LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 423 - அரசியல்

Next Kural >

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு. (குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்திநின்றது. மெய்யாதல் , நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.)
மணக்குடவர் உரை:
யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும் அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது. இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்டவற்றில் தெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும்-எப்பொருள் எவரெவர் சொல்லக் கேட்பினும்;அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் உண்மையான பொருளைக் காணவல்லது அறிவு. தேவிகம் (சாத்துவிகம்), மாந்திகம் (இராசதம்), பேயிகம் (தாமதம்) என்னும் முக்குணங்களும் பெரும்பாலர்க்கு மாறி மாறி வருவதால், நற்பொருள் பகைவர் வாயினும் தீப்பொருள் நண்பர் வாயினும், சிறந்த பொருள் இழிந்தோர் வாயினும் இழிந்தபொருள் சிறந்தோர் வாயினும், கேட்கப்படுதலால் , 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்குத்தொடர் பன்மைபற்றிவந்தது. வாய் என்பது சொல்லும் பொருட்கு ஏற்காமையுணர நின்றது. சொல்வாரை நோக்காது சொல்லும் பொருளையே நோக்கி, கொள்ளுவது அல்லது தள்ளுவது அறிவென்பதாம்.
கலைஞர் உரை:
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
Translation
Though things diverse from divers sages' lips we learn, 'Tis wisdom's part in each the true thing to discern.
Explanation
To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.
Transliteration
Epporul Yaaryaarvaaik Ketpinum Apporul Meypporul Kaanpa Tharivu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >