திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று - அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று. (ஒட்டுதல் - பொருந்துதல். 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு, அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும் புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வாம்' என்பாரை நோக்கிக் கூறியது.)
மணக்குடவர் உரை:
ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் வாழ்க்கையின், அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒருவன் ஒட்டார் பின் சென்று வாழ்தலின் - ஒருவன் தன்னை யிகழ்வார் பின் சென்று அவர் தரும் பொருள் பெற்று அதனால் உயிர் வாழ்தலினும் ; அந் நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று- தான் பொருளற்ற அப்பொழுதே உயிர் துறந்தான் அல்லது இறந்தான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நன்றாகும். ஒட்டுதல் உள்ளத்தாற் பொருந்துதல். அந்நிலை யென்றது ஒட்டார்பின் செல்லாத முன்னை நிலையை. ஏகாரம் பிரி நிலை. புகழும் புத்தேணாடும் பெறாவிடினும் பொருள்பெற்று வாழலாமே யெனின், அங்ஙனம் மானங் கெட்டு வாழ்வதினும் மானங்காத்து மாள்வதே சிறந்த தென்றுகூறியவாறு.
கலைஞர் உரை:
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.
சாலமன் பாப்பையா உரை:
இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இகழ்வாரை வணங்கி வாழ்கின்ற மானங்கெட்டவரை விடப் பகைவர்களை வணங்கி உயிரை வைத்துக்கொண்டிருக்கிற மானங்கெட்டவர்களும் உண்டு. அவ்விதம்) ஒருவன் தன் பகைவருக்கு ஏவல் செய்து அவரிடம் வணங்கி வாழ்வதைவிட அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்ட உடனே இறந்து போவது நல்லது.
Translation
Better 'twere said, 'He's perished!' than to gain
The means to live, following in foeman's train.
Explanation
It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.