|
||||||||
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு |
||||||||
![]() தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிராவின் ஆளுநராக 2024-ம் ஆண்டு ஜூலை 31 அன்று பதவியேற்றார். அதற்கு முன்பு, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகக் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார்.
அக்டோபர் 20, 1957 அன்று பிறந்த ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சுவயம் சேவகர் ஆகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1974-ம் ஆண்டு பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
1996-ம் ஆண்டில் தமிழக பாஜக செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 1998, 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவையிலிருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக. தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்தார். பாஜக தலைவராக இருந்த காலகட்டத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.
பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினராகவும், துணிநூல் தொடர்பான நிலைக் குழுவின் தலைவராகவும் இருந்தார். பாஜக தேசியச் செயலாளர், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கையைத் தாண்டி, ராதாகிருஷ்ணன் கல்லூரிக் காலத்தில் மேசை வரிப்பந்தாட்டத்தில் வாகையராகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்துள்ளார். துடுப்பாட்டம் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்தமான விளையாட்டுகள்.
கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முதல் மகாராஷ்டிர ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார்.
இந்தச் சூழலில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு, ‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 21-ம் தேதிக்குள் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். சி.பி.ராதாகிருஷ்ணன் 21-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.
தற்போது மக்களவையில் ஓர் நாடாளுமன்ற உறுப்பினர்.மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, வரும் தேர்தலில் 782 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற 50 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்களின். ஆதரவு தேவை. இதன்படி, 391 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் வேட்பாளர், புதிய குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.
நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 312 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், அந்தக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
|
||||||||
by hemavathi on 17 Aug 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|