இக்கோயிலின் சிறப்பு காவேரி அம்மன் முன் வீற்றிருக்கும் நந்தி. இந்த நந்தி அதிகார நந்தி என்று அழைக்கப்படுகிறது. அம்மன் கோயிலில் நந்தி அமைந்திருப்பது அபூர்வமானது. இக்கோயிலில் அமைந்துள்ள நந்தி நேராக அம்மனைப் பார்த்து இல்லாமல் சற்று வலதுபுறம் திரும்பியது போல் காட்சி தருகிறது.இங்கு எழுந்தருளியிருக்கும் காவேரி அம்மனின் தனிச்சிறப்பு நீர் வளம் தான்.
இப்பகுதியில் கோடைக்காலத்தில் நீர் வளம் குறைந்துவிட்டால் இந்த அம்மனுக்கு சிறப்புப் பூஜை செய்து வேண்டிட, நல்ல மழை பெய்து வீட்டின் கிணற்றில் நீர்வளம் நிறைந்து காணப்படும் என்கிறார்கள். மேலும், ஆழ்குழாய்க் கிணறு, குளம் வெட்டுவதற்கு முன் காவேரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அபிஷேகத் தீர்த்தத்தை எந்த இடத்தில் கிணறு தோண்ட வேண்டுமோ, அந்த இடத்தில் தெளித்து, பூஜை செய்து கிணறு அல்லது ஆழ்குழாய்க் கிணறு அமைத்தால் நீர்வளம் நிறைந்து காணப்படுகிறது என்று அப்பகுதியில் வாழும் பெரியவர்கள் கூறுகிறார்கள்.
அதனால் இன்றும் விவரம் அறிந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்த பின்னரே தங்கள் வீட்டிற்கும், வயல் பகுதியிலும் கிணறு தோண்டும் பணியை மேற்கொண்டு நல்ல பலன் பெறுகிறார்கள். |