|
|||||
குழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் - விழியன் |
|||||
கையில் தாங்கு தாங்குவென தாங்கி குழந்தைகளை வளர்க்கின்றோம். ஹச் என்று தும்பியவுடன் மருத்துவர் வீட்டு வாசலில் நின்றுவிடுகின்றோம் அல்லது நாமாக உடனடியாக மருந்து மாத்திரைகளை கொடுத்துவிடுகின்றோம். ஏலகிரி மலைக்கிராமத்தில் அங்கேயே தங்கி பணி செய்யும் மருத்துவரிடம் இங்கே எப்படி குழந்தைகளை கொண்டு வருகின்றார்கள் என்றேன். நகரங்கள் அப்படி என்றால் இங்கே நடு இரவு 12 மணிக்கு தகவினை தட்டுவார்கள், குழந்தை துடிக்கின்றான் என்று. இங்கே தேவை ஒரு Balance. உடம்பில் பிரச்சனை என்றால் தானாக சரிசெய்துகொள்ளும் திறமை உடம்பிற்கு உள்ளது. ஆனால் இந்த immunity மற்றும் resistance தன்மையை உடனடி மருத்துவம் பார்த்து அடியோடு அழித்துவிடுகின்றோம். மருத்துவம் இல்லாமலே குணமாகிவிடும், அதற்காக மருத்துவரை பார்க்கவே வேண்டாம் என்று அர்த்தமில்லை, அவரை எப்போது பார்ப்பது என்பதில் புரிதல் வேண்டும். கையில் தாங்குவதால் உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கு பெரும் பாதகத்தினை குழந்தைகளுக்கு செய்துவருகின்றோம். கண்ணில் இருந்து கண்ணீர் வரக்கூடாது. என் குழந்தை அழக்கூடாது. என் குழந்தை தோற்கக்கூடாது என்ற எண்ணங்கள் வெகுவாக எல்லா பெற்றோர்களிடமும் இருக்கும். இதனால் என்ன நடக்கின்றது. கேட்டது உடனே கிடைக்கவேண்டும் என்ற மனப்போக்கு வந்துவிடுகின்றது. சக குழந்தைகளுடன் விளையாட விடுவதில்லை. பிஞ்சுகளின் கால்கள் மண்ணை தொட்டே மாமாங்கம் கடந்திருக்கும். பெருவாரியான இடங்களில் மண்ணை பார்க்க கூடா முடியாத அவலம். அப்படியே இருந்தாலும் விளையாட்டு என்பது இல்லை. இன்னொரு வருத்தமான விஷயமும் இருக்கின்றது. குழந்தைகள் ஒன்றாக கூடினால் அவர்களுக்கு தானாக விளையாட வருவதில்லை. தொலைக்காட்சி சம்பந்தமாகவே அவர்கள் விளையாட்டுகளை கட்டமைக்கின்றார்கள். பூங்காக்களில் விளையாடும் போது பெற்றோர்களின் கண் பார்வையிலேயே விளையாட வேண்டும். சருக்காமரத்தில் குழந்தை ஏறுவதற்கு அங்கே வந்து பெற்றோர்கள் ரெக்கமெண்டேஷன் கொடுப்பார்கள் அல்லது பெற்றோர்கள் உடன் வராத குழந்தைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு தன் குழந்தையை நீ விளையாடு என்பார்கள். குழந்தையை சுற்றி ஒரு கண்ணோ ஒரு கைப்பிடியோ இருந்துகொண்டே இருக்கின்றது. கீழே விழுந்துவிட்டால் உடனே இதுக்கு தான் சொன்னேன் இங்க எல்லாம் விளையாட வேண்டாம்னு. ஆனால் கடந்த தலைமுறையினரை யாரைக்கேட்டாலும் அவர்கள் யார் மேற் பார்வையிலும் விளையாடி இருக்க மாட்டார்கள். என்ன விளையாடினீர்கள் என்றாலும் தெரியாது ஆனால் காலை முதல் இருட்டும்வரை விளையாடி இருப்பார்கள். கீழே விழுந்தால் முட்டியில் எச்சில் தொட்டு போயிக்கிட்டே இருப்பார்கள். தோல்வியை சுவைக்கவே கற்றுத்தாருவதில்லை. வலியை அவர்கள் அண்டே விடுவதில்லை. செய்ற்கையாக வலியை கொடுக்கச்சொல்லவில்லை, செயற்கையாக தோல்விகளை சந்திக்கச் சொல்லவில்லை ஆனால் அவை நிகழும் போது அது வாழ்வில் ஒரு அங்கமென கற்றுத்தர வேண்டும். அல்லது அதனை கண்டும் காணாதது போலவும் இருந்துவிடலாம். விழுந்துவிட்டால், தட்டிவிட்டு ஓடு. தோல்வியை ஏற்றுக்கொள்ள கற்காவிட்டால் வாழ்வின் அடுத்த அடுத்த படிகளில் பெரும் சிரமங்களை சந்திப்பார்கள். நட்பு வட்டம் குறுக்கிக்கொண்டே இருக்கும். வாழ்கை என்பது வெற்றிகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டு இருக்காது, அது பெரும் திருப்பத்துடனும் அதிர்ச்சிகளுடன் நிரம்பியதாக இருக்கக்கூடும். நம் குழந்தைகள் வெற்றியையே சந்திக்க வேண்டும், மகிழ்வாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கும் அதே வேளையில் எதை வந்தாலும் சந்திக்கும் திறனையும் உள்ளே வளர்த்து இருக்க வேண்டுமல்லவா? - விழியன் |
|||||
by Swathi on 24 Mar 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|