சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரது சிலையில் சுற்றிலும் பெருமாளின் தசாவதாரச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்புறம் நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கும் நரசிம்மருக்குக் கீழே நாகம் இருக்கிறது. இந்த நரசிம்மரைச் சுற்றி அஷ்டலட்சுமிகள் இருக்கின்றனர். இத்தகைய அமைப்பில் சக்கரத்தாழ்வார், நரசிம்மரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.திண்டுக்கல் மலைக் கோட்டையின் அடிவாரத்தில் அமைந்த கோயில் இது.
மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் நெல்லி மரமே இத்தலத்தின் விருட்சமாகும். இதை துளசிக்கும் ஒப்பானதாகச் சொல்வர். மகாலட்சுமி இருக்குமிடத்தில், மகாவிஷ்ணு வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலத்தை மகாவிஷ்ணுவின் இருப்பிடமாகக் கருதுகின்றனர். மாங்கல்யம் மற்றும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு சுவாமிக்கு நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
சுவாமி, வலது கையை ஆகாயம் நோக்கிக் காட்டியும், இடது கையால் பூமியைக் காட்டியபடியும் இருக்கிறார். கோயில் முகப்பில் பெரிய கருடாழ்வார் நின்ற நிலையில் இருக்கிறார். சித்ரா பவுர்ணமியன்று சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, குடகனாற்றில் இறங்குவார். ஆனி பிரம்மோற்ஸவம் மற்றும் பங்குனி உத்திரத்தன்று சுவாமிக்கு திருக்கல்யாண விழா நடக்கிறது. |