திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம். [ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது]
மணக்குடவர் உரை:
ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம்.
இது புகழுண்டா மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளை யின்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் -ஆனால், அத்தீங்கைப் பொறுத்தார்க்கோ உலகம் அழியும்வரையும் புகழுண்டாம்.
'ஒருநாளை யின்பம்' சரிக்குச் சரி செய்தேம் என்னும் பொந்திகை (திருப்தி). புகழ் உலகமுள்ள காலமெல்லாம் தொடருமாதலால் , பொன்றுதல் இங்கு உலகத்தின் தொழில்.
கலைஞர் உரை:
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த
ஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப்
பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக
அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால்) தீங்குக்குத் தீங்கு உடனே திருப்பிச் செய்து தண்டித்து விடுவதில் அப்போதைக்குத்தான் இன்பம் உண்டு. ஆனால் பொறுத்து மன்னித்து விடுவதில் சாகும் வரை பிறர் அதைப் புகழ்ந்து பேசும் இன்பம் உண்டு.
Translation
Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.
Explanation
The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.