மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக. (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக.
இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மிகுதியான் மிக்கவை செய்தாரை - செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரை ; தாம் தம் தகுதியான் வென்று விடல் - தாம் தம் பொறையினால் வென்று விடுக.
சரிக்குச் சரி தீங்கு செய்யும் இழுக்க வெற்றி ஒழுக்கத் தோல்வி யென்றும்; தீயவை செய்தாரைப் பொறுத்துக் கொள்ளும் ஒழுக்க வெற்றியே உண்மையான வெற்றி யென்றும் உணர்த்தற்குத் 'தகுதியான் வென்று விடல்' என்றார். 'விடல்' வியங்கோள் வினை.
கலைஞர் உரை:
ஆணவங்கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக்
குணத்தால் வென்று விடலாம்.
(பின் என் செய்வார்களென்றால்) கோப மிகுதியால் குற்றம் செய்து விட்டவர்களைப் பொறுமையுடையவர்கள் தாமாகவே அவர்களுக்கு உதவிகள் செய்து தம்முடைய பெருங் குணத்தால் அவர்களை வசப்படுத்தி விடுவார்கள்.
Translation
With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.
Explanation
Let a man by patience overcome those who through pride commit excesses.