நமது கலாசாரத்தில் உள்ள பல பழக்க வழக்கங்களை ஆராய்ந்து பார்த்தால் அவை, பெரும்பாலும் உடல் நலத்தையும், உள்ள நலத்தையும் மேம்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும். நாம் காலங்காலமாகக் கடைபிடிக்கும் பல்வேறு பழக்கங்களுக்குப் பின்னால் அறிவியல் ரீதியான காரணங்கள் பல இருக்கும்.
அக்காலத்தில் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்படுவதில்லை. மங்கல, அமங்கல நிகழ்வுகள் நடப்பதைக் குறிக்க வீட்டு வாசலில் தோரணங்கள் கட்டப்பட்டன. அவை கட்டப்பட்டிருக்கும் முறையை வைத்தே அந்த வீட்டில் என்ன நடக்கிறது எனக் கூறிவிடலாம்.
பொதுவாக அலங்காரத்துக்காகக் கட்டப்படும் தோரண இலைகள் காற்றைத் தூய்மைப்படுத்த உதவும். தென்னங் குருத்தோலை கொண்டு செய்யப்படும் தோரணங்கள் குருவிகள் போன்ற வடிவத்தில் கட்டப்படும்.
மாவிலைகளும் சில நேரங்களில் சேர்க்கப்படும். குருவி இறக்கை கீழ்நோக்கி இருந்தால் மங்கல நிகழ்வு என்றும் அது மேல்நோக்கி இருந்தால் அமங்கல நிகழ்வு என்றும் வகைப்படுத்தப்பட்டது.
தென்னங் குருத்தோலை கொண்டு செய்யப்படும் தோரணங்களில் குருவி இறக்கை கீழ்நோக்கி இருப்பின் அது மங்கலத்தோரணம் என்று கொள்வர் ;இது நான்கு அல்லது ஐந்து குருவிகளைக் கொண்டு இருக்கும்.
நம் தென்னாட்டிலும் இலங்கையிலும் இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது.நமது நாட்டில் நான்கு அல்லது ஐந்து குருவிகள் கொண்டு விளங்கும் ;
இலங்கையில் ஐந்து குருவிகளைக் கொண்டு விளங்கும்.அதற்குக் காரணமும் சொல்கிறார்கள்.மங்கலத் தோரணமாவது தென்னைமரத்தின் மஞ்சள் குருத்தோலைகளில் ஐந்து தளங்களுடன் இரு முனைகளும் நிலத்தைப் பார்க்குமாறு கட்டப்படவேண்டும்.இவை ஐந்து கன்மேந்தியங்களையும் ஐந்து ஞானேந்திரியங்களையும் குறிக்கும் என்றும்,கன்மேந்தியங்களாலும் ஞானேந்திரியங்களாலும் புவியில் இன்பத் துன்ப நிகழ்வுகளை அனுபவித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருந்தாலும் இறைவனை நோக்கியே எமது [ ஆன்மாவின் ] செயல்பாடுகள் அமைகின்றன என்பதைக்குறிக்கின்றன என்னும் தத்துவ விளக்கத்தைத் தருகிறார்கள்.மங்கலத் தோரணங்களிடையே மாவிலைகளையும் இணைப்பர் .
அமங்கலத் தோரணம் மூன்று குருவிகள் இறக்கை மேல்நோக்கி கொண்டிருக்கும். அறம், பொருள், இன்பம் அனுபவித்த ஆன்மா பூவுலகை விட்டு மேலுலக வாழ்வில் வீடுபேற்றை நோக்கி இருவினைகளுடன் சென்றுகொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறது என்னும் தத்துவ விளக்கத்தைத் தருகிறார்கள். .
மாவிலை கட்டும்போது அதன் காம்பினை முன்பக்கம் எடுத்துக் குத்துதல் வேண்டும் .கொத்தாகக் காட்டுதலும் நன்மை தரும் .அமங்கல நிகழ்வில் மாவிலை பயன்படுத்தல் கூடாது.
சான்று மற்றும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் ==ஆகமச் சித்திரங்கள் -- மூன்றாம் பாகம் ,பக்கம்-- ௯ ஆசிரியர் .பிரம்மஸ்ரீ முனைவர் சாம்ப சோமாஸ்கந்த குருஜி ,ஈழ நல்லூர் .
அந்தப்பக்கத்தினை அடியேன் இணைத்துள்ளேன்.
புகைப்படங்கள்==
௧ , ௨, ௩ .மங்கல நிகழ்வுத் தோரணம் .
௪.அமங்கல நிகழ்வுத் தோரணம்.
௫ , மாவிலைத் தோரணம்.
௬.ஆகமச் சித்திரங்கள் -- மூன்றாம் பாகம் ,பக்கம்-- ௯ [9] ஆசிரியர் .பிரம்மஸ்ரீ முனைவர் சாம்ப சோமாஸ்கந்த குருஜி ,ஈழ நல்லூர் .
நன்றி : வீரமணி வீராசாமி
|