LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 156 - இல்லறவியல்

Next Kural >

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம். [ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது]
மணக்குடவர் உரை:
ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம். இது புகழுண்டா மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளை யின்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் -ஆனால், அத்தீங்கைப் பொறுத்தார்க்கோ உலகம் அழியும்வரையும் புகழுண்டாம். 'ஒருநாளை யின்பம்' சரிக்குச் சரி செய்தேம் என்னும் பொந்திகை (திருப்தி). புகழ் உலகமுள்ள காலமெல்லாம் தொடருமாதலால் , பொன்றுதல் இங்கு உலகத்தின் தொழில்.
கலைஞர் உரை:
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால்) தீங்குக்குத் தீங்கு உடனே திருப்பிச் செய்து தண்டித்து விடுவதில் அப்போதைக்குத்தான் இன்பம் உண்டு. ஆனால் பொறுத்து மன்னித்து விடுவதில் சாகும் வரை பிறர் அதைப் புகழ்ந்து பேசும் இன்பம் உண்டு.
Translation
Who wreak their wrath have pleasure for a day; Who bear have praise till earth shall pass away.
Explanation
The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.
Transliteration
Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup Pondrun Thunaiyum Pukazh

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >