LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 314 - துறவறவியல்

Next Kural >

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.)
மணக்குடவர் உரை:
இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் நெறி கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
இன்னா செய்தாரை ஒறுத்தல்- தமக்குத்தீயவை செய்தாரைத் துறந்தார் தண்டிக்கும் முறையாவது அவர் நாண நல் நயம் செய்து விடல்- அவர் வெட்குமாறு அவர்க்குப் பெரு நன்மைகளைச் செய்து அவ்விரண்டையும் மறந்து விடுதலாம். பிறர் செய்த தீமைகளையும் தாம் செய்த நன்மையையும் நினைப்பின் மீண்டுந் தளிர்க்கு மாதலின் முற்றும் மறக்கற் பாலன வாயின.
கலைஞர் உரை:
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
சாலமன் பாப்பையா உரை:
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தீங்கு செய்தவர்களை நல்லவர்கள் தண்டிப்பது எப்படி யென்றால், தீங்கு செய்தவர்கள் தாமாகவே வெட்கப்படும்படி அவர்களுக்கு நன்மை செய்துவிடுவது.
Translation
To punish wrong, with kindly benefits the doers ply; Thus shame their souls; but pass the ill unheeded by.
Explanation
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.
Transliteration
Innaasey Thaarai Oruththal Avarnaana Nannayanj Cheydhu Vital

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >