LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 849 - நட்பியல்

Next Kural >

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்:காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்; (புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொள்ளுதல் ஒருவாற்றானும் இயைவதன்று என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்: அவ்வறியாதவன் தான் அறிந்தபடியை அறிந்தானாயிருக்குமாதலான். இது கொண்டது விடாமை புல்லறி வென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
காணாதாற் காட்டுவான் தான் காணான்- தன்னைப் பேரறிவாளனாகக் கருதுவதால் பிறர் வாயிலாக ஒன்றறியுந் தன்மையில்லாத புல்லறிவாளனுக்கு அறிவு புகட்டப் புகுந்தவன் அவனாற் பழிக்கப்பட்டுத் தான் அறியாதவன் என்னும் நிலைமையையே அடைவன்; காணாதான் தான் கண்டவாறு கண்டான் ஆம்- அவ்வறியுந்தன்மை இல்லாதவனோ, தான் அறிந்தவகையே சரியென்று நம்புவதால் , இறுதியில் தான் முன்பு அறிந்தவாறே அறிந்தவனாக முடியும். புல்லறிவாளனுக்கு நல்லறிவு கொளுத்தும் வகை இல்லையென்றவாறு. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.
கலைஞர் உரை:
அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அற்ப புத்திக்காரன் ஒன்றும் அறியாத நல்லவர்களையும் கெடுத்து வைப்பான்.) நல்லறிவுகளைத் தானே அறியாதவனாகிய புல்லறிவாளன் அறியாத ஒருவனுக்கு அறிவு சொல்லுவது எப்படி முடியுமென்றால், ஒன்றும் அறியாத அந்த நிரபராதியும் இந்தப் புல்லறிவாளனைப் போன்ற அற்ப புத்திக்காரனாகவே மாறிவிடுவான்.
Translation
That man is blind to eyes that will not see who knowledge shows;- The blind man still in his blind fashion knows.
Explanation
One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit".
Transliteration
Kaanaadhaan Kaattuvaan Thaankaanaan Kaanaadhaan Kantaanaam Thaankanta Vaaru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >