நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாராகல் வேண்டும். (சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் துமமல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினை முடிவதுபோன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.)
(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தும்மல் சினைப்பது போன்று கெடும்-எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றி அடங்கி விடுகின்றது; நினைப்பவர் போன்று நினையார் கொல் - ஆதலால், காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாது விட்டுவிடுகின்றார் போலும்! வேற்றிடத்திலுள்ள அன்புகெழுமிய உறவினரால் நினைக்கப்பட்டவர்க்குத் தும்மலெழு மென்பது, பொதுவான உலகியற் கொள்கை. கணவன் மனைவியரினுஞ் சிறந்த வுறவின்மையால் , வினை பற்றிப் பிரிந்து வேற்று நாடுசென்ற கணவன் தன் மனைவியை நினைப்பது இயல்பே. ஆயின், இடைவிடாது வினை கெடுமாதலின், வினை முடிந்த பின்னரே மனைவியை நினைத்து மீளுவதாகக் கூறுவது புலனெறி வழக்கம். அதற்கேற்ப, தலைமகள் தனக்குத் தும்மல் தோன்றி யடங்கியதினின்று, தலைமகன் மேற்கொண்ட வினை முடிவது போன்று தோன்றி முடியாமையை யுணர்ந்தாளாகக் கொள்ளப்பெறும். சினைத்தல் - அரும்புதல். 'கொல்' ஐயம்.
கலைஞர் உரை:
வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?.
சாலமன் பாப்பையா உரை:
எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?.
Translation
A fit of sneezing threatened, but it passed away;
He seemed to think of me, but do his fancies stray?.
Explanation
I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.