பொதுவாக வெளிநாடு செல்வோர் அங்கு சென்று திரும்பிய பின்னர், அந்த நாட்டு புராணத்தையே பாடுவார்கள் என்னும் நிலை ஒருபுறமிருக்க, தாயகப் பெருமையை வெளிநாட்டிலும் நிலைநாட்டி, தாயகம் திரும்பிய பின்னும் பேசப்படுபவர் பிரியா வர்தீஷ்.
இயற்கை விவசாயத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி என்று கேட்டோம். அதுபற்றி அவர் விவரிக்கிறார். அவரது சிறப்பு நேர்காணலுக்குள் நாம் செல்வோமா?
மகாகவி பாரதியின் ஊரான எட்டயபுரம், கோவில்பட்டிக்கு அருகில் உள்ளது. இதன் அருகில் உள்ள சிறு கிராமமான குளத்து உள்வாய்ப்பட்டி தான் எனது (பிரியா) அம்மா வழிப் பாட்டி ஊர். ஆடு, மாடுகள் என எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பமாக இருந்ததால் எனக்கு விவசாயத்தில் சிறுவயதிலேயே ஈடுபாடு ஏற்பட்டது.
அம்மாவின் தென்னந்தோப்பில் வேலை செய்வது எனில் எனக்குக் கொள்ளைப் பிரியம். எதற்கும், யாரையும் எதிர்பார்க்கக் கூடாது என்பது சிறு வயதிலேயே அம்மா எனக்குக் கற்றுத் தந்த பாடம்! கல்லூரியில் படிக்கும் போது, விடுமுறை நாட்களில், ஒரு நாள் டிரைவர் வராவிட்டாலும் நானே காரை ஓட்டத் தொடங்கிய பின் டிரைவர் விடுப்பு எடுப்பதே இல்லை. உழவுத் தொழிலை மேற்கொள்வது எனது வழக்கம் ஆனது.
வேலை நிமித்தமாக நானும், எனது கணவர் வர்தீஷும் அமெரிக்காவிற்கு, 2000 ஆண்டில் செல்ல வேண்டி வந்தது.
கேள்வி: உங்கள் விவசாயப் பணிகளை அமெரிக்காவிலும் தொடர்ந்த அனுபவம் பற்றி...
2001- ல் புற்றுநோய் பற்றிய உண்மை அறிந்ததும் வியப்பு ஏற்பட்டது. உணவு பதப்படுத்துதல், தயாரிப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றில் மாற்றம் செய்தால் புற்றுநோயை வெல்லலாம் என்பதே அது.
நமக்கு நாமே என இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது அப்போது தான். சிகாகோவில் அதிகக் குளிராக இருக்கும். 6 மாதங்கள் தாங்க முடியாத அளவிற்குப் பனி அதிகமாக இருக்கும். குளிர் காரணமாக எல்லோருக்குமே, சூரிய ஒளி கிடைக்காத காரணத்தால் வைடமின் டி பற்றாக்குறை இருக்கும்.
அப்போது தான் சமுதாய நோக்கம் தலையெடுக்கத் துவங்கியது. என்னதான் 6 மாத காலம் வெயிலாக இருந்தாலும், ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்தாலும், ஏன் பண்ணை வேலைகள் செய்யக்கூடாது என்னும் கேள்வி எனக்குள் எழுந்தது. மே முதல் வாரத்தில் அங்கே குளிர் குறையும். அரசு நிலங்களை அங்கு குத்தகைக்கு விடுவார்கள். அதனை வெவ்வேறு நாட்டினரும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வார்கள். நானும் அவர்களைப் போல 4 பிளாட் இடங்களைக் குத்தகைக்கு எடுத்தேன்.
ரஷியர்கள், இத்தாலியர்கள் என எல்லோரும் புடலங்காய், பாவக்காய் என அவரவர் நாட்டின் விதைகளைக் கொண்டு அங்கே பயிர் செய்யத் துவங்குவார்கள். அவர்களின் சதுர வடிவிலான பீன்ஸ் எல்லாம் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கும்.
விவசாயம் செய்கிறவர்கள் போக மற்றவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு இறங்கி வேலை செய்வார்கள்.
நமது வெண்டைக்காய் பொறியல் அக்கம்பக்கத்தினருக்கு வித்தியாசமாகத் தெரியும். அதேபோல் கத்தரிக்காய் போன்றவற்றைப் பார்த்தும் நமது உணவு முறைகள் பற்றித் தெரிந்து கொண்டனர். ஜிம்முக்குப் போய் சைக்கிளிங் செய்வதை விட விவசாய வேலைகள் மிகவும் பிடித்தது.
குளிர்பதனப்பெட்டியில் வைத்து தேவைக்கேற்ப ஓரளவே பயன்படுத்தினாலும், அவை அதிகப்படியாகவே இருந்த காரணத்தினால், அக்கம் பக்கத்தினருக்குக் கொடுக்க ஆரம்பித்தோம். அதேபோல அவர்களும் தங்களுக்குப் போக மீதியை மற்றவர்களுக்குத் தருவார்கள்.
பழங்காலத்தில் பண்டமாற்று முறை என ஒன்று இருந்ததாகச் சொல்வார்கள். கிட்டத்தட்ட அதே போன்ற பண்டமாற்று முறையை நாங்கள் மேற்கொண்டோம். அதிகப்படியானதைப் பிறருக்குத் தந்ததின் மூலம் எங்களுக்கும் திருப்தி ஏற்பட்டது. இங்கு செய்த விவசாயத்தை பிறந்து வளர்ந்த ஊரிலேயே ஏன் செய்யக் கூடாது என்கிற எண்ணம் அவ்வப்போது தலை தூக்கியது.
கேள்வி: எப்போது தாயகம் திரும்பினீர்கள்? அங்கு விட்ட பணிகளை இங்கு தொடர்ந்தீர்களோ?
பதில்: 2012-ல் நான் மட்டும் தாயகம் திரும்பினேன். எனது குடும்பத்தினர் இன்னும் அமெரிக்காவிலேயே உள்ளனர். இங்கு வந்த பின்னர் இயற்கை விவசாயி மறைந்த அய்யா நம்மாழ்வாரின் அறிமுகம் கிடைத்தது. அவரைச் சந்தித்த பின்னரே ஒருவித மன நிறைவு கிடைத்தது. ஒட்டன்சத்திரம் ஊரில் அதன் அடிப்படையை அறிய முடிந்தது.
செயற்கையான உரங்கள் மற்றும் மருந்துகளின் நச்சுத்தன்மை குறித்து அறிந்தததால் இயற்கை விவசாயத்தின் மீதான தாக்கம் அதிகமானது. இயற்கை உணவை யார் சாப்பிடுகிறார்கள். அதற்கான சந்தை எங்குள்ளது என்றெல்லாம் தேடல் துவங்கியது.
சென்னை மற்றும் திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இயற்கை உணவு பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இயற்கை அங்காடியின் அவசியம் பற்றி உணர முடிந்தது. இயற்கை விவசாயத்தில் எந்த வித நச்சும் கிடையாது என விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் உணர்த்தினோம். கேள்வி: சொந்த ஊரில் செய்த விவசாயம் பற்றி...
பதில்: 81 ஏக்கர் நிலத்தில் 35 ஏக்கரில் மட்டும் எனது இயற்கை விவசாயம் நடந்து வருகிறது.
கேள்வி: லாபகரமாக நடந்து வருகிறதா? மற்றவர்களுக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதா?
பதில்: விற்பனையைப் பொறுத்தவரை பல குறைகள் நிலவி வருகின்றன. வண்டி வாடகை, ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி, சாக்கு, கழிவு எனக் கழித்து விடுகின்றனர். 50 கிலோ மூட்டையில் ஒரு கிலோ கூடுதலாகவே அதாவது 51 கிலோ கொண்டு போனாலும் நாலைந்து கிலோ எடையில் குறைத்து மதிப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு கம்ப்யூட்டர் பில் தருவதாகக் கூறி எங்களிடமே ஐந்து ரூபாய் வசூலித்து விடுகின்றனர்.
மதுரை, சென்னை போன்ற வெளியூர்களுக்கு லாரிகளில் ஏற்றுவதற்கு காலை 3 அல்லது 4 மணிக்கே எடுத்துச் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் இறக்குவதற்கு ஆள் இல்லாமல் நாமே இறக்கி ஏற்றினாலும் கூட அதற்கும் இறக்குக்கூலி, ஏற்றுக்கூலி என்று போட்டு பில்லில் ஒரு தொகையைக் கழித்து விடுவார்கள். ஏன்? எதற்கு என்று கேள்வி கேட்காமல் வியாபாரம் செய்து விட்டு வர வேண்டும். இப்படி விவசாயிகள் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டி உள்ளது.
கேள்வி: இதற்கு என்ன தான் தீர்வு? மாற்று வழிகள் பற்றி யோசித்தீர்களா?
பதில்: நேரடி விற்பனை மட்டுமே தீர்வாக இருக்க முடியும். விவசாயக் குழுக்கள் அமைத்து நேரடியாக விற்பனை செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இப்போது தான் பலர் ஒருங்கிணைந்து வருகிறார்கள்.
கேள்வி: இது தவிர வேறு பாதிப்புகள் ஏதும் உண்டா?
பதில்: இயற்கைப் பாதிப்புகளுக்கு நாம் எதுவும் செய்ய முடியாது. மழைக் காலங்களில் காய்கறி பறிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக அண்மையில் ஏற்பட்ட கஜா புயலால் எங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 2500 வாழைகள் பாதிக்கப்பட்டது. 4 ஏக்கர் நிலத்தில் போடப்பட்டு இருந்த பந்தல் முழுவதும் அப்படியே சேதமானது. மிளகுப்பயிரும், அவகோடா மரங்களும் அடியோடு நாசமானது. அதிலிருந்து மீளவே சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. நாங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகள் இழந்தோருக்கு 17 வீடுகள் கட்டித் தந்துள்ளோம். ஏரிகள் தூர் வாருதல், 80 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் போன்றவற்றை மேற்கொண்டோம்.
கேள்வி: இயற்கை விவசாயம் சார்ந்து வேறு என்னென்ன செய்கிறீர்கள்? பதில்: கடந்த தமிழ்ப்புத்தாண்டு (ஏப்ரல் 14) முதல் ஒரு ஓய்வில்லம் (ரிசார்ட்) தொடங்கி இருக்கிறோம். இயற்கைச் சூழலை ரசிப்பதுடன் இயற்கை உணவுகளை உட்கொள்ளவும், வருபவர்களுக்கு மன நிறைவு ஏற்படவும் உதவுகிறோம்.
கேள்வி: ஓய்வில்லம் மூலமாக அனைவரையும் திருப்திப்படுத்த முடிகிறதா? பதில்: ஒருமுறை ஒரு ஞாயிறன்று நண்பர்கள் 20 பேர் திடீரென கொடைக்கானல் வந்து விட்டார்கள். அன்று பார்த்து வேலையாட்கள் யாருமில்லை. கம்பு தயாராக இருந்தது. அவர்களுக்கு கூழ் தயாரித்ததோடு, பலாக்காய், வெங்காயம் போட்டு புதுவித பிரியாணி தயாரித்தேன். ரசம், சவ்சவ் கூட்டு என கொஞ்ச நேரத்திலேயே தயாரித்து அசத்தி விட்டேன். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையே பாதி வேலையை முடித்து விடும்.
கேள்வி: ஓய்வில்லம் பற்றி மேலும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? பதில்: பீட்சா கார்னர் போவது பற்றி குழந்தைகள் பெருமையாகப் பேசிக் கொள்கின்றனர். இது போன்ற இயற்கை விவசாயத்திற்கு மத்தியில் தங்கும் வசதி இருப்பதால் இங்கு தங்கும் அவர்களால் விவசாயம் பற்றி உணர முடியும். இயற்கை விவசாயத்தை வளர்க்கும் உந்துதலும், அதனை வளர்ப்பவர்களிடம் இருந்து எதையும் வாங்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்படும். 8 ஏக்கரில் அழியும் தருவாயில் இருந்த அபூர்வ இயற்கைப் பொருட்களான ருத்ராட்சம், வில்வம், மூலிகை செடிகளை வளர்த்து வருகின்றோம். மழை நீர் சேமிப்பிற்கான கட்டமைப்பை உருவாக்கி உள்ளோம்.
இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்தால் நோயில்லா சமுதாயம் அமையும். அதற்கு நேரடி கொள்முதல் வாய்ப்பு மட்டுமே தீர்வாக அமையும். இவ்வாறு பிரியா வர்தீஷ் கூறினார்.
நேர்காணல்: கவிஞர் மணிபாரதி
*** பிரியா வர்தீஷ் தொடர்பு எண்கள்: +91-9600065864, +91-8903735864, +1-6302400550
varadheesh@gmail.com
Plumeria Eco Trails, Healthy Surroundings Address : Kodalangadu - Kamanur Rd Kamanur- 624 216. TAMILNADU.
|