்தார். பின்பு நெல்லையில் உள்ள கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்;த இவர், பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் முதுகலைத் தமிழ் படித்தார். பின்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மொழியியல் உயராய்வு மையத்தில் முதுகலை மொழியியல் படித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர். பொன் கோதண்டராமன் அவர்கள் வழிகாட்டலில் தமிழ் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 5 ஆண்டுகள் ஆய்வில் ஈடுபட்ட பிறகு விரிவுரையாளராகச் சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். கணிதவியல் நோக்கில் இலக்கணம்: முதுகலைத் தமிழ் படிப்பில் சேரும் போது இவருக்குத் தமிழ் இலக்கணம் குறித்த எந்த அறிமுகமும் இல்லாமல் இருந்தது. இவர் முதுகலை படிப்பில் சேர்ந்த போது இவருடன் படித்த 11 பேரில் 10 பேர் இளங்கலை அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள். எனவே அவர்களுக்கெல்லாம் ஆர்வம் வரும் வகையில் பேராசிரியர் எஸ். சுப்ரமணியம் அவர்கள் சிறப்பு வகுப்பு எடுப்பார். சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடத்தப்படும் இந்த வகுப்பானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பேராசிரியர் எஸ. சுப்ரமணியம் அவர்கள் தமிழ் இலக்கணத்தைக் கணிதமாக நடத்துவார். அதற்குக் காரணம் அவருக்கு இருந்த மொழியியல் பின்னணியே ஆகும். 1981ம் ஆண்டு பேராசிரியர் முத்துச்சண்முகம் அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். அவர் முதுகலை மொழியியல் பாடப்பிரிவை அறிமுகப்படுத்தினார். அந்த பாடமும், பேராசிரியர் எஸ். சுப்ரமணியம் அவர்கள் நடத்திய இலக்கண வகுப்பும் தான் தமிழ் இலக்கணத்தை கணிதவியல் நோக்கில் பார்க்கக்கூடிய பார்வையை இவருக்குத் தந்ததாகக் குறிப்பிடுகிறார். முதுகலைத் தமிழுக்கும், முதுகலை மொழியியலுக்கும் உள்ள வேறுபாடு: முதுகலைத் தமிழ் என்பது ஒரு குறிப்பிட்ட(தமிழ்) மொழியின் இலக்கிய, இலக்கணங்களைப் படிப்பது ஆகும். ஆனால் மொழியியல் என்பது குறிப்பிட்ட மொழி சார்ந்ததல்ல. அது அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது. மொழியினுடைய அமைப்பு, அழகியல் பண்புகள், அழகியல் செயல்பாடுகள் என்று பொதுவாகப் படிக்கக்கூடிய அறிவியலே ‘மொழியியல்’ எனப்படும். முதுகலைத் தமிழ், முதுகலை ஆங்கிலம் போன்ற மொழி படித்தவர்களால் அம்மொழியின் இலக்கணத்தை நன்கு கூற இயலும். ஆனால் மொழியியல் படித்தவர்களால் எந்த ஒரு மொழியையும் ஆராய்ச்சி செய்து அந்த மொழிக்கு இலக்கணம் எழுத முடியும் என்று இரண்டிற்கும் வேறுபாடு தருகிறார் முனைவர். தெய்வ சுந்தரம் நயினார் அவர்கள். மொழியியல்: =உலகில் ஏறத்தாழ 7000 மொழிகள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்தோமானால், அனைத்து மொழிகளுக்கும் சில பொதுமைத்தன்மைகள் காணப்படுகின்றன. சென்னை பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை என்ற ஒன்று கிடையாது. 2003, 2004ம் ஆண்டில் தான் தமிழ் மொழித்துறையில் மொழியியல் பிரிவு கொண்டுவரப்பட்டது. பி.இ. பட்டதாரிகள் கூட இதில் சேரலாம். மூளையின் ஒவ்வொரு பகுதியும், மொழியினுடைய ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் காரணமாக இருக்கிறது. எனவே மொழியியல் என்பது குறிப்பிட்ட மொழியினை மட்டும் சார்ந்ததல்ல. அனைத்து மொழிகளின் பொதுமையான கூறு; ஒரு அறிவியல் கண்ணோட்டம் என்கிறார் முனைவர். தெய்வ சுந்தரம் நயினார் அவர்கள். கணினி மொழியியல்: பிற மென்பொருட்களைப் போலத் தமிழுக்கும், கணினியில் மென்பொருட்கள் வர வேண்டும் என்றால் கணினிக்குத் தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும். கணினிக்குத் தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால், முதலில் தமிழ் மொழியை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் முனைவர். தெய்வ சுந்தரம் நயினார் அவர்கள். மேலும், தமிழ் மொழியின் தொன்மையினை மட்டுமே பாராட்டிக் கொண்டிருக்காமல் இன்றளவில் அது பெற்றுள்ள வளர்ச்சி நிலைகளையும் ஆராய வேண்டும். அப்படி ஆய்வு செய்ததைக் கணினிக்கேற்ற கோப்புகளாக மாற்றிக் கணினிக்கு கொடுக்க வேண்டும். ஆசிரியர் ஒரு சொல்லை திருத்துகிறார் என்றால் அச்சொல்லைக் குறித்த அறிவு அவருக்கு இருக்கிறது என்றே பொருள். அந்த அறிவை கணினிக்கும் கொடுக்க வேண்டும் என்கிறார். கணிதமாக மாற்ற வேண்டிய தமிழ் இலக்கண விதிகள்: கணினியை பொறுத்தவரை 2+2=4 தான். அதற்கு மாற்றுக் கிடையாது. கணித அமைப்புடையது கணினி. தமிழ் இலக்கணத்தையும் கணித அமைப்பாக மாற்றிக் கணினியில் செலுத்த வேண்டும் என்கிறார் முனைவர். தெய்வசுந்தரம் நயினார் அவர்கள். a2+b2 = (a+b) (a-b) போன்ற வாய்ப்பாடுகளாகத் தமிழ் இலக்கணத்தை மாற்ற வேண்டும். உதாரணமாக பெயர்ச்சொல் ; = + காலம் - வேற்றுமை வினைச்சொல்; = + வேற்றுமை - காலம் இவை போன்று தமிழ் இலக்கணத்தை மாற்றிக் கணினிக்குள் செலுத்த வேண்டும். தமிழ் உணர்வும், தமிழ் ஆர்வமும் மட்டும் தமிழுக்குக் கணினியை கற்றுக் கொடுக்காது. அறிவியல் பின்னணியும் வேண்டும். தமிழ் இலக்கணம் விதிகளுக்குட்பட்டது என்கிறார் முனைவர் தெய்வசுந்தரம் அவர்கள். உதாரணமாக ‘மயங்கு’ என்ற தன்வினைச் சொல் ‘மயக்கு’ என்ற பிறவினைச் சொல்லாக மாறி, ‘மயக்கம்’ என்ற பெயர்ச்சொல்லாக மாறுகிறது. கலந்து, தயங்கு போன்ற சொற்களும் அப்படியே. இவை விதிகளுக்குட்பட்டவை. தமிழ் மொழியில் ஒற்றுக்கு முதற்கொண்டு அர்த்தம் உள்ளன. கைபிடிக்கும், கைப்பிடிக்கும் வேறுபாடு உள்ளது. ஆங்கிலத்தில் ஒரு பெயர் சொல்லோடு அதிகபட்சம் 2 விதிகள் தான் சேரும். தமிழ் மொழியில் ஒரு பெயர் சொல்லோடு 10 விதிகள் சேர்க்கலாம். விதிகள் மட்டுமல்லாமல் தமிழ் மொழியில் வரிசை முறையும் இருக்கிறது. ‘ஆசிரியர்களை’ என்ற சொல்லில் பெயர்ச்சொல், பன்மை விகுதி, வேற்றுமை விகுதி என்ற வரிசைமுறை இடம்பெறுகிறது. இதனை மாற்றியமைக்க முடியாது. மாற்றியமைக்கக் கூடாது. ஆகவே தமிழ்மொழியின் சொல்லமைப்பு முழுமையாக விதிகளை அடிப்படையாகக் கொண்டது. அந்த விதிகளைக் கணித கூறுகளாகக் கணினிக்குள் செலுத்த வேண்டும் என்கிறார் முனைவர். தெய்வசுந்தரம் நயினார் அவர்கள். அதிகரிக்க வேண்டிய பயன்பாடு: தமிழ் மொழியின் பயன்பாடு இந்தக் காலகட்டத்தில் குறைந்து கொண்டு வருகிறது. காய்கறிக்கடைகளின் விலைப்பட்டியலில் கூட ஆங்கில மொழியே இடம்பெற்றிருக்கிறது. தமிழ் என நினைத்து நாம் பேசும் பல சொற்கள் பிற மொழிச் சொல்லாகவே இருக்கின்றன. தமிழ் படித்தால் வேலை இல்லை என்ற நிலை உள்ளதால் தமிழ் படிப்பதற்கு மாணவர்கள் தயங்குகின்றனர். எந்த மொழியைக் கற்றாலும் சிந்தனைத்திறன் தாய்மொழியிலேயே அமையும். தாய் மொழியில் மட்டுமே மூளை உள்வாங்கும். எனவே ஆங்கில மொழியில் தான் அறிவு வளர்ச்சி பெறும் என்ற தவறான எண்ணத்தை நாம் தவிர்க்க வேண்டும் என்கிறார் முனைவர். தெய்வ சுந்தரம் நயினார் அவர்கள். மேலும், தமிழ் மொழிக்கான பயன்பாட்டுத் தேவையை அதிகப்படுத்த வேண்டும். தேவை அதிகரிக்க ஆய்வுகளும் அதிகரிக்கும். மொழியும் வளர்ச்சி பெறும். தொன்மையை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் இன்று வரை பெற்றுள்ள வளர்ச்சியை, இன்று பேசுகின்ற தமிழை ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார். பெற்ற விருதுகள்: முனைவர். தெய்வ சுந்தரம் நயினார் அவர்கள் 2013ம் ஆண்டுத் தமிழக அரசின், முதலமைச்சர் கணினித்தமிழ் விருதினைப் பெற்றார். மலேசியாவின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருதினையும்’ பெற்றுள்ளார். தமிழ் மொழிக்குத் தொண்டாற்றுபவர்கள் சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள், சென்ற தலைமுறைக்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களும் தமிழ் மொழிக்குத் தொண்டாற்றிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களைத் தன் முகநூல் பக்கத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார் முனைவர். தெய்வ சுந்தரம் நயினார் அவர்கள்.
முனைவர். தெய்வ சுந்தரம் நயினார் அவர்களின் சீரிய முயற்சிகளும், ஆய்வுகளும் தொடர வலைத்தமிழின் வாழ்த்துக்கள்... |
||||||||
by Lakshmi G on 05 Apr 2021 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|